முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தலைப்பில்லா பதிவு!


தேசிய நெடுஞ்சாலை ஒன்றின் மேம்பாலம் மீது விரையும் வாகனங்களுக்கு அந்த காட்சியை பார்க்கும் வாய்ப்பு இல்லை.


மேம்பாலத்தை அணுகும் இருபுற பள்ளமான சாலைகளிலும் பச்சையும் பழுப்புமாய் அறுவடையான பயிரை தினமும் காலையில் பரப்பி பின்மாலையில் சேகரித்து, அதுவரையில் காவல் காத்து என இயங்கும் பலப்பல மனிதர்களையும் நம் தின வாழ்வில் நாம் சந்திக்க நேர்வதில்லை.


தம்முடைய துண்டு நிலங்களில் எள்ளு விதைத்து பாடுபட்டு பயிராக்கி அறுவடை செய்து, உலர்த்த இடமின்றி (உலர்த்தினால்தான் எள்ளு விதைகள் காய்ந்து வெடித்து தரையிறங்கும்) சாலையில் காயவைத்து, உதிர்ந்து உலர்ந்த எள்ளை சேகரித்து மூட்டை கட்டி, எந்த வணிகன் என்ன விலைக்கு கேட்டாலும் உடனே விற்று பயிர்க்கடனை அடைக்க தவிக்கும் இந்த மனிதர்கள் விளைவித்த எள்ளுதான் இந்த புழுதிச்சாலைகளில் இருந்து வண்டியேறி ஆலையில் அரைபட்டு புட்டியில் அடைபட்டு பளிச்சிடும் அங்காடி தட்டுகளி்ல் பல மடங்கு உயர்ந்த விலையில் நம்மை வசீகரிக்கும். எள்ளு மட்டுமல்ல, பலப்பல சிறுதானியங்களும் இதே முறையில்தான் நம் தேசிய நெடுஞ்சாலைகளில் காய்கின்றன.


ஆனால் ஒரு பெருந்துயரம் என்னவென்றால் நம்மில் அநேகர் இந்த உணவுப்பொருட்களை சீந்துவதே இல்லை!


வேறொரு சாலையில் வேறொரு காட்சி. ஒரு சிற்றூரை ஊடறுத்து நெளியும் குறுகிய தார் சாலை. ஒரு புறம் கால்வாயில் நிறை நீர். இரு புறமும் நெல் வயல். சாலையோரம் சைடு ஸ்டாண்டில் நிற்கும் இருசக்கர வாகனம், இருபுறமும் கூடுதலாய் மேலும் இரு சக்கரங்கள். சற்று தொலைவில் அசையும் புதரிலிருந்து மூலிகைகளை ஒரு கையில் சுமந்து, மறு கையையும் இரு கால் முட்டிகளையும் தரையில் மெல்ல மாற்றி மாற்றி ஊன்றி, ஒருவர் அந்த வாகனத்தை நோக்கி குழந்தை போல தவழ்ந்து பயணிக்கிறார். உச்சியில் சூடு தெரிக்கும் சூரிய வெப்பம் அவர் கரம் வழியே, கால் முட்டிகள் வழியே, உடல் வழியே உள்ளிறங்கிக்கொண்டே இருக்கிறது...


இந்த வாழ்வு மகத்தானது, நாம் இருக்கும் நிலை எதுவாயினும், நம் துயர் எதுவாயினும் என இப்படி அன்றாட வாழ்வின் எளிய மனிதர்கள் நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கிறார்கள்.


எளிய மனிதர்கள் ஒருபோதும் அறம் பிறழ்வதில்லை என்பது இந்த மகத்தான தன்மையை மேலும் ஒளிரவைக்கிறது, வாழ்வு மீதான நம்பிக்கையை மென்மேலும் வளர்க்கிறது, பல லட்ச ரூபாய் பணமுள்ள பையை சாலையில் கண்டெடுத்தவுடன் விரைந்து சென்று காவல் நிலையத்தில் சேர்த்து, உரியவருக்கு கிடைக்கச்செய்த அந்த தினக்கூலி வேலை செய்து பிழைக்கும் ஒரு சகோதரி போல.


பேரன்புடன்,

பாபுஜி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...