பேபி கிளாஸ்ல டீச்சர் மேல மையலாச்சு.
முதலாங்கிளாஸ் டீச்சர் சிலுவையிட, பிரார்த்திக்க, கற்றுத்தந்து, ஏசு அறிமுகமாச்சி.
ரெண்டாங்கிளாஸ் டீச்சர் 'கண்ணாலம் கட்டிக்கலாமா' ன்னதால மெர்சலாச்சு.
மூணாங்கிளாஸ் டீச்சர் கத்துக்குடுத்த பேப்பர் க்ராஃப்ட் (Origami) இன்னும் ஈர்க்குது.
நாலாங்கிளாஸ் கணக்கு டீச்சர் காட்டன் புடவைப்புன்னகை இன்னும் கண்ணுக்குள்ள நிக்கிது.
அஞ்சாங்கிளாஸ்ல 'பதில தைரியமா (confidence) சொல்லணும். நெசமாவான்னு நான் கேட்டாலும்' என்ற ஆசிரியை கீதாசாரியாக இன்றும் மனதில்.
ஆறாங்கிளாஸ் நினைவில்லை.
ஏழாங்கிளாசில் தறி நெசவு சொல்லிக்கொடுத்த ஆசிரியன் எனது வாழ்வில் சேர்த்த சொற்கள் "ஊடு", " பாவு".
எட்டாங்கிளாஸ்ல வரலாற்று மீசை, பாடமெடுக்காமல் கதையளக்க, முதல் பெஞ்ச்சில் இருந்து 'பாடத்த எப்பத்தான் ஆரம்பிப்பாரோ' ன்னு மைன்ட் வாய்ஸ்ல சொல்ல நினைச்சி, வாய்ஸாவே சொல்ட்டியான்னு நெத்திக்கண் திறந்தவர் பின்னாடி நான் ஏற்பாடு செய்த பெரும்பாண்டி டூருல பசங்களோட சேந்து பேர் பதிஞ்சது நினைச்சி சிரிப்பாச்சி.
ஒன்பதாங்கிளாஸ்ல அறிவியல் டீச்சர் வீக்கெண்டுல என்னை தியேட்டர்ல (நான் வீட்டில் அனுமதி பெற்று) பாத்தத வீக் டேல வீட்டுக்கு சொல்ல, பள்ளியிலிருந்து திரும்பிய என்னை பழுக்க காய்ச்சிய கரண்டி வரவேற்றது! மிஸ் கம்யூனிகேஷன்!
பத்தாம் வகுப்பில் என்னை கரம் பிடித்து பணிரெண்டாம் வகுப்பு வரை எண்களின் உலகிற்குள் அழைத்துச்சென்ற கணித ஆசிரியர்.
பதின் வகுப்புகளில் (11_ 12) கடினமான இயற்பியலை சொந்த பிள்ளைக்கு போல சொல்லித்தந்த இயற்பியல் ஆசிரியர்.
இஸ்லாமிய பள்ளியில் பதின் படிப்பு முடித்து விடைபெறுகையில் 'வாழ்க்கை இனிமையான குபிர் போன்றது' என கையொப்பமிட்ட வேதியியல் ஆசிரியர்.
கல்லூரி முதலாண்டில் ஆங்கிலத்தை நேசிக்க கற்றுத்தந்த ஆங்கில பேராசிரியர்.
இரண்டாமாண்டில் குண்டுமணி கூட மூளைக்குள் செல்லாதவாறு எலக்ட்ரிகல் சர்க்யூட் சொல்லித்தந்த பேராசிரியர்.
மூன்றாமாண்டு கணணி மையத்தின் கடவுச்சொற்களை கையில் தந்து அட்மின் ஆக்கி அழகு பார்த்த பேராசிரியர்.
நான்காமாண்டில் ரோபோடிக்ஸ் பாடத்தை ஒரே வகுப்பில் நடத்தி முடித்து, எங்கள் அனைவரையும் 80 சதவீதத்தை தாண்டவைத்த பேராசிரியர் (ஆங்கிலம் நன்றாக எழுதினால் ஒரு பக்கத்துக்கு அஞ்சு மார்க்! அவ்வளவே!!).
கல்லூரி முடித்து பட்டம் வாங்குவதற்குள் பதவி தந்து அழகு பார்த்த துறைத்தலைவர்...
அடுத்த பல ஆண்டுகள் வாழ்வில் பலர் பல நேரங்களில் ஆசிரியராய் மாறி கற்றுத்தந்தவை ஏராளம்.
அறிவின் மூலம் கற்றது போதும். இனி உணர்வின் மூலம் கற்போம் என முடிவு செய்ததும் நான் தேடிய ஆசிரியை, இயற்கை எனும் பேராசான், இன்று வரை என் கரம் பற்றி கற்றுத்தந்துகொண்டிருக்கிறார்.
வெளியிலிருந்து கற்றது போதும். உன்னுள்ளிருந்தே நீ கற்கவேண்டியது ஏராளம் என அவரது கற்பித்தல் உணர்த்த, பல்லாண்டு முன் நான் ஊன்றிய விதை விந்தையாய் இந்த மழைக்காலத்தில் திடீரென முளைத்தது போல, என்னுள் என்றோ விழுந்த ஏராளமான விதைகள் அவற்றின் போக்கில் வெடித்து முளைத்து என் இருப்பு முழுதையும் பிண்ணிப்பிணைத்துக்கொண்டிருக்கும் இன்றைய நாளிலும் நான் கற்றுக்கொண்டே இருக்கிறேன்!
எனக்கு நானே போதிமரம்!
கருத்துகள்
கருத்துரையிடுக