முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு பிடி சோறு


தஞ்சையில் மேகியை சந்தித்த அதே நாளில் இன்னும் இரு மனிதர்களையும் சந்தித்தேன்.


செல்லம்மாள் என்கிற பாரம்பரிய உணவகத்தில் முன்பதிவு செய்து ஒரு குழுவாக உணவருந்த சென்றிருந்தோம். அருமையான சுவையில் வீட்டு சமையலாக உணவு ருசித்தது. எங்கள் அனைவருக்கும் உணவு பரிமாறிய ஜோதி எனும் பெண்ணுக்கு பின்னிருபதுகளில் வயது இருக்கும். தஞ்சையை சுற்றி உள்ள சிற்றூர் மக்களுள் ஒருவர். பாந்தமாய் தலை வாரி, நறுவிசாக சேலை உடுத்தியிருந்தார். மிகுந்த கவனத்துடன் நேர்த்தியாக அனைவருக்கும் உணவு பரிமாறினார்.


"அவங்க கண்ணை பாத்தியா?" என்றான் என் தோழன்.


கடல் நீலமும் சற்றே பச்சையும் மின்னும் ஐரோப்பிய கண்கள்!


சேலை தவிர்த்து மேற்கத்திய உடை அணிந்து தலை அலங்காரத்தையும் மேற்கத்திய முறையில் மாற்றிக்கட்டினாரென்றால் ஒரு நிசமான ஐரோப்பிய பெண்ணாகவே இருப்பார் இந்த ஜோதி என உணர்ந்தோம். 


'நம்ம ஊரு பொண்ணுக்கு எப்படி இந்த நிறத்தில் கண்கள்?' என மீண்டும் வினவிய நண்பனுக்கு இது பற்றி என் மானசீக ஆசான்களுள் ஓருவரான எழுத்தாளர் திரு. சுஜாதா தனது ஸ்ரீரங்கத்து தேவதைகளில் எழுதியிருந்ததை விவரித்தேன். (கோவில் காண வரும் மேலை நாட்டு ஆண்களுக்கு இங்கு கோவில் அருகில் இருக்கும் பெண் களிடம் தொடர்பு ஏற்பட்டதன் விளைவாக ஸ்ரீரங்க கோவில் வீதிகளில் இது போன்ற ஐரோப்பிய கண்களுடன் குழந்தைகள் திரிவது பற்றி எழுதியிருப்பார்) அவனும் சோகமானான். இந்த ஜோதி இங்கே ஒரு தென்னிந்திய உணவகத்தில் உணவு பரிமாறும் வேலை செய்யும் இதே தருணத்தில் இவளது தகப்பன்வழி சந்ததியினர் ஏதோ ஒரு மேலை நாட்டில் ஜோதியின் இருப்புகூட அறியாது மேலான வாழ்வு வாழ்ந்துகொண்டிருக்கலாம் என்பதையும், சுஜாதா எழுதாத 19ம் நூற்றாண்டின் தேவதாசிகளின் வரலாறு எவ்வளவு துயரமானது என்பதையும் எனது நண்பனுக்கு நான் விளக்கியதை ஒரு தனி பதிவாகத்தான் தரவேண்டும். அவ்வளவு இருக்கிறது எழுத!


இரவு பதினொன்று இருக்கும். எனது வாகனத்தை பூட்டுவதற்காக நான் தங்கியிருந்த அடுக்கு மாடி குடியிருப்பிலிருந்து வெளியே வந்தேன் (குடியிருப்பின் எதிரில் சாலை முனையில் நிறுத்தியிருந்தேன்). 


அந்த நான்கு சாலை சந்திப்பின் மையத்தில் ஒருவர் தனது பைக்கை நிறுத்தி அதனருகில் நின்றுகொண்டிருந்தார்.


ஐம்பதை தொடும் வயது இருக்கலாம். நன்கு உடையணிந்திருந்தார். காலில் தரமான ஷூக்கள் அணிந்திருந்தார்.  பைக்கின் இருக்கையின் மீது ஒரு உணவுப்பொட்டலம். ஒரு கையில் உணவை சிறு பகுதிகளாக பிரித்துக்கொண்டே இன்னொரு கையில் இருந்த அலுமினிய பாக்கெட்டில் இருந்து சாம்பார் அல்லது குருமா போன்ற ஒன்றை ஊற்றி சாப்பிட்டுக்கொண்டிருந்தார், அவரது காலருகே நின்று வாலாட்டிக்கொண்டிருந்த தெரு நாய்க்கு அவ்வப்போது உணவுத்துணுக்குகள் சிலவற்றை பகிர்ந்தவண்ணம்.


