முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புள்ளகுட்டிகளோட பாருங்க!

மேற்குத்தொடர்ச்சிமலை. வார்த்தைகள்கூட பிரிக்க முடியாத மலைத்தொடர். மலை வீட்டில் காலை 4 மணிக்கு அலாரம்போல அம்மா எழுப்பிவிட, ரங்கு மழையில் முகம் கழுவும்போதே உள்ளே ஏதோ தளும்ப ஆரம்பிக்கிறது. 4 மணியிலிருந்து பொழுது விடிவதற்குள் அவன் சந்திக்கும் மனிதர்கள், காட்சிகள், சப்தங்கள் நம்மை வேறொரு உலகத்திற்குள் இழுக்கின்றன. ஒற்றையடிப்பாதைகளால் பிணைக்கப்பட்ட மலை எஸ்டேட் தேயிலைத்தோட்ட தினசரி வேலை, ஆபீஸ் வேலை போல 10 மணிக்கு தொடங்கி மாலை அந்தி சாய கரையேறுவதல்ல. கைரேகை தெரியாத இருளில் விழித்து கைரேகை தெரியாத நள்ளிரவிலும் நீளும் இவனது உழைப்பு. காணி நிலம் அவன் கனவு. திருமணம் கூட அதன் பின்புதான் என்ற வைராக்கியம். அவனிடம் மனதைக்கொடுத்த மாமன் மகள். அவள் திருமணத்திற்கான அவள் தகப்பனின் முயற்சி. அந்த முயற்சியில் இணையும் மலை மனிதர்கள், மனிதம் கசியும் இவர்களின் வாழ்வு, நம்பிக்கைகள் என விரியும் பெருமலைத்தொடரில் இனிய சகா ஒருவரின் ஏழ்மை காக்கும் குரல், அதை முடக்கத்துடிக்கும் மனிதர்கள், மலைத்தொடரை முடக்கத்துடிக்கும் 'வளர்ச்சி'... இதற்கு மேல் கதை தெரியாமல் படம் பார்ப்பதே இந்தப்படத்திற்கு

ஒவ்வொரு விள்ளலும் நானே

அள்ளி எடு. கிள்ளி எடு. சுரண்டி எடு. வழித்து எடு. உரித்து எடு. தருவேன், என் வேரில் ஈரம் வற்றும் வரை. தருவேன் அதன்பின்னும். இது மனிதக்காதலே அல்ல. பூக்களுக்கும் புழுக்களுக்கும் இடையில்தானே வாழ்வு ஊடாடுகிறது... மலர்வதனைத்தும் நானே. உதிர்வதனைத்தும் நானே. புழுவும்தான்...

காயம், மெய்!

காயம், மெய்! நீர்க்குடத்தில் மிதந்த துகள் காயம் பெற்று சுருண்டு காயம் கிழித்து வெளிவந்து காயம் உருண்டு புரண்டு தவழ்ந்து பற்றி நிமிர்ந்து காயம் நடந்து வளர்ந்து இன்னொரு காயம் பற்றி காயமும் காயமும் முட்டிமோதி இன்னொரு நீர்க்குடம் இன்னொரு துகள்... ... சிறு காயங்கள் சுமக்கும்  பெருங்காயமே உடல் என்பதாய்  வாழ்வு... கரைந்த போதில் கடல்சேர்ந்து கடலிலே கரைத்த பெருங்காயமாய் ... கரைந்து கரை சேரும்வரை  'கரையாது' மகிழ்ந்திருக்கவே பெருவிருப்பம்... ... காற்றடைத்த பை கரையாது. காற்றடைத்த பை, பொய். காயம், மெய்!

