செங்குருதி மரம் (Dogwood Tree)
--------------------------+--------------------------
பெருங்காடொன்றில் மகிழ்வாய் பூச்சூடி நின்றிருந்தேன் பலகாலம்.
கோடரியோடு மனிதனொருவன் ஒரு நாள் வரும்வரை.
'நிழல் வேண்டுமா?' என்றேன்.
'நீதான் வேண்டும்' என்றான்...
ஓட முடியுமா என்ன, என்னால்?
'ஏன் நான்?' என்றேன்.
'ஒரு நாள் சரியப்போகும் நீ, அதன்பின் எதுவாகப்போகிறாய் என்பது உனக்குத்தெரியாது. ஆனால் இருக்கும்போதே எதுவாகப்போகிறாய் என நீ தெரிந்துகொள்ள இறை சித்தம். தயாரா?' என்றான்.
என்னுள்ளே இறையூற்று ஒன்று திறந்தது. சம்மதித்தேன்.
'காலம் உள்ள வரை நீ இருப்பாய், சாகா வரம் பெற்றாய்' என வாழ்த்திக்கொண்டே என் வேர்களை வெட்டி என்னை வீழ்த்தினான்.
வலி பொறுத்து கவனித்தேன். என்னை வண்டியிலேற்றி கானக எல்லையில் சேர்த்தான். இறையூற்று என்னை சாகாமல் காக்க, வரம் பெற்ற மகிழ்வோடு ஒத்துழைத்தேன், இழைத்த இழைப்புக்கெல்லாம்.
எப்பொழுது கண்ணயர்ந்தேன் எனத்தெரியவில்லை. யாரோ என்னை நகர்த்திய உணர்வில் கண் விழித்தேன்...
காது கிழியும் இரைச்சல், நடு வீதியில் நான், யாரோ சுமக்க ஊரார் சிலர் ஓலமிட்டு அழ, பலரோ துள்ளிக்குதித்து என்னைச்சுற்றி எள்ளி நகையாட... என்ன நடக்கிறது என சுத்தமாய் புரியவில்லை. பறவைகளின், விலங்குகளின் நட்புக்குரல் மட்டுமே கேட்டிருந்த எனக்கு 'ஏதோ தவறாச்சு' என்று மட்டும் புரிந்தது, மனம் கனத்தது.
கனம் தாங்க இயலாமல் எனைச்சுமந்தவன் தள்ளாடி விழ, மேலும் குழப்பம், கூக்குரல். எதிர்வழி வந்த ஒருவனை சிலர் நிறுத்தி, விழுந்தவன் சுமையை முட்டுக்கொடுக்கவைத்தனர். பயணம் தொடர்ந்தது...
கூக்குரல் ஓலம் உச்சம்தொட, ஓரிடத்தில் நிறுத்தப்பட்டேன், உயர்த்தப்பட்டேன், மீண்டும் நடப்பட்டேன், வேரற்ற போதிலும்.
தள்ளாடி எனை சுமந்தவனும் உயர்த்தப்பட்டான், என்னோடு சேர்க்கப்பட்டான், உயரத்திலிருந்து விழாமல் இருக்க கைகளிலும் கால்களிலும் ஆணிகளால் 'காக்கப்பட்டான்'.
கூர் ஆணிகளிட்ட துளைகள் வழியே என்னுள் இறங்கியது சொட்டுச்சொட்டாய் அவன் குருதி.
'பாவம் அவர்கள். தன் செயலின் தீவிரம் தெரியாதவர்கள்' என ஆணிகளூடே அவன் முனகலும் இறங்கியது என்னுள்.
'என்ன பிறவி இவன்????!!!!!' என வியந்து நின்றேன், நிற்கிறேன்...
அன்று முதல், இன்று வரை, என் வழி வந்தோர் சுமந்து நிற்பர் செங்குருதியில் தோய்ந்த தூய மலர்களை...



கருத்துகள்
கருத்துரையிடுக