அந்த இடத்திலிருந்து ஐம்பது அடி தூரத்தில் இருந்த அத்தனை உணவகங்களும் கன ஜோராக வணிகம் நடத்திக்கொண்டிருக்கையில் இவரது இந்த செய்கை என்னை திகைக்கவைத்தது. அது ஒரு ஞாயிறு இரவு வேறு. 


உணவு அருந்திக்கொண்டிருந்த அவரை சங்கடப்படுத்தவேண்டாமென நான் குடியிருப்பின் கதவுக்கு உள்ளேயே காத்திருந்தேன். எனக்கு முதுகை காட்டியவண்ணம் நின்றிருந்தவருக்கு என் இருப்பு தெரியாது.


பத்து பதினைந்து நிமிடங்கள், நின்று நிதானமாக உணவை உண்டு, நாய்க்கும் தொடர்ந்து பகிர்ந்து, காலியான பொட்டலங்களை நேர்த்தியாக ஒரு ஞெகிழிப்பையில் திணித்து பைக்கின் ஒரு பக்க கைப்பிடியில் தொங்கவிட்டு... இன்னும் சற்று நேரம் ஏகாந்தமாக அதே இடத்தில் நின்றுகொண்டிருந்தார்.


அவர் நகர்வதற்காக காத்திருந்த நேரத்தில் 'என்ன காரணத்தினால் ஒரு மனிதர் இப்படி நடு சாலையில் நின்றுகொண்டு உணவருந்துகிறார்?' என பலவாறு சிந்தித்தும் எதுவும் லாஜிகலாக சரியாக தோன்றவில்லை. அதுபோல இதுவரை நான் எங்கும் எவரும் செய்து கண்டதில்லை.


வாழ்வின் அழுத்தங்களோ, சமூகப்பார்வைகளை புறந்தள்ளும் மனோதிடமோ அல்லது இருள் தரும் சுதந்திரமோ அல்லது வீடு தராத சுதந்திரமோ (அந்த உணவு அவரது வீட்டில் தடை செய்யப்பட்டிருக்கலாம். ஆனாலும் அவர் ஏன் அதை உணவகத்தில் அமர்ந்து நிதானமாக உண்ணாமல் நடு சாலையில் இப்படி?...) ஏதோ ஒன்று அவரை அவ்வாறு செய்யவைத்திருக்கலாம். அல்லது இது எதுவுமே இல்லாமல், தோன்றியதை செய்யும் இயல்பு உடையவராக இருக்கலாம்...


உணவு உண்டுமுடித்து, அந்த நாயும் உண்டு முடிக்கும்வரை காத்திருந்து அதன் பின் பைக்கை உதைத்து கிளப்பி அவர் இருளில் மறைந்து வெகுநேரமாகியும் அவரது ஸ்டாண்ட் போட்ட பைக் என் மனதில் நின்றுகொண்டிருந்தது.


மெல்ல படியேறி வீட்டுள் நுழைந்தேன். 


'பூட்டிட்டு வர இவ்ளோ நேரமா?' என்றார் மனைவி.


அடடா, கண்ட காட்சியில் ஒன்றிப்போய் சென்ற வேலையை மறந்து வந்திருக்கிறேனே என தலையை சொரிந்துகொண்டு மறுபடி படியிறங்கினேன்!


உலகில் அடுத்த நொடியில் ஒளிந்திருக்கும் ஆச்சர்யங்கள் ஏராளம். புதிர்களும்தான்!


எனது முந்தைய, மேகி பற்றிய பதிவையும் இந்தப்பதிவில் கண்ட இருவரையும் என்னோடு பிணைப்பது எது தெரியுமா? 


ஒரு பிடி சோறுதான்.


பேரன்புடன்,

பாபுஜி


கருத்துகள்

  1. உண்மை தான். சிறந்த கலாச்சார நாடு என பெருமை பீற்றிக் கொள்ளும் இங்கே தான் ஒரு பிடி சோற்றை சம்பாதிக்க உடலை விற்பனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் பெரும் சமூகம் உள்ளது. வாணிபத்திலும் ராணுவத்திலும் இச்சை தணிக்க அவர்களே ஏற்பாடு செய்த சமூக கொடுமை களில் இதுவும் ஒன்றாகும்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...