அதே அலுத்துப்போன சப்பாத்தி

தமிழகத்தில் ஒரு சிறு தன்னார்வக்குழு, வாய்ப்பு அறியா திறமைசாலி ஏழை மாணவ மாணவச்செல்வங்களுக்கு, நல்ல உயர்கல்வி (+2 முடித்தவுடன்) தகவல்களை கொண்டு சேர்த்து, விண்ணப்பங்கள் வாங்கித்தந்து, நிரப்பி, கல்லூரிகளில் நேரடியாக சேர்ப்பித்து, கல்லூரி தலைமையிடம் இவர்களுக்காக இறைந்து இலவசமாய் சீட்டு வாங்கி.  அந்த மாணவ, மாணவியரை கல்லூரிக்கு அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தி... என அவசியமான செயல்களை சத்தமின்றி செய்து வருகின்றனர். சற்று தினங்களுக்கு முன் ஒரு பெண் குழந்தையை மாலையில் கல்லூரிக்கு சேர்க்க அழைத்துச்சென்ற  ஆர்வலர்: 'சாப்ட்டியாம்மா?' பெண் குழந்தை : "ஓ, சாப்ட்டேனே" ஆ: 'என்ன சாப்பிட்டே?' பெ.கு: "ரெண்டு இட்லிண்ணா, காலைலயே சாப்ட்டேன்" ஆ: 'ஏன்மா, மத்யானம்?' பெ.கு: "ஸ்கூல் போகைல சத்துணவு கெடச்சது. இப்ப லீவ் விட்டாச்சா, அவ்ளோதான் தினம் தாத்தாவால குடுக்க முடியும்... நீங்க சாப்டீங்களாண்ணா?" ஆ: 'ஓ' பெ.கு: "என்ன சாப்பாடுண்ணா" ஆ: (அலுத்துப்போன சப்பாத்திம்மா என மனதில் நினைத்துக்கொண்டு) 'சப

நாடு சுதந்திரம் அடைய வாழ்த்துக்கள்!

இந்தக்கிழவன் சாதாரண ஆளில்லை! சுதந்திர நாடு என்றால் என்னங்க? விடுதலை அடைந்த நாள் சுதந்திர நாள் என்றால், விடுதலை அடைந்தவரெல்லாம் சுதந்திரமாக வாழும் நாடாச்சா அந்த நாள் முதல்? இல்லையே! தனி மனித சுதந்திரம் - அரசியலமைப்பினால் பாதுகாக்கப்பட்ட நீதித்துறை இதன் எல்லைகளை வகுக்கிறது. என் விரலை உன் மூக்கின் நுனி வரை நீட்ட எனக்கு சுதந்திரம் இருக்கிறது, தொடுவதற்கு உன் அனுமதி வேண்டியிருக்கிறது. அனுமதிப்பதும் அனுமதிக்காததும் உன் சுதந்திரம்; தனி மனித சுதந்திரம். நாட்டின் சுதந்திரம்? சுதந்திர நாடு? இதைப்பற்றி நமக்கு பலவித கருத்துகள் உண்டு; புவியியல், மொழி, இன, மத, அரசியல் சார்ந்த கருத்துக்கள், அவற்றில் தோய்ந்த கருத்துக்கள். சுதந்திரம் வாங்க சரியான நேரத்தில் சரியான இடத்தில் வினையூக்கியாக உப்பிட்ட ஒரு கிழவன், சுதந்திரத்தை இப்படி வரையறுக்கிறான்: 'என்று ஒரு பெண் நள்ளிரவில் அணிகலன்களுடன் பயமின்றி நம் சாலைகளில் தனியே நடமாடமுடிகிறதோ அன்றே நாம் சுதந்திரம் ஆனோம்'! இவன் சாதாரண ஆளில்லை, இவனது வரையறையும் நுனிப்புல் வகையில்லை; ஏன் பெண்? ஏன் நள்ளிரவு? ஏன் ந

