காலை செய்தித்தாளை அவசரமாய் புரட்டிப்படித்த ஆனிக்காற்று, வாசித்த செய்திகளின் தாக்கத்தால் சித்தம் கலங்கி எங்கெங்கோ சுற்றி அலைந்துகொண்டிருக்கிறது இப்போது வரை.
இப்போது மட்டுமல்ல, எப்போதுமே அப்படித்தானாம்.
காற்று காணாதா போரா, வன்முறையா, கோரமா, சோகமா, கோபமா, அழுகையா, ஓலமா? ஆனாலும் அவற்றையெல்லாம் மறுபடி மறுபடி அச்சில் படிக்கும் சோகம் அதனை கனத்த போர்வையாய் கவ்வும்.
இன்னும் எத்தனை தலைமுறைகளுக்குதான் இந்த மனிதர்கள் இங்கே இப்படி என நொந்துபோய் சற்றே இளைப்பாற தவிக்கும் காற்றுக்கு இப்போதெல்லாம் மரங்கள் கூட இல்லை மனிதர்கள் உலகில்.
காற்று காணாத செய்திகளையா தாள்கள் மனிதரிடம் கொண்டுசேர்க்க முடியும்?
செய்தித்தாள்களின் தலைப்புச்செய்திகளை மிஞ்சுமளவு காற்றின் குரல் ரகசியம் பேசும், கொஞ்சும், குழையும், ஓங்காரமிடும், ரீங்காரமிடும், கேட்க விரும்பும் செவிகளில் எல்லாம்.
கேட்பவர்கள்தான் அதிகமில்லை இங்கு.
தப்பித்தவறி செவி வழி நுழைந்த காற்றின் குரலும் மனித இதயங்களில் புதைந்துபோகும், நாசிகள் கூட அடைபட்டுப்போன உலகில். மனிதர்கள் துளையாத மூங்கிலா என்ன காற்று வழிந்தோட!
உறங்கும் மனிதர்கள் அனிச்சையாய் எழுப்பும் ஒலிகளில் மட்டுமே விடுபடும் காற்று அவ்வப்போது நதிகளின் ஆழத்தில் சன்னமாய் விசும்பும், மலை முகடுகளில் இருந்து ஓவென்று இரைந்து தரைபாயும், கடல் சேரும், கடலின் மடியில் அலையாய் புரளும், அதன் கண்ணீர் தண்ணீர் பரப்பின் மீது விள்ளலாய் மேலேறி விழுமுன் கரைந்துபோகும், மறுபடி காற்றாகும்...
ஒரு நாள் காற்று நீதி பெறும்.
ஒரு நாள் காற்று நீதி தரும்
திருநாள் நிகழும் சேதி தரும்.
அன்றேனும் காற்றுக்கு உரக்கம் கிட்டுமா?
காற்றுக்கு உருவமில்லை. அதை காணாதோர் எவருமில்லை. இதை நான் உனக்கு எப்படி சொல்வேன்? இந்த கவிதை மட்டும் அதற்கு போதுமா என்ன?
பேரன்புடன்,
பாபுஜி
PC: Royal Meteorological Society
கருத்துகள்
கருத்துரையிடுக