மனிதனுக்கு மதம் பிடித்த கதை!
மதங்களின் அடிப்படை என்ன? தேவை என்ன? என்பவை பற்றிய பதிவு.
முழுதாய் படிக்கவும் :-)
உணர்வதே அறிவு!
உணர்வின் குவியல் உடல்.
உயிர் காக்க, நீட்டிக்க உள்ளே பொதிந்திருக்கும் பொறிகள் ஏராளம். பொதித்தது யார்? தெரியாது!
பசியென்று ஒரு பொறி.
துயில் என்று ஒரு பொறி.
துயின்றது (தூங்கியது) போதும் என்று ஒரு பொறி.
தாகமென்று ஒரு பொறி.
காமமென்று, கோபமென்று, பயமென்று, பாவமென்று... ஒவ்வொரு பொறியும் நம் உயிர் காக்கும் / நீட்டிக்கும் பொறிகள்...
இப்பொறிகளின் கருவிகளாய் ஐம்புலன்கள். புலன்களின் வழி இயங்கும் இவற்றிற்கு அறிவு தேவையில்லை. சொல்லப்போனால் அறிவே இவற்றின் முதல் எதிரி, பெரும் எதிரி!
உணர்வின் வழியே பயணம் செய்யும் உயிர்கள் ஒரு பெருங்கானகமளவு என்று கொண்டால், அறிவென்பது ஒரு சிறு பொறி, அக்கினிக்குஞ்சு...
உணர்வினால் கட்டி எழுப்பப்பட்ட பெருங்காடுகளும் வெந்து தணிய, நமக்கு நாமே பொந்திடை வைத்துக்கொண்ட அக்கினிக்குஞ்சு நம் அறிவு.
பசித்தால் உண்பது உணர்வு, நேரத்துக்கு உண்பது அறிவு.
தாகத்திற்கு நீர் அருந்துதல் உணர்வு. நல்லிரவில் தாகமெடுத்தால் தூக்கம் கலையுமென தூங்கும் முன் அருந்துவது அறிவு.
இப்படி ஒவ்வொரு பொறியாய் அறிவு தகர்க்க, மரண பயத்தில் உடல் நடுங்கவும் அறிவு சொல்லும் ஆறுதல் என்ன தெரியுமா?
"உணர்வென்பது மாயை! என்னை நம்புவோர்க்கு மட்டுமே மரணமற்ற பெரு வாழ்வு கிட்டும். வா பயணிக்கலாம்"
அந்த நிலை, மரணமற்ற பெருநிலை, நாளையே சாத்தியப்படாது. நெடுங்காலம் அதற்காக அறிவு உழைக்க வேண்டும். அதுவரையில் தற்காலிக ஆறுதலாய் சொர்க்கம் என்றும் நரகம் என்றும் நகரம் என்றும்!
"சொர்க்கப்பாதையை நரகப்பாதையிலிலிருந்து எப்படி வேற்றுமைப்படுத்துவது?" என்று அறிவு கேட்டது.
'நன்மை செய்தால் சொர்க்கம். தீமை செய்தால் நரகம்', அறிவு சொன்னது; நரகப்பாதையை நகரங்கள் வழியே அமைத்தது.
"நன்மை என்றால்?", அறிவு கேட்டது.
'அவரவர் விருப்பம்!', அறிவு பதிலளித்தது,
நன்மைக்கும் தீமைக்கும் எல்லைகள் வகுத்தது; 'ஊருக்குள் கொன்றால் கொலை; எல்லையில் கொன்றால் பரிசு' என்பதாய். பரிசும் உறுதியல்ல; அது யாரைக்கொல்கிறோம் என்பதைப்பொறுத்து!
" அது சரி. சொர்க்கம் நரகம் யார் செய்தது?" என அறிவு கேட்டது.
'இறை விளையாடல்!' என அறிவு சொன்னது.
"இறையென்றால்?" அறிவு கேட்டது.
'நமை மீறிய சக்தி! கவலை வேண்டாம். இறையின் எல்லைகளை நாம் அறிவின் மூலம் சுருக்கிக்கொண்டே வருகிறோம்; மரணம் மட்டுமே இப்பொழுது இறையின் பிடியில்!' என்று அறிவு நகைத்தது...
அன்பைப்போதிக்கும் மதங்களனைத்திற்கும் மையம் இறை vs அழிவின் ஆற்றல்.
உணர்வுக்கும் அறிவுக்கும் நடக்கும் பெரும்போரில் எது இறை? எது அழிவின் ஆற்றல்?
விடை தெரியாது விழிக்கும் நம் கூட்டத்தின் மீதுதான் இவ்விரண்டும் பகடை உருட்டி போரிடுகின்றன.
உருளும் பகடைகளில் வெட்டுண்டு வீழ்வது அனைத்தும் நாமே, நாமன்றி வேறில்லை!
உணர்வே வாழ்வென்றால் மதங்கள் தேவையற்றுப்போய்விடும் (என் கடவுள் பெரிதா உன் கடவுள் பெரிதா? என்பதே அறிவின் செயல்தானே. உணர்வு, இரண்டையும் வணங்கும், அவ்வளவே!).
நாம் அப்படி ஆகவிட்டுவிடுவோமா என்ன?!
கருத்துகள்
கருத்துரையிடுக