நான் இளைப்பாறியிருந்த குடில் அருகில் அவளை பார்த்தேன். தன்னைச்சுற்றி பரபரப்பாய் இயங்கும் உலகத்தை மோனப்பார்வை பார்த்தபடி நின்றிருந்தாள். அவ்வப்போது வீசும் காற்றோடு கரங்களை அசைத்தபடி, பெய்யும் மழைத்துளிகளில் நனைந்தபடி. "அட, என்னைப்போல் ஒருத்தி!" என கண்டதுமே மையலானேன். மரியாதைக்குறிய இடைவெளியில் நின்றுகொண்டு என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். 'நீதானா அது?' என்பதாக ஒற்றைப்பார்வை; பறவைகள் என்னைப்பற்றி அவளிடம் ஏதேனும் சொல்லியிருக்கலாம்... பல வருடமாய் அங்கு உற்றமும் சுற்றமும் சூழ வாழ்ந்தவளாம். எறும்புக்குக்கூட தீங்கிழைக்காத கூட்டமாம். ஏனென்றே தெரியாமல், முன்னறிவிப்பின்றி, கூட்டம் 'கூட்டமாய்' கொல்லப்பட, எஞ்சியவள் இன்று வரை ஒற்றையாய்... சில நாள் நட்புடன் உரையாடியபின்னரே அவளை படம் எடுக்க அனுமதி கேட்டேன். 'என் அழகை படமெடுக்க ஆவலா அல்லது நான் வாழ்ந்து காக்கும் என் சுற்றத்தின் (சு)வடு(க்)களை படமெடுக்க விருப்பமா?' என்றாள். "உன் விருப்பமே என் விருப்பம்" என்றேன்.
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!