இழைக்குள் சிக்கிய சிலந்தி --------------------- தட்டான் என் எள்ளுத்தாத்தன். மரவட்டை என் எள்ளுப்பாட்டி. கும்பிடு பூச்சி என் பாட்டி. கருங்குளவி என் தாத்தன். ஒசிந்தாடும் சரக்கொன்னை என் தாத்தனின் அனுக்கி... என் எள்ளுத்தாத்தனின் கொள்ளுத்தாத்தனும் அவனது உற்றார் உறவினரும் வண்டுகளாய், பறவைகளாய், மண்புழுவாய், விலங்குகளாய், நீருயிரிகளாய், நுண்ணுயிரிகளாய்... காற்றாய், மழையாய், மரமாய், கிளையாய், பூவாய், காயாய், கனியாய், வேராய்... ஏதாவதொன்றாக எப்போதும் எனைச்சுற்றி... என் மனதிற்கினிய மின்மினிப்பூச்சிகள், தும்பிகள், வண்ணப்பூச்சிகள் மற்றும் இன்னும் பலர் நானாகவோ, என் காதலிகளாகவோ, அனுக்கிகளாகவோ... இன்று காலை தாழ்மரக்கிளையிலிருந்து என் தலையில் உதிர்ந்த பூ... அது நீ என்பதாகவே நினைப்பு... இவையனைத்தையும் நினைவு இழைப்பின்னலில் சிக்கவைத்து வாழ்வு சுவைக்கும் பேராவலில் சிக்கிக்கொண்ட சிலந்தியும் நானே! இணைந்த வாழ்வில் பிரிவு இல்லை, தனிமையும் இல்லை!
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!