மேம்பாலத்தை அணுகும் இருபுற பள்ளமான சாலைகளிலும் பச்சையும் பழுப்புமாய் அறுவடையான பயிரை தினமும் காலையில் பரப்பி பின்மாலையில் சேகரித்து, அதுவரையில் காவல் காத்து என இயங்கும் பலப்பல மனிதர்களையும் நம் தின வாழ்வில் நாம் சந்திக்க நேர்வதில்லை.
தம்முடைய துண்டு நிலங்களில் எள்ளு விதைத்து பாடுபட்டு பயிராக்கி அறுவடை செய்து, உலர்த்த இடமின்றி (உலர்த்தினால்தான் எள்ளு விதைகள் காய்ந்து வெடித்து தரையிறங்கும்) சாலையில் காயவைத்து, உதிர்ந்து உலர்ந்த எள்ளை சேகரித்து மூட்டை கட்டி, எந்த வணிகன் என்ன விலைக்கு கேட்டாலும் உடனே விற்று பயிர்க்கடனை அடைக்க தவிக்கும் இந்த மனிதர்கள் விளைவித்த எள்ளுதான் இந்த புழுதிச்சாலைகளில் இருந்து வண்டியேறி ஆலையில் அரைபட்டு புட்டியில் அடைபட்டு பளிச்சிடும் அங்காடி தட்டுகளி்ல் பல மடங்கு உயர்ந்த விலையில் நம்மை வசீகரிக்கும். எள்ளு மட்டுமல்ல, பலப்பல சிறுதானியங்களும் இதே முறையில்தான் நம் தேசிய நெடுஞ்சாலைகளில் காய்கின்றன.
ஆனால் ஒரு பெருந்துயரம் என்னவென்றால் நம்மில் அநேகர் இந்த உணவுப்பொருட்களை சீந்துவதே இல்லை!
வேறொரு சாலையில் வேறொரு காட்சி. ஒரு சிற்றூரை ஊடறுத்து நெளியும் குறுகிய தார் சாலை. ஒரு புறம் கால்வாயில் நிறை நீர். இரு புறமும் நெல் வயல். சாலையோரம் சைடு ஸ்டாண்டில் நிற்கும் இருசக்கர வாகனம், இருபுறமும் கூடுதலாய் மேலும் இரு சக்கரங்கள். சற்று தொலைவில் அசையும் புதரிலிருந்து மூலிகைகளை ஒரு கையில் சுமந்து, மறு கையையும் இரு கால் முட்டிகளையும் தரையில் மெல்ல மாற்றி மாற்றி ஊன்றி, ஒருவர் அந்த வாகனத்தை நோக்கி குழந்தை போல தவழ்ந்து பயணிக்கிறார். உச்சியில் சூடு தெரிக்கும் சூரிய வெப்பம் அவர் கரம் வழியே, கால் முட்டிகள் வழியே, உடல் வழியே உள்ளிறங்கிக்கொண்டே இருக்கிறது...
இந்த வாழ்வு மகத்தானது, நாம் இருக்கும் நிலை எதுவாயினும், நம் துயர் எதுவாயினும் என இப்படி அன்றாட வாழ்வின் எளிய மனிதர்கள் நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கிறார்கள்.
எளிய மனிதர்கள் ஒருபோதும் அறம் பிறழ்வதில்லை என்பது இந்த மகத்தான தன்மையை மேலும் ஒளிரவைக்கிறது, வாழ்வு மீதான நம்பிக்கையை மென்மேலும் வளர்க்கிறது, பல லட்ச ரூபாய் பணமுள்ள பையை சாலையில் கண்டெடுத்தவுடன் விரைந்து சென்று காவல் நிலையத்தில் சேர்த்து, உரியவருக்கு கிடைக்கச்செய்த அந்த தினக்கூலி வேலை செய்து பிழைக்கும் ஒரு சகோதரி போல.
பேரன்புடன்,
பாபுஜி

கருத்துகள்
கருத்துரையிடுக