முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வசந்தாம்மா

வசந்தாம்மாவின் வீடு அவரைப்போலவே தண்மையானது.

கேரளத்திலிருந்து வேலைக்கு வந்த இடத்தில் தமிழ்க்காதல் கரம் பற்றி தமிழக சிற்றூர் ஒன்றில் வீட்டைச்சுற்றிலும் கேரளத்தையும் வீட்டுக்குள் அளவற்ற அன்பையும் கொண்டு அவர் இருந்தார் இறுதி வரையில்.

என் பதின்ம வயதில் நான் விளையாடிய இல்லம், மூன்று குழந்தைகள் கொண்டு நிரப்பப்பட்ட அவர் வீடு என்னையும் அன்போடு உள்ளிழுத்து அணைத்தது. எனக்கு முன்னே பிறந்த என் ரத்த உறவுகளை தூக்கி வளர்த்தவர் என்னிடமும் காட்டியது மாறா அன்பு...

பறவைகள் நிறைந்த அவ்வீட்டில் நான் உண்ட முதல் முட்டை, 1983 உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதியாட்ட ரேடியோ வர்ணணையை அவர்களில் ஒருவனாக நான் கேட்டு இந்திய வெற்றியை நள்ளிரவில் கொண்டாடியது, அவர் கணவரின் அளப்பறிய அன்பு, நான் வளர்ந்தபின்னும் ஒவ்வொரு முறையும் சந்தித்த நொடியில் எனக்குள் இருக்கும் சிறுவனை வெளியிழுக்கும் அவர் உதிர்க்கும் 'வாய்யா' எனும் ஒற்றை வார்த்தை, தேனீர் தருமுன் ஆற்றி ஒரு மிடறு அருந்திப்பார்த்து எனக்களிக்கும் வாஞ்சை என்று எண்ணிக்களிக்க நினைவுத்துகள்கள் ஏராளம்.

கணவரைச் சீண்டுவதும் கணவர்  மெல்லிய புன்முறுவலோடு பதிலின்றி அவற்றைக்கடப்பதும், இன்றளவும் என்னால் கற்க இயலாத வாழ்வியல் பாடம்.

மக்களில் இருவர் கண்டங்கடந்த பெருமருத்துவர், மூன்மறாவரும் பெரு நிறுவன உயரதிகாரி. வாழ்வு அவர்களை இட்டுச்சென்ற தூரங்களை அவ்வப்போது கடந்து, கண்டு, மீண்டு என வாழ்ந்தவருக்கு வயோதிக வடுக்களாய் உடல் உபாதைகள். துன்பங்கள் அனைத்தையும் அமைதியாய் தாங்கி அந்திமம் வரை மன உறுதி குறையாத உன்னத ஆத்மா, கூடு விட்டு வீடடைந்த செய்தி கேட்டு விரைந்தேன் இறுதி சந்திப்புக்காக.

தம் மக்களும் மக்களின் மக்களும் சூழ சில நாட்கள் மருத்துவமனையில் போராடிக்களைத்து வீடு திரும்பி பிரிந்தவரை வழியனுப்புகையில் 'அம்மா அம்மா அம்மா அம்மா' என்ற ஒற்றை வார்த்தையுடன் நெஞ்சு பொறுக்காத வலியோடு மூத்த மருத்துவ மூத்த மகள் தாயிழந்த பூனைக்குட்டிபோல சுற்றிவந்த காட்சி என்னோடே தங்கிவிட்டது...

50 வருட குடும்ப நண்பரை இழந்த என் பெற்றோர் இழந்தது அவர்கள் வாழ்வின் ஒரு பெரும்பகுதியையும்தான் என்பதையும் உணர்ந்த நிமிடம் அது...

'வாழ்ந்து' மறைந்தவர்தான் என்றாலும் மரமடுக்கி கிடத்தி பூசி மெழுகிட்டு தீ தின்னக்கொடுத்தபோது கவ்விய சோகம் இன்னும் அகலவில்லை...

அவரில்லாத வீட்டில் அத்தனை மரங்கள், அவர் வைத்த மரங்கள், இன்றும் அவரைத்தேடிக்கொண்டிருக்குமென்றே தோன்றுகிறது. இல்லை இல்லை அவர் 'அவர்களானார்' என்ற எண்ணமும் வராமலில்லை...

என் இளம்பருவத்தை நிகழ்காலத்தோடு பிணைத்திருந்த நினைவுக்கண்ணிகளில் வலுவான ஒன்று விடைபெற்றுவிட்டது, உடைந்த சுவடே இன்றி. 

அத்தை, I miss you.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...