தாத்தா, நலமா?
"சுதந்திர அடிமை" வாழ்வுக்கு பழகிப்போன எங்களின் நடுவே இன்று கொண்டாட்ட விடுமுறை. உனக்கு 150ஆவது பிறந்த நாளாம்! வாழ்த்துக்கள்!!
சில நூறு வருடம் மொகலாய அடிமைகளாக, பின் மீண்டும் சில நூறு ஆண்டுகள் ஆங்கிலேய அடிமைகளாக வாழ்வு பழகிய எங்களை விடுவித்து நல்வழிக்கு இட்டுச்செல்வாய் என்று உனது தோழன், எனது தாத்தன், அவரது மகன், எனது தகப்பன், நம்பினர்.
நீயும் கத்தியின்றி ரத்தமின்றி அதை நிறைவேற்றினாய்.
நமது வாழ்வின் அடுத்த நிலைக்கு, நீ கனவு கண்ட கிராம ஸ்வராஜ்ய தேசத்திற்கு உன் கரம் பற்றி அடியொற்றி நடக்க மகிழ்வாய் ஒரு பெருங்கூட்டம் திரண்டபோது உன்னை குண்டுகள் தின்றன...
அவ்வாறு உன்னை தொலைதேசம் அனுப்பி 70 ஆண்டு கடந்தும், உன் செயல்கள் மற்றும் எழுத்தின் மூலம் உன்னை அறிந்த ஒரு தலைமுறை, இன்று உனது ஆன்ம ஒளியை விளக்காக்கி, அதன் ஒளியில் புதிய பாதைக்கு தானும் தன்னைச்சேர்ந்த கூட்டமும், அதாவது மானுடமும், நடைபோட பெருமுயற்சி செய்கிறது.
உன் விரல் பிடித்து நடந்த என் தேசம் இன்று சுதந்திர அடிமையாய், யாருக்கு அடிமையாக இருப்பது என முடிவெடுக்கும் சுதந்திரம் மட்டும் போதும் என இருட்டில் தொலைந்த குழந்தையாய் அலைகிறது.
நம் மரபு உணவு மறந்து போனது.
நம் மரபுத்தொழில்கள் காணாமல் போயின. அவற்றோடு சேர்ந்து நம் கி்ராமங்களும்.
நமது அகத்தூய்மை கரி படிந்து நிறம் மாறிப்போனது.
புறத்தூய்மையும் அவ்வாறே.
இன்று நான் சுவாசிக்கும் சுதந்திரக்காற்றில் எவ்வளவு நச்சு இருக்கிறது என்று அறிய எனக்கு வாய்ப்பில்லை. உண்ணும் உணவிலும், அருந்தும் நீரிலும்...அதுவே.
மொழி, ஜாதி, மத, இன, அரசியல் எல்லைகள் தாண்டிய உன் நேசம், கிராம தற்சார்பில் உனக்கிருந்த நம்பிக்கை, அதை அடித்தளமாகக்கொண்டு நீ கட்டி எழுப்ப முயன்ற கனவு தேசம்... இன்னும் கனவாகத்தான் இருக்கிறது.
தாத்தா, நள்ளிரவில் நடமாடும் பெண் பற்றிய உன் கனவு கூட அனுதினமும் கற்பழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது இங்கே. பகைவர்க்கும் ஈயச்சொன்னாய், இங்கு பாதகம் செய்பவர் அனைவரும் நம்மவரே...
'மாறும். இதுவும் ஒரு நாள் மாறும்' என்கிறாயா?!
சில நூறு ஆண்டு உப்பின்றி அடிமையாய் திளைத்த பெருங்கூட்டத்தையும், அதை உட்பூசல்/படை பலத்தால் வளைத்த சிறு கூட்டத்தையும் ஒரு கைப்பிடி உப்பு 'சுற்றி' நீ கழித்த திருஷ்டிதானே எங்கள் வாழ்வு! நீ சொன்னால் சரியாகத்தான் இருக்கும்...
இன்று வரையில், நாளை வரையில் ஏன்? சில நூறு ஆண்டுகள் வரையில் கூட இந்த சுதந்திர அடிமை வாழ்வு நீடிக்கலாம், யாம் அல்லது எம் வழி வந்தவர் யாரேனும் நீ கனா கண்ட பழைய பாதைக்கு இக்கூட்டத்தை மீட்டுச்செல்லலாம், அது நீயாகவேகூட இருக்கலாம்! ... எம் முயற்சி அது உன் முயற்சியென நாங்கள் நடைபோடுவோம், எதிர்காலம் செய்ய.
அரசியல் சார்பு, சுய அடிமை விருப்பங்கள், வேற்றுமைகள் தாண்டியும் நீளும் நீ தந்துசென்ற தீப்பந்த சுடர். அதன் வெளிச்சத்தில் தொடர்ந்து நடப்போம்.
ஒரு சிக்கல் தெரியுமா? உன் தடம் ஒற்றி நடந்தாலும் உன் சுவடு போல ஆவதில்லை எம் சுவடுகள்!
ஒரு நாள், நீ கனவு கண்ட கிராம ஸ்வராஜ்யம் பிறக்கும்; அன்று நீ ரூபாய் நோட்டுக்களில் மட்டும் சிரித்துக்கொண்டிருக்கும் அவலம் தீரும்.
அது வரை பொறுத்திரு.
குமரப்பாவையும் என் தாத்தனையும் கேட்டதாய் சொல்.
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
அன்புடன்,
பாபுஜி
அன்புடன்,
பாபுஜி
கருத்துகள்
கருத்துரையிடுக