நதியில் விளையாடி கொடியில் தலைசீவி என என் இரு தமக்கையரோடு உன்னத வாழ்க்கை. எங்கள் ராஜியத்தில் 'குறையொன்றுமில்லை' என மக்கள் புகழ் எம் தந்தையின் ஆட்சி. பதின்ம வயதில் நாங்கள் மூவர். நான் கடைக்குட்டி. எனக்குள் காதல் எட்டிப்பார்த்த பருவம்.
எல்லாமே மாறிப்போச்சி ஒரு நாளில்.
நிகரற்ற வீரனொருவன் வருகிறான் என விழாக்கோலம் எங்கெங்கும்.
வந்தவன் வீரன்தான், மாவீரனாயும் இருக்கலாம். மணம் பேச வந்ததாய் சேதி. அவனுக்கல்ல, அவனது தகப்பனின் இன்னொரு மகனுக்காம்.
எங்கு எது தப்பாச்சு என அறியுமுன்னே போர் முழக்கம். விரைந்து எங்கள் நாட்டைவிட்டு வெளியே இழுத்துச்செல்லப்பட்ட தேரில் நாங்கள் மூவரும் அடைபட்டிருந்தோம். சிறைப்பட்டிருந்தோம்.
சினத்தில் சிவந்து, தேர் ஓட்டிய மாவீரனை கேள்விகளால் துளைத்தேன்.
'ஏன் மூவர்?'
"அவனுக்கு உங்களில் யார் வேண்டும் என நான் அறியேன். மூவரையும் மணந்தாலும் சரியே என்பதால்..." என்றது வீரம்.
'நான் மனதால் முன்னரே மணமானவள். என்னை என் காதலனிடமிருந்து பிரிக்காதே, விட்டுவிடு' என இறைஞ்சினேன். கங்கை மைந்தனின் காதில் ஏறவில்லையே.
பின்னால் புழுதிப்படலம். தன் சிறு படை கொண்டு என்னவன் எனை மீட்க...
மாவீரன் வென்றான். என் காதலன் நிலம் நோக்கி பின் சென்றான்.
வேற்றூரில் அந்த அரசன், என் தமக்கைகள் இருவரையும் மணந்தான். எனை விடுத்தான்.
'என்னூரில், என் இணையிடம் இப்போதாவது எனை திருப்பிவிடு' என இறைஞ்சினேன் மாவீரனிடம், மறுபடியும்.
'வேறென்ன செய்வது' என அவனும் இசைந்தான்.
'போரில் தோற்ற ஒன்றை திரும்பப்பெறுவது சத்ரியனுக்கு அழகல்ல' என தோற்றவன், என் காதலன், எனை ஏற்க மறுத்தான்.
அபலையாய் நான்...
'மாவீரா, மானமுடன் நான் வாழ நீயேனும் மாலையிடு. நீ துவக்கி வைத்த தவறை நீயே சரி செய்' என வேறு வழியின்றி கதறினேன்.
"தந்தைக்கு நான் தந்த வாக்கு... நான் ப்ரம்மச்சாரி. நிலைமாற மாட்டேன். போகிறேன்" போய்விட்டான், எனை தனியே நடுச்சந்தியில் விட்டு.
கையறு நிலையிலும் தெய்வம் உதவும் என இறைதவம் துவங்கினேன். கடுந்தவம். இறை நெகிழ்ந்து அருள் தந்தது.
"வேண்டுவது என்ன?" என இறை விளிக்க,
'பீஷ்மன் சாவு, என் கையால்' என்றேன்.
'நடக்கும், அடுத்த பிறவியில்' என இறை வாழ்த்தி மறைய, அடுத்த பிறவிக்கு காத்திருக்க விருப்பமின்றி நொடியில் மாய்த்தேன் எனதுயிரை.
மீண்டும் உயிர்த்தேன், ஆணென எண்ணி பார்ப்பவர்க்கு ஆணாகவும், பெண்ணென எண்ணி பார்ப்பவர்க்கு பெண்ணாகவும் தோன்றும் விசித்திர மானுடமாய்.
விடாது வில்வித்தை பயின்றேன். தவம் புரிந்தேன், வில்லொன்று இறை தந்தது.
பெரும்போர் துவங்கியது. களம் இறங்கினேன்.
உங்களைப்பொருத்தவரை இந்தப்போர் ஐவரின் மனைவியை நூற்றுவர் தலைவன் மானபங்கப்படுத்தியதால் விளைந்தது.
ஆனால் உண்மை என்ன தெரியுமா?
இந்தப்போரை இறை தொடக்கிவைத்தது, பிறவிகளின் ஊடாக மானபங்கப்பட்டு அலையும் என் வேண்டுதலை நிறைவேற்ற மட்டுமே!!
சிகண்டி எனது பெயர். பீஷ்மன் என் இலக்கு. அவன் சாவு என் கையில். சொல்லி அனுப்புகிறேன், கொண்டாட வந்து சேருங்கள்.


கருத்துகள்
கருத்துரையிடுக