என் விழித்திரையில் : விஸ்வரூபம் III

என் விழித்திரையில் : விஸ்வரூபம் பாகம் 3. இறந்துபோன ஓமரோட ரெண்டாவது பையன் ஜமால் படிச்சி டாக்டராகி பாகிஸ்தானுக்கே சேவை செய்ய வருகிறான். மூத்தவன் என்ஜினியராகி அமெரிக்க விமானப்படைக்கு அதி நவீன தொழில்நுட்பங்கள் செய்து தரும் பணியில் இருக்கிறான். இவங்க ரெண்டு பேரையும் யாருக்கும் தெரியாம இயக்குகிற Handler, நம்ம கஷ்மீரி (கமல்). அவரு இப்ப RAW (Research Analysis Wing) ல எல்லாரும் மரியாதையோடும் வியப்போடும் பார்க்கிற செயல் தலைவர். இவர்களது இலக்கு பாகிஸ்தான் அபோட்டாபாத்தில் தங்கியிருக்கும் ஷேக்கு (ஒசாமா பின் லாடன்). டாக்டர் ஓமரின் மகன் என்ற அடையாளத்தால் அல் கொய்தாவில் சுலபமாக முன்னேறி ஷேக்கின் தனி மருத்துவராகிறார். இவர் மூலம் கஷ்மீரி காய் நகர்த்தி ஒசாமாவை 'தீர்க்க' நாள் குறிக்கிறார்.  இன்ஜினியர் அண்ணன், பாகிஸ்தான் ரேடாரில் சிக்காத தொழில்நுட்பம் கண்டுபிடித்து அதை பயன்படுத்தி அமெரிக்க விமானப்படை கமாண்டோக்கள் பாகிஸ்தானின் வான் எல்லைக்குள் ரகசியமாய் நுழைய, ஷேக்கு சிக்கினாரா இல்லையா? கஷ்மீரியின் எதிர்காலம் என்ன ஆனது? (கிளைக்கதை: கஷ்மீரியின் புகழ் ஏற்கனவ

புகை கக்கும் க்ரெடிட் கார்டு!

புகை கக்கும் க்ரெடிட் கார்டு! வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகளின் கழுத்தைத்திருகி, 'மாசு படுத்தாதே! பூமிக்கு உங்கள் ஆலைகளில் பசியினால், கழிவினால் மூச்சு முட்டுகிறது!' என அன்பாய் வேண்ட, இந்த நாடுகள் ஈனஸ்வரத்தில் 'நீங்க வளர்ந்ததும் இப்படித்தானே' என பயந்து கேட்க, 'போனால் போகிறது; எந்த அளவு மாசு சேர்க்கிறீர்களோ அந்த அளவு காடு வளருங்கள். காடுகள் உங்கள் மாசை (கார்பன்) உண்ணும், புவி மகிழும் என சாசனம் எழுதினர். சங்கி மங்கி போல அழுவதற்கு கூட ஆள் வைத்திருக்கும் கூட்டமான நாம் (அதாவது, வளரும் நாடுகள்), 'நான் இங்கன எரிக்கறேன். நீ அங்கன ஏற்கனவே காடு வளத்திருக்க இல்லயா, அது சாப்பிடுற கார்பன நான் வெளியேத்தற கார்பன்லந்து கழிச்சிக்கலாம். அதுக்கு காசு தாறேன்' என அதையும் வணிகமாக்க, பிறந்தது, வளர்ந்தது கார்பன் க்ரெடிட் பெருவணிகம். சரி, மேட்டருக்கு வருவோம். "கலிபோர்னியாவில் 95 ஆயிரம் எக்டேர் காடுகள் காட்டுத்தீயில் பொசுங்கின' 'டாக்காவில் வெள்ளம், ஏராளமான சேதம்' 'இங்கிலாந்தில் வெள்ளம், ஏராளமான சேதம்' 'கேரளாவில் வெள்ளம், ந

தீர்ப்பு மணியை காணவில்லை!

