கடினமான மலை முகட்டின் மீது ஏறி நின்றான்.
காலடியில் கோடிக்கணக்கான வருடங்களாக இயற்கை உருவாக்கியிருந்த பாறைகள் இருள் நிலவில் பளபளத்தன.
பாறைகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மனித காலடிச்சுவடுகள் கண்டான்.
'நமக்கு முன்னே எத்தனை எத்தனை பேரை தாங்கியிருக்கும் இந்தப்பாறை!' என வியந்தான்.
மலை முகடு முடியும் சரிவில் இருந்து தொடங்கிய கானகத்தின் கனத்த இருள் நிலவு வெளிச்சத்தைக்கூட உள்நுழைய விடாத அளவு காட்டின் மீது கவிழ்ந்திருந்தது.
ஓசையற்ற இரவை துளைப்பது போல அவ்வப்போது பறவைகளின் ஓசை, விலங்குகளின் ஓசை எழும்பி அடங்கியது. கடலில் அலை போல கானக இருளில் ஓசைகள் என எண்ணி ஓசையின்றி நகைத்தான்.
எதற்காக இங்கு வந்திருக்கிறான்? என்ன வேண்டும் அவனுக்கு?
பல ஆயிரம் மைல்கள் தாண்டிய நிலப்பரப்பொன்றில் பல்லாண்டு அமைதியாக வாழ்ந்தவன், பெரிய விருப்பங்கள் எதுவுமில்லாது நாட்களை கழித்தவன், எப்படி இங்கு வந்தான்?
அந்த நிலத்தில் ஒரு கடுமையான பனிப்பொழிவு தின நிலவு இரவில் ஆட்களற்ற ஒரு நதிக்கரையில் தன்னோடு தானே உணவு அருந்திக்கொண்டிருந்தவனுக்கு இதுபோன்ற ஒரு கானகப்பரப்பு இருப்பது பற்றியோ அதில் அவன் தேடவேண்டியவை பற்றியோ எவ்வித உணர்வும் அப்போது இல்லை.
நிலவோடு தனித்து உரையாடியவண்ணம் உணவு அருந்துகையில் கருநீல வண்ண வால் கொண்ட பொன் கழுத்து சிறு பறவை ஒன்று எங்கிருந்தோ பறந்து வந்து அவனிருந்த மேசையில் அமர்ந்தது.
நெடுநாட்கள் நெடுந்தொலைவு கடந்து வந்திருக்கவேண்டுமென அவனது உள்ளுணர்வு சொல்ல, கவனிக்கத்தொடங்கினான்.
அமைதியாய் அவனருகில் அமர்ந்திருந்த சிறு பறவை அதியற்புத குரலில் மெல்லிய இசை ஒலியொன்றை விட்டு விட்டு எழுப்பியது.
உணவு கேட்டு பாடுகிறதோ என எண்ணி தன் உணவில் சில துணுக்குகளை மெல்ல அதனருகில் அவன் உதிர்த்தபோது அப்பறவை அதிரவுமில்லை, பறக்கவுமில்லை, உணவை அலகினால் சுவைக்கவுமில்லை. அது ஒலியெழுப்புவதில் மட்டுமே முனைப்பாக இருந்தது.
நேரம் செல்லச்செல்ல அதன் இசையொலியில் ஒரு மென்சோகம் ஊறியிருப்பது போன்றதொரு உணர்வு, ஏன் தோன்றியதென்று அவனுக்கு தெரியவில்லை. தனது அங்கியின் பையொன்றிலிருந்து சிறிய ஒலிப்பதிவுக்கருவியை எடுத்து மேசையில் வைத்து அப்பறவையின் கானத்தை பதிவு செய்யும் ஆவலில் பொத்தானை அழுத்தினான்.

கானகம் கனவில் கண்டு நானும் காத்திருக்கிறேன். 😀
பதிலளிநீக்கு