சின்ன வயதில் திக்குவாய். இடதுகைப்பழக்கத்தை வலதாக மாற்ற சமூகம் முயன்றதன் விளைவு என்பதாக புரிதல்.
பள்ளி வகுப்பில் ஆசிரியர் பெயரேட்டை புரட்ட ஆரம்பித்ததுமே வயிற்றில் பட்டாம்பூச்சிக்கூட்டம் கிளம்பிவிடும், 'திக்காம சொல்லணுமே...'. பெயரும் தொடக்கத்திலேயே வந்து விடுவதால் சுதாரிக்கவும் நேரம் கிடையாது. இதயம் துடிக்க என் முறை வந்தவுடன் எழுந்து நின்று 'உ...உள்ளேன் ஐயா' என்று சொல்லிமுடிக்கும்வரை... அவ்வளவு பதற்றம்.
கூழாங்கல்லை வாயில் அடக்கி, எச்சில் விழுங்கி, 1/2/3/4/5 எண்ணி என ஏதேதோ முயன்றாலும், கல்லூரிப்பருவம் வரை தொடர்ந்தது இது.
முதலாண்டு, கல்லூரி அருகில் பேருந்து சந்திப்பில் என் வகுப்பு பெண் 'இந்த பஸ்சு காந்திபுரம் போகுமா?' என கேட்டதும் காது நுனி சிவந்து இதயம் தாறுமாறாகி (காதல்ல இல்ல, திக்குவமோன்னு பயத்தில!) நாக்கு மேலன்னத்தில் ஒட்டிக்கொள்ள... பஸ்சு போயே போச்சி!
அவமானமாய் உணர்ந்து திரும்பி ஓடினேன் விடுதிக்கு.
தீர்வு வெளியில் இல்லை. என்னுள்ளேதான் என்று அன்று தோன்றியது.
வாசிப்பு, மொழி அறிவு, கல கல பேச்சு என்று மாறினாலும் திக்கல் பயம் விக்கல் போல திடீரென தலை தூக்கும்.
இன்டர் காலேஜியேட் போட்டிகளில் பேப்பர் ப்ரசன்டேசனுக்கு விடாமல் பேர் கொடுத்து, நிறைய கல்லூரிகளுக்கு சென்று பேசத்தொடங்கினேன். 'ஸ்டார்டிங் ட்ரபுள் தாண்டினால் ஜெயிச்சிடலாம்' என்ற நம்பிக்கை வந்த நாட்கள் அவை.
ஆனாலும் மூன்றாமாண்டு வகுப்பிலும் எழுந்து நின்று 'Present Madam' என ஒவ்வொரு வகுப்பிலும் நான் சொல்வது ஒரு பேராசிரியைக்கு கோபமூட்ட ('வேணும்னே செய்யறான். கிண்டல்காரன், ராஸ்கல்!) இன்டர்னல்சில் முட்டை! அது வரை ஒன்றுக்கு அருகில் இரண்டு முட்டைகளையே அதிகம் வாங்கியிருந்த நான் என் வாழ்வில் இலவசமாய் வாங்கிய முழு முட்டை, முதலும் கடைசியுமாய்!
இறுதி ஆண்டில் குவிஸ்சில் கோப்பை ஜெயிக்கும் அளவில் முன்னேறினாலும் எதிர்பாரா திக்கல் 'விடாது கருப்பு' என தொடர்ந்தது.
பின்னாளில் ஐ டியின் உச்சாணி நிறுவனங்களில் பல மொழி, நாட்டு, இன மக்களோடு சகஜமாய் அளவளாவ ஒரு சிறிய புரிதல் கை கொடுத்தது; 'திக்கல் ஒரு உணர்வு சார்ந்த நிகழ்வு மட்டுமல்ல, அறிவு சார்ந்ததும் கூட! திக்குகிற சொல்லுக்கு மாற்று சொல் தேடிப்பார்த்தால் உணர்விலிருந்து அறிவுக்கு ஒரு நொடியில் எண்ணங்கள் தடம் மாற, பயம் தொலைந்துபோய் தேடும் ஆர்வத்தில் கவனம் போகிறது'!
வொகாபுலரியை வளர்த்துக்கொண்டேன். எந்த சொல்லுக்கும் சில மாற்று சொற்களாவது நினைவில் இருக்கும் அளவில். திக்கல் போயே போச்!
ஐ டி பணியை விரும்பி விடுத்து விவசாயியானபின்னும் இன்றுவரை பல கல்லூரிகளுக்கு விரிவுரையாற்றவும், சந்தித்திராத குழந்தைகள், மகளிர், ஆண்கள், முதியவர் என எப்பெருங்கூட்டத்திலும் 'விரும்பி, ரசித்து, உணர்ந்து' பேசுதல் இந்த புரிதலினல் வசமானது.
திக்கிப்பேசினாலும் தெளிவாய்ப்பேசினாலும் நினைப்பதை அப்படியே கேட்பவருக்கு கடத்த எந்த மொழியும் உதவாது என்ற புரிதலும் வளர, இப்போதெல்லாம் ஒளி ஓவியங்கள், சைகைகள் மூலம் உணர்த்துதலின் அடுத்த தளத்தை நோக்கி நகரவும் இந்த புரிதலே உந்துவிசை ஆனது.
இதற்கெல்லாம் அடிப்படை, அடித்தளம், அடி நாதம் - குடும்ப உறவுகளின் வேற்றுமைப்படுத்தாத / சிறுமைப்படுத்தாத அணுகுமுறை!
கருத்துகள்
கருத்துரையிடுக