"ஏகப்பட்ட கடன், நிரந்தர வருவாய் தரும் வேலை கிடைக்கல, தொழில் செய்ய முதலீடு கிடைக்கல. கூட்டுற, கழுவுற, அள்ளுற வேலைக்குதான் நாங்க லாயக்குன்னு இந்த சமூகம் எங்கள எட்ட நிறுத்தி வேடிக்க பாக்குது. நாங்களும் உங்க மதந்தான், உம்பட சாமிதான் எம்பட சாமியும் என்று இறைஞ்சி ஓய்ந்துவிட்டோம்" என சென்னை புறநகர் பகுதி குரல். "ஏகப்பட்ட கடன், நிரந்தர வருவாய் இல்ல, தொழில் முதலீடு சொந்தக்காரனே தரமாட்டேன்றான், நெசவு தொழில விடவேண்டியதாய்டுச்சு அம்பா" என்று மதுரை சௌராஷ்ட்ர குரல். திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை, குத்தாலம், கும்மோணம், பாண்டி, மேட்டுப்பாளையம், குன்னூர், தோவாளா, விழுப்புரம், கிணத்துக்கடவு... தமிழகம் தாண்டி எல்லா மாநிலங்களிலும் ஒலிக்கும் இந்தக்குரல், ஒரு உடல் தன் சில உறுப்புகளை ஒதுக்க முயல்வதால் எழும் அவலக்குரல். 'சில லட்சம் தரோம், பழைய கடன அடைங்க. புதுசா தொழில் செய்யவும் பணம் தாரோம். வேற்றுமைப்படுத்த மாட்டவே மாட்டோம்' என யாரேனும் சொன்னால் இவர்கள் என்ன செய்வார்கள்? நாம் இவர்களது சூழலில் இருந்தால் என்ன செய்வோம்? பிதா சுதன் பரிச

குவாட்டர்

ப்ராமின். குடித்திருந்தார். என்னெதிரில் தள்ளாடி நிமிர்ந்து, என் நண்பரிடம் 'எஸ்க்யூஸ் மி, ஒரு மூனு ரூபா சேஞ்ச் இருக்குமா, பஸ்சுக்கு அஞ்சு வேணும்', விரிந்த அவரது உள்ளங்கையில் 2 ரூபாய் காசு. என் நண்பர் சுவாரஸ்யமாகி பர்சை எடுத்து கிடைத்த சில்லறையை (7 ரூபாய்) அவர் கையில் தர, 'டோன்ட் மிஸ்டேக் மி. எனக்கு மூனு ரூபாதான் வேணும். உங்க பேரென்ன?' 'முருகன்' என்றார் நண்பர். அவரது கரத்தை கெட்டியாய் பற்றி 'முருகன்! சாட்சாத் பழனி முருகனேதான் உங்களை அனுப்பியிருக்கார். மூவேழு இருபத்தொரு ரூபா கொடுங்கோ' என்றார். திகைத்த முருகன் சுதாரித்துக்கொண்டு 'எதுக்காக ஸ்பெசிபிக்கா 21 ரூபான்னு தெரிஞ்சிக்க விரும்பறேன்' என்றார் தன் கையை மெல்ல விடுவித்து. 'ஐ கான்ட் ரிவீல் தேட். ஓகே, பை' என அந்த நபர் நகர்ந்து சென்றார். 'பிராமின்ஸ் எல்லாம்கூட இப்படி...' என்றார் முருகன். 'பாவம்' என்றார் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஒரு பெண். 'இந்த மாதிரி ஆளுக்கெல்லாம் எதுக்கு பாவம்ங்கிறீங்க?' என்றார் இன்னொரு பெண். 'அவர

சுயம்பு -500!

