முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அதே அலுத்துப்போன சப்பாத்தி


தமிழகத்தில் ஒரு சிறு தன்னார்வக்குழு, வாய்ப்பு அறியா திறமைசாலி ஏழை மாணவ மாணவச்செல்வங்களுக்கு, நல்ல உயர்கல்வி (+2 முடித்தவுடன்) தகவல்களை கொண்டு சேர்த்து, விண்ணப்பங்கள் வாங்கித்தந்து, நிரப்பி, கல்லூரிகளில் நேரடியாக சேர்ப்பித்து, கல்லூரி தலைமையிடம் இவர்களுக்காக இறைந்து இலவசமாய் சீட்டு வாங்கி.  அந்த மாணவ, மாணவியரை கல்லூரிக்கு அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தி... என அவசியமான செயல்களை சத்தமின்றி செய்து வருகின்றனர்.

சற்று தினங்களுக்கு முன் ஒரு பெண் குழந்தையை மாலையில் கல்லூரிக்கு சேர்க்க அழைத்துச்சென்ற 

ஆர்வலர்: 'சாப்ட்டியாம்மா?'

பெண் குழந்தை : "ஓ, சாப்ட்டேனே"

ஆ: 'என்ன சாப்பிட்டே?'

பெ.கு: "ரெண்டு இட்லிண்ணா, காலைலயே சாப்ட்டேன்"

ஆ: 'ஏன்மா, மத்யானம்?'

பெ.கு: "ஸ்கூல் போகைல சத்துணவு கெடச்சது. இப்ப லீவ் விட்டாச்சா, அவ்ளோதான் தினம் தாத்தாவால குடுக்க முடியும்...

நீங்க சாப்டீங்களாண்ணா?"

ஆ: 'ஓ'

பெ.கு: "என்ன சாப்பாடுண்ணா"

ஆ: (அலுத்துப்போன சப்பாத்திம்மா என மனதில் நினைத்துக்கொண்டு) 'சப்பாத்திம்மா'

பெ.கு: "ஹையா, ஒம்பது மாசத்துக்கு முன்ன ஒரு கல்யாண ரிசப்ஷன்ல சாப்டதுண்ணா!"

70 ஆண்டு சுதந்திரம், ஆட்சி மாற்றங்கள், பொருளாதாரம் உலகமயமாகி கணிப்பொறி வந்து ஜிடிபி வளர்ந்து நம் நாடு உலகப்பேராசைபெருவணிக சங்கிலியில் முதன்மையான கண்ணியாக மாறிப்போய் நாம் இந்தியன்டா என மார்தட்டி, குளிரான உணவகத்தில் பாதி உணவை ஒதுக்கி அவசரமாய் டிப்ஸ் தந்து வெளியேறி விரைந்து செவ்வாய்க்கும் சந்திரனுக்கும் பாலம் கட்டுவதில் மும்முரமாயிருப்பதால், பசியடைத்த இந்தக்குழந்தையின் வியப்பு நம் செவிளில் அறையும் ஓசை, கேட்குமா என்ன?

உன் கண்ணில் நீர் வழிந்தால், என்னெஞ்சில் உதிரம் கொட்டுதடி...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...