முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முடிவற்ற ஒரே கதை சொல்லட்டுமா?



விழுவது ஒன்று மழையாக இருக்கலாம், விதையாய் இருக்கலாம், இலையாய், கிளையாய், செடியாய், மரமாய் இருக்கலாம். 

இவை தவிர வேறொன்றும் விழுந்ததில்லை பூமியில், தாவரங்கள் மட்டுமே இருந்த வரையில். 

நீரில் உருவான ஒற்றை உயிர் கை கால் முளைத்து கரையேறியதும் இவை அதற்கும் உணவு ஈதிருக்கலாம்.

உணவுண்டு கொழுத்த அவ்வுயிர் பல்கிப்பெருகும்போதும் ஈதல் தொடர்ந்திருக்கலாம். ஈதலின் "மூலம் ஏதென" அறியும் ஆவலில் வால் வளர்த்த ஒன்று மரமேறியிருக்கலாம்.


மரம் காட்டிய தூரமே எல்லையென வாழ்ந்திருக்கலாம். தூரத்து மரங்கள்மேல் மையலாகி தாவி பயணம் தொடங்கியிருக்கலாம். இவை கண்ட காட்சி, வாழ்ந்த வாழ்வு ஏதோ ஒரு புள்ளியில் சலிக்கவும் வானேற முயன்று தாவி தரையில் வீழ்ந்திருக்கலாம். முகத்தில் மண் துடைத்து நிமிர்கையில் இடையறாத தாவர ஈகை தொட்ட பூமியின் பரப்பெல்லாம் நிறம் மாறி வளம் ஓங்கி கோடானு கோடி உயிர் நிரப்பியதை கண்டு களித்து கூத்தாடி, 'நம் பிறவிப்பயனை கண்டாச்சு' என மகிழ்ந்து மகிழ்வின் உச்சத்தில் வால் உதறி மனிதராகியிருக்கலாம். மனம் சிந்தனை வாக்கு என பிரித்தறியும் திறமை ஏதோ ஒரு புள்ளியில் கிட்ட, 
'மரங்களால் ஆனது நம்மால் ஆகாதா?' என்ற கேள்வி எங்கோ முளைத்து வேள்வியாகி, வேள்வியின் உச்சம் அறிவின் உச்சம் என மருகி 'மரமற்ற உலகும் செய்வோம் யாம், இயலாவிட்டால் உலகற்ற வாழ்வு செய்வோம்' என ஏதாவது செய்யும் ஆவல் உந்த, கண்ணில் பட்ட, படாது ஒளிந்த அனைத்தையும் தேடிப்பிடித்து அலசி ஆராய்ந்து பிரித்து மேய்ந்து மீண்டும் பழைய வடிவுக்கு கொண்டுவர போராடி தோல்வியுற்று கவலையில் வால் திரும்ப வளர்த்து  பல காலமாயிருக்கலாம். கொம்பும் இன்ன பிறவும் கூட வந்திருக்ககலாம். இடையறாத தேடுதலில் தேய்ந்து தேய்ந்து ஒற்றை செல்லினமாக மீண்டுமாகி, நில விளிம்பில் ஊர்ந்து கடலடைந்த பின்னும் விழுவது ஒன்று மழையாக இருக்கலாம், விதையாய் இருக்கலாம், இலையாய், கிளையாய், செடியாய், மரமாய் இருக்கலாம். 


இவை தவிர வேறொன்றும் விழுந்ததில்லை பூமியில், தாவரங்கள் மட்டுமே இருந்த வரையில். 

நம் உலகின் முடிவற்ற வரலாறு இப்படியாகவும் இருக்கலாம். எழுதிக்கொண்டே இருப்பவை மரங்களாகவும் இருக்கலாம்...



கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...