எந்த பின்புலமும் எந்தத்துறையிலும் இல்லாமல், ஒரு மனிதன், ஒரு தமிழன், தன் வாழ்நாளில் தொடக்கூடிய உச்சத்துக்கு இவரை கண்டிப்பாய் எடுத்துக்காட்டாக கூற முடியாது. ஏனெனில் இவர் உச்சத்தை தாண்டியவர். தனிப்பிறவி. பல துறைகளில் இவர் தொட்ட உயரங்களே வரும் தலைமுறைக்கு புதிய உச்சங்கள்! அவர் பயணம் செய்த குதிரை ஒவ்வொன்றும் ராட்சத உழைப்பை தீனியாக கேட்கும், அசந்தால் ஆளை விழுங்கி ஏப்பம் விடும்; ஆனால் இவர் அவை அனைத்தையும் தன் சுண்டி இழுக்கும் திறமையால் அடக்கி ஆண்டவர். திரை (கதை, திரைக்கதை, வசனம், நாயகர்கள்), பத்திரிகை, அரசியல், இலக்கியம் என இவர் தன் வாழ்வை செதுக்கியபோது உதிர்ந்த துகள்களும் புகழ் பெற்றன. கலைஞர் எனும் இயந்திரத்தின் சக்தியில் புகழ் வெளிச்சத்தின் இரு கண்களாய் சிவாஜியும், எம் ஜி ஆரும். தமிழகத்தின் தங்க தருணம், அரை நூற்றாண்டு,1950-2000 இந்த மும்மூர்த்திகளால் நகர்த்தப்பட்டது. இவர் தோளோடு தோளுரசிய புகழ் மனிதர்கள் ஏராளம், உலக அரங்கிலும்தான். இவரோடு மடிந்தது திராவிட ஜோதியின் பெருவிளக்கு. இதனின்று சிதறிய கங்குகள் சில காலம் கனன்று மறையலாம்; அதில் ஒன்று கூட ஒரு நூற்றாண்டு ஜோதி தராது... ஒரு

பொங்குமாங்கடல்

தேவதைகள் காதலிப்பதுண்டு. கையளவு மனசில் கடலளவு நேசம். அலையாடி கரைமோதி ததும்பி விழிவழியே. உப்பின் கரிப்பு சூரியன் சுட்டது, விழியின் கரிப்பு சொற்கள் சுட்டது. தேவதைகளும் அழுவதுண்டு. சுட்டது குளிரும் தழும்புகள் மறையும் நம்பிக்கை வளரும் அலை எழும்பும் அலை வீழும் அலை ஓயா. அலை அறிந்தது கடல் அறியுமா? என்னுள்ளே கடல். உன்னுள்ளே கடல். என் கடலெனது. உன் கடலுனது. அலையுரசும் விளிம்பில் நுரைகளின் தீண்டல். தீண்டி மீண்டு மீண்டதில் எதெனது எதுனது அலையறியா. நுரை மாறி நுரை மாறி அலை மாறி  அலை மாறி கடல் மாறி கடல் மாறி சுட்ட உப்பு எக்கடல் உப்பு? என்னுள்ளே கடல். உன்னுள்ளே கடல். என்னுப்பு எது? உன்னுப்பு எது? எது எதுவோ அது அதுவே. எதுவாயின் என்ன?

சுழலி!

#onemoresong ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள். பின்புலமும் ஓரளவு தெரியும். ஊர்ப்பெரிய மனிதர் மனதில், உருவத்தில்... மிகப்பெரியவர். வாழ்க்கைத்துணை துயராக மாற மனதில் வைத்துப் வெளியில் கண்ணியம் காப்பவர். பஞ்சம் பிழைக்க அந்த ஊரில் ஒதுங்கிய பரிசல்காரி, துடுப்பு போட்டு ஊர் திரும்புகையில் கரையருகில் பாடல் ஒன்று கேட்கிறது. சின்ன வயதுக்காரி. பாறையை நீர் அறுப்பது போன்ற மென்சோகத்துடன் பெரியவர் தன் வாழ்வைப்பற்றி 'எசப்பாட்டு' பாடிக்கொண்டே நடக்க, பாடல் வரிகளின் சோகம், பாடுபவரின் மேன்மை அறிந்த பரிசல்காரி, ஆறுதலாய் பதில் பாட்டு பாடத்தொடங்குகிறாள். பாடுவது யார் என அறியும் ஆவலில் பாடலை நிறுத்தாது தேடிக்கொண்டே பெரியவர் நடக்க, பரிசலில் பதில் பாட்டு ஊர்க்கரை நோக்கி நகர, 'பூங்குயில் யாரது?' என முகமறியும் ஆவலில் பெரியவரும் பாடல் வரியோடு பரிசல் கரை நோக்கி நகர, 'கொஞ்சம் பாருங்க, பெண்குயில் நானுங்க' என பதில் அவர் காதில் விழ, அவர் கண்ணில், பாடும் அவள் பட... இன்னதென்று சொல்ல இயலாத உணர்வுக்குவியலில் 'அடி நீதானா அந்தக்குயில்! தானாக வந்த குயில்! பறந்த்தே, உலகமே

