முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பற்றியெரியும் நதியில் ஒரு கூழாங்கல்...



நதிகளை மீட்கவும் காக்கவும் இணைக்கவும் மெய்நிகர் உலகிலும் மெய்யுலகிலும் தோள்தட்டும் நட்புகளுக்கு இப்பதிவு..

ஏதாவது செய்யவேண்டும் என எண்ணும் உரத்த சிந்தனையாளர்களில் அநேகருக்கு "எப்படி" என்பதில் உள்ள வாழ்வியல் சிக்கல் புரியாமலே இருக்கிறது...

நதி செல்லும் வழியெங்கும் நதிக்கரையின் (இருபுறமும்) 1 கி மீ பரப்பிற்கு மரங்கள் நடுவது ஒரு திட்டம், அந்நதிகளுக்கு  நீர்கொண்டுவரும் வழித்தடங்களையே காணவில்லை...சில இடங்களில் நதிகளே களவாடப்பட்டுவிட்டன.

ஒரு குழு drone களை பயன்படுத்தி மனிதர்கள் அணுக முடியா இடங்களில் மர விதைகளை தூவச்செய்து வருடத்திற்கு ஒரு கோடி மரம் நடப்போகிறது.

இன்னொரு புறம் 130 கோடி மக்கள்தொகை கொண்ட ஒரு நாடே மரவெறி பிடித்து வெட்டித்தள்ளி கல்மரங்கள் நட்டுக்கொண்டிருக்கிறது. பல்லுயிர்கள் பெருகி வாழ்ந்த கிராமத்து நிலங்களில் 'மங்கள்யாண்' நகர்கள் அனுதினமும் முளைத்தவண்ணமுள்ளன.

அரசுகளோ அணைகள் மீது மாளாக்காதல் கொண்டு இமயத்தில் இயற்கையோடு மோதிக்கொண்டிருக்கின்றன. இயற்கை வெல்லும்பொதெல்லாம், ஒரிசாவில் வெள்ளம், பீகாரில் வெள்ளம் என அலறுகிறோம். கோசி எனும் நதி நம் தொல்லை தாங்கமுடியாது அவ்வப்போது தன் வழித்தடத்தையே மாற்றிக்கொள்கிறது...

நதிகளும் காடுகளும் நாம் கைகாட்டும் இடங்களில் மட்டுமே இருக்கவேண்டும், ஒடுங்கவேண்டும் என்ற எண்ணமே தவறு. அதனினும் தவறு விலங்கினங்களுக்கு பாதை 'ஒதுக்குவது'...

காடும் நதியும் பிறர் செய்ய வாரா!

மழை நீர் பனியாய் மலைமுகடுகளில் தங்கி கதிரால் உருகிப்பெருகியோடும் நதியாக மேட்டிலிருந்து பள்ளம் நோக்கி. இது  நீரின் இயல்பு, கடலிலோ ஏரியிலோ முடியும்வரை இதில் மாற்றமில்லை. கடலிலிருந்தும் ஏரியிலிருந்தும் கதிரவன் வான் நோக்கி எறிய, காற்று குளிர்விக்க, மேகமாய்த்திரளும் நீர்த்திவலைகளை பசிய மரங்கள் தூண்டிலிட்டு மழையாய் மீண்டும் மண் சேர்க்கும் முடிவிலாச்சுழற்சியை வேடிக்கை பார்க்க மட்டுமே அனுமதியளிக்கப்பட்ட நாம், மனிதக்கூட்டம், என்ன செய்தோம்?

காக்கை குருவி கொன்று குவித்தோம், நீள் கடலும் மலையும் சுரண்டித்தின்றோம். 'நோக்கும் திசையெலாம் நாமன்றி வேறில்லை, நோக்க நோக்க களியாட்டம்' என ஜெயபேரிகை கொட்டினோம். நதிகளின் வழித்தடங்களை  நெம்பித்தள்ளி கட்டிடங்கள் கட்டிவிட்டோம். நீர்வழிகளை அணைகள் கட்டி அடைத்துவிட்டோம். மீறி  கசியும் நீரையும் நஞ்சாக்கினோம். ஆறுகள் பற்றியெரியும் அவலத்தை கண்டும் மறந்தோம். மண்ணுக்கும் மண்புழுக்களுக்கும் நஞ்சிட்டோம். உயிர்ச்சங்கிலியின் உன்னத பிணைப்புகளான யானை முதல் தேனீ வரை (keystone species) உடைத்துவிட்டோம்.

நதிகளை இணைத்தோம், பிரித்தோம், அழித்தோம். இயற்கை உருவாக்கிய மேடு பள்ளங்களை நம் விருப்பத்திற்கேற்ப மாற்றியமைத்து புதியதோர் உலகு செய்தோம், சிட்டுக்குருவிகளும் ஊசித்தும்பிகளும் இன்றி.

பறவைகளும் விலங்குகளும் உருவாக்கிச்சென்ற காடுகளை அழித்து அவற்றிற்கே வழி 'வகுத்தோம்'. காடுகளுக்கும் மாற்றுக்குடியிருப்பு தருவதாய்ச்சொல்லி நம்மையே ஏய்த்தோம்.

பூமிப்பந்தில் நிற்கும் நம் கால்களின் கீழ் ஆயிரமாயிரம் நீர்நிலைகள் மறைந்து கிடக்கிறது (aquifer எனப்படும் நிலத்தடி நீர் சேமிப்பு நிலைகள்). இவற்றை நாம் நடும் மரங்கள் மட்டுமே வேர் வழியே அணுக முடியும். இம்மரங்கள் வளர நாம் ஊற்றும் தண்ணீர் இவற்றின் வேர் வளர்க்கும். வேர்கள் வழி மழை நீர் நிலத்தடி நீர்நிலைகளின்  உள்சேர்ந்து தங்கும். இம்மழை நீர் மின்தூக்கி வழியே நம் வீட்டின் தாகம் தீர்க்கும். நாம் வளர்க்கும் மரங்கள் போதும் நம்மை வளர்க்க, அணைகள் தேவையில்லை ...It is a circle of life after all.
(ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் கரிகாலன் கட்டிய கல்லணை ஒரு 'நீர்வழிமாற்றி'யே அன்றி அணையல்ல. அது அணையானது 18ம் நாற்றாண்டில்தான்).

நதிகளை மீட்க எவரோ முயலட்டும், நதிகளை காக்க யாரோ முயலட்டும், நதிகளை இணைக்க மற்றோர் முயலட்டும். நம்மால் முடிந்தது  ஒரு மரமேனும் நட்டு வளர்ப்பது; ஒற்றை மரம் பறவைகளை ஈர்க்கும், விலங்குகளை வரவேற்கும், ஒரு காட்டை உருவாக்கும், அனைத்தும் பல்கிப்பெருகும்...ஒரு புரட்சி நிகழும். நதிகள் வாழ்த்தும்!

நதிகளும் பிறக்கும், வளரும், மறையும் என்பதற்கு 'சரஸ்வதி'யே சாட்சி. அணை விரும்புவோர் நினைவில் கொள்க!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...