முந்தைய வருடம்தான் விபத்தொன்றில் பெற்றோரை இழந்திருந்தான். அவர்களைத்தவிர அந்த தொலைதூர பூமியில் அவனுக்கு உறவென யாருமில்லை, நாய் / பூனை வளர்ப்பதில் அவனுக்கு ஆர்வமுமில்லை.
நிலவின் வீச்சு மெல்ல மெல்ல கூடத்தொடங்கியது. நதிக்காற்றின் குளிரும் கூடியது. நேரம் கடந்தது பற்றிய உணர்வின்றி அப்பறவையையே பார்த்துக்கொண்டிருந்தான்.
பின்னிரவு நேரத்தின் ஏதோ ஒரு நொடியில் பறவையின் இசைக்குரல் தாலாட்டில் சற்று கண்ணயர்ந்தான்.
விழித்து நோக்குகையில் மேசையில் பறவையில்லை. அது அமர்ந்திருந்த இடத்தில் அது இட்டுச்சென்றிருந்த எச்சம் மட்டும் நிலவில் ஒளிர்ந்தது.
அவன் ஒரு ஒளிப்படக்கலைஞன். தனது ஒளிப்பட கருவியின் வழியே அந்த எச்சத்தை படமாக பதிவு செய்துகொண்டான். பின்னர், யாருமற்ற தன் வீட்டை நோக்கி, யாருக்காக போவது என சிந்தித்தவண்ணம் பின்னிரவின் நிலவொளியில் நனைந்தபடி மெல்ல, மிக மெல்ல நடந்தான். வீடடைந்தான், தனது ஒலிப்பதிவுக்கருவியில் பதிவு செய்திருந்த பறவையின் கானத்தை ஒலிக்கவிட்டு... எப்பொழுது என அறியாமலே உறங்கிப்போனான். அதுபோன்றதொரு ஆழ்ந்த உறக்கம் அவனது பிள்ளைப்பருவத்திற்கு பிறகு அன்றுதான் வாய்த்தது.
பறவையின் கானம் மனதெங்கும் எதிரொலிக்க, ஒளிப்பதிவுக்கருவியை இயக்கி அந்த பறவையெச்ச படத்தை உற்றுநோக்கினான். அது ஒழுங்கற்ற ஒரு சிதறலாக இல்லாமல் ஏதோவொரு வரைபடம் போல தோன்றியது. அதை தனது மடிக்கணணியில் பதிவேற்றி, செயற்கை நுண்ணறிவு மென்பொருள் கொண்டு ஆராய்ந்தான்.
'இந்த நிலப்பரப்பு பற்றிய தகவல்கள் வேண்டுமா?' என்கிற வினாவுடன் அந்த மென்பொருள் திரையில் காட்டியது ஒரு நிலத்தின் பெயருடன் கூடிய புவியியல் வரைபடம்! அவன் இருக்கும் இடத்திலிருந்து பல்லாயிரம் மைல்கள் தொலைவில் இருக்கும் ஒரு நிலம்; அவன் கேள்விப்பட்டிராத நிலம்!
ஏதோ நினைவு உந்த, அவன் தனது அப்பாவின் அறைக்குள் நுழைந்தான்.
அவர் தனது இறுதி நாட்களில் கரும் பச்சை நிற அட்டை அணிந்த குறிப்பேடு ஒன்றை பல முறை புரட்டிப்பார்ப்பதும், பின்னர் கண்கள் நிலை குத்த கிழக்கு திசை நோக்கி சில மணி நேரம் தனித்து அமர்ந்திருந்ததையும் அவனது நினைவில் வந்து போனது.
பரபரப்பான வாழ்வு ஓட்டத்தில் 'அவர் ஏன் அப்படி அமர்ந்திருந்தார்? அந்த குறிப்பேட்டில் அப்படி என்ன இருந்தது?' என ஒரு முறை கூட அவன் நின்று கேட்டதில்லை, உரையாடியதும் இல்லை என்கிற நினைப்பு கண்களில் ஈரமாய் படர, அவரது மேசையின் மூலையில் பல புத்தகங்களுக்கு அடியில் இருந்த அந்த குறிப்பேட்டை தேடி எடுத்தான்.
தொடரும்.

இதோ இங்கே அதே பரபரப்பை படபடப்பினை நானும் உணர்கிறேன்... சீக்கிரம் குறிப்பினை காண வேண்டும் 😀
பதிலளிநீக்கு