அவரவர் விருப்பம்

உதிர்வதெல்லாம் முளைக்கும், ரோமம் தவிர! ஒரு உணவகம். அழகற்ற ஒரு பெண் பணியாளர் உணவு பறிமாறுகிறாள். உணவருந்த வந்த நபர் இருக்கையில் அமர டம்ளரில் நந்நீர் வைக்கிறாள். 'நன்றி' என்கிறார் அவர். பெண் முகத்தில் குழப்பம். 'என்ன சொன்னீங்க?' 'நன்றி சொன்னேம்மா'. ... அடுத்த இருபது நிமிடங்கள் அவள் இறகு முளைத்த தேவதையாய் மாறி அவரை தனி விருந்தினர்போல பார்த்துப்பார்த்து கவனிக்க வைத்தது அந்த ஒற்றைச்சொல், 'நன்றி'... 'நாம் மரங்களல்ல, உதிர்ப்பது முளைக்க' என்றுதானே எண்ணி 'மௌனமாய்' திரிகிறோம்... பெருந்தவறல்லவா அது! நாம் உதிர்ப்பது அனைத்தும் முளைக்கும், நம் ரோமம்  தவிர. வாழும் நொடியெலாம் ரோமமுதிர்க்கும் நாம், அவை உதிராதபோதும் நாமாக உதிர்க்கும் சொற்களும், நமக்குள்ளே உதிர்க்கும் எண்ணங்களும் முளைக்கும்! தழைக்கும்!! ஏனெனில் நிலம் என்றும் நந்நிலம்தான். விதை எவ்விதமோ, சுரை அவ்விதமே! மரங்களும் நாமும் எங்கு வேறுபடுகிறோம் தெரியுமா? மரங்கள் உதிர்ப்பவை (விதைகள்) மட்டுமே முளைக்கும். ஆனால் தேவையான நேரத்தில்,

அற்புதங்கள்!

Miracles / அற்புதங்கள், நம்மைச்சுற்றி கூடை கூடையாய் கொட்டிக்கிடக்குது காணும் இடமெல்லாம்... ஊசித்தும்பியின் 'ஊசி' உடம்புக்குள் இதயம், வயிறு, மூளை எல்லாம் யார் வைத்தது? இதைவிட பெரிய அற்புதம் யார் செய்வார்?! ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கையில், ஒரு சிறு குருவியையாவது காற்று தள்ளி வீழ்த்துவதை பார்த்திருப்போமா?! காற்றுக்கு மரங்கள் சாயலாம்; பறக்கும் இனம் போல அவற்றிற்கு இறகுகள் இல்லையே... சற்றுமுன் என் கண்ணெதிரே ஒரு மஞ்சள் வண்ணப்பூச்சி... ஆளைத்தள்ளும் காற்றில் 'அலையேறுதல்' (wind surfing) போல சரசரவென காற்றில் ஏறி, எதிர்த்திசையில் பறந்தது கண்டேன். அத்தனை சிறிய உடலுக்குள் இந்த வலு! எளிது போல தோன்றும் அதன் பறத்தலின் பின்னிருந்து இயக்குவது எது? ஆன்ம பலம் சிற்றுயிரையும் பேருயிராக்கும் அற்புதம் நம்மைச்சுற்றி நொடிதோறும்... நமக்குதான் காண / உணர நேரமின்றி 'அற்புத வாழ்வு வேண்டி' வேறெதையெல்லாமோ தேடி ஓடிக்கொண்டேயிழுக்கிறோம்... (நாம் இழுத்துக்கொண்டோடும் மயிலிறகு எடை ஆசைகள் கூட பீலி பெய் சாக்காடும் அச்சிறும் அப்பண்டம்தானே!). நகத்தளவு வண்டு, விரைந்து