முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தீர்ப்பு மணியையே திருடிட்டாய்ங்களே!

தீர்ப்பு மணியையே திருடிட்டாய்ங்களே கனம் கோர்ட்டார் அவர்களே!


"ஏகப்பட்ட கடன், நிரந்தர வருவாய் தரும் வேலை கிடைக்கல, தொழில் செய்ய முதலீடு கிடைக்கல. கூட்டுற, கழுவுற, அள்ளுற வேலைக்குதான் நாங்க லாயக்குன்னு இந்த சமூகம் எங்கள எட்ட நிறுத்தி வேடிக்க பாக்குது.

நாங்களும் உங்க மதந்தான், உம்பட சாமிதான் எம்பட சாமியும் என்று இறைஞ்சி ஓய்ந்துவிட்டோம்" 

என சென்னை புறநகர்ப்பகுதி குரல்.


"ஏகப்பட்ட கடன், நிரந்தர வருவாய் இல்ல, தொழில் முதலீடு சொந்தக்காரனே தரமாட்டேன்றான், நெசவு தொழில விடவேண்டியதாய்டுச்சு அம்பா" என்று மதுரை சௌராஷ்ட்ர குரல்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை, குத்தாலம், கும்மோணம், பாண்டி, மேட்டுப்பாளையம், குன்னூர், தோவாளா, விழுப்புரம், கிணத்துக்கடவு...

தமிழகம் மட்டுமல்ல, நம் நாட்டின் எல்லா மாநிலங்களிலும் ஒலிக்கும் இந்தக்குரல், ஒரு உடலின் சில உறுப்புகளை ஏனைய உறுப்புகளே ஒதுக்க முயல்வதால் எழும் அவலக்குரல்.

'பல ஆயிரம் அல்லது சில லட்சம் தரோம், பழைய கடன அடைங்க. புதுசா தொழில் செய்யவும் பணம் தாரோம். வேற்றுமைப்படுத்த மாட்டவே மாட்டோம்' என யாரேனும் சொன்னால் இவர்கள் என்ன செய்வார்கள்?


நாம் இவர்களது சூழலில் இருந்தால் என்ன செய்வோம்?


பிதா சுதன் பரிசுத்த ஆவியின் தூதுவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டு புது வாழ்வு பெற்றவர்களாய் சர்ச்சுகள் எழுப்பி மரியன்னை நாமம் ஜபித்து, இயேசு அழைக்கிறார் என பொது இடங்களில் நாம் சந்திக்கும் அநேகர் இவ்வாறுதான்.

தலையில் குல்லாய் அணிந்து, மசூதிகளுக்கு சென்று ஐந்து வேளை தொழுது பொது இடங்களில் நம்மை சந்திக்கையில்  'சலாமலைகும் பாய்' என முகமன் கூறுபவர்களும் இவர்களேதான்.

(இவர்கள் நாளை இன்னும் நொடித்துப்போய்... வேறொரு இறையின் தூதுவர்கள் உதவினால் மீண்டும் மீண்டும் மதம் மாறுவார்கள், உறுதியாய்! ஏனெனில் நமது நீண்ட நெடிய நாகரிக வளர்ச்சியில் இது வரை எந்த கடவுளும் வறுமையை எந்த நிலப்பரப்பிலும் முழுதாக ஒழிக்கவில்லை.)


'வேத்து மதத்துக்காரனுங்க, ஆச காட்டி மாத்துறானுவ' என கொதிப்பதில் பயனில்லை. அவர்கள் வீனஸ் / ரம்பை / மேனகையையோ / ஹீடோனிஸ் எனப்படும் ஆணழகுக்கடவுளையோ காட்டி மயக்கவில்லை. மூன்று வேலை சோறு, ஆறுதலாய் அணைத்துக்கொள்ளும் இரு கரங்கள் காட்டி அழைக்கிறார்கள்.

நம் சக மனிதர்க்கு இந்த அடிப்படைத்தேவைகளை நாமே மறுத்ததால் உண்டான சிக்கல் இது. 


எங்கிருந்து, ஏன் இந்த சிக்கல் உருவாச்சு? என வினாக்கள் எழுப்ப ஆளில்லை. ஏனெனில் விடை அனைவருக்கும் தெரிந்தே இருக்கிறது.


பரந்து விரிந்த நம் இந்திய நிலப்பரப்பில் தொல்குடிகள் என நாம் அழைக்கும் காடுகளின் காவலர்கள் எண்ணிக்கை நம் மக்கள் தொகையில் 8.2 விழுக்காடு. அதாவது ஏறக்குறைய 11.50 கோடி மனிதர்கள். இவர்களது வாழ்வியல் முறை இயற்கை சார்ந்தது,  நம் இந்து மதம் தோன்றுவதற்கு பன்னெடுங்காலம் முன்னதாகவே வழக்கில் இருந்தது, இன்று வரை வழக்கத்திலும் உள்ளது. இவர்களை இந்து மதத்திற்கு மாற்ற நம் மக்கள் அமைப்புகள் செய்துவரும் முயற்சிகளை நீங்கள் அறிவீர்களா?


அதற்கு இரு சோறு பதம்:

சோறு ஒன்று:

கேரள தமிழக மாநில எல்லையில் பரந்து விரிந்திருக்கும் அட்டப்பாடி வனப்பகுதியில் இருளர்கள் வசிக்கும் குடியிருப்புகள் பல உள்ளன. கடந்த இருபத்தைந்தாண்டுகளில்  இவர்களது வாழ்வாதரத்தை மேம்படுத்தவும், பெருவாரி மக்களது வாழ்வியலில் இவர்களை இணைத்துக்கொள்ளவும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவற்றில் ஒரு நிறுவனத்தில் பணி செய்த ஒருவர் என்னிடம் பகிர்ந்தது: ' ரோடு வசதி கூட இல்லாத மலைப்பகுதியில் எல்லாம் பயணம் செய்து அவர்களை சந்தித்து அவர்களுக்கு கல்வியின் அவசியத்தை எடுத்துச்சொல்லி பலரை படிக்க வைத்து அவர்களது வாழ்வாதரத்தை வெகுவாக முன்னேற்றியிருக்கிறோம். ஒவ்வொரு குடியிருப்புக்கு செல்லும்போதும் தவறாமல் விநாயகர் சிலை ஒன்றை எடுத்துச்சென்று பரிசளிப்போம்...'

செய்தி பகிர்ந்த நண்பர் மத மாற்றங்கள் செய்பவரல்ல என்றாலும் வேற்று வழிபாட்டு மக்களிடம் விநாயகரை கொண்டு சேர்ப்பதை கடமையாக கருதி செய்திருக்கிறார் ('அவர்கள் குடியிருப்புகளில் கோவில் கூட இல்ல சார். அதனால் கொண்டுபோய் கொடுத்தோம்').  இயற்கைக்கு கோவில் கட்டி அடைக்கமுடியாது என தெளிந்த உணர்வுடன் அங்கங்கே கற்களையோ அல்லது மரங்களையோ  வணங்கும் பழங்குடியினரின் வழிபாட்டு முறை பற்றிய அவரது அறியாமையே அதற்கு காரணம். ஆனால் அவரை பணியில் அமர்த்திய தொண்டு நிறுவனத்திற்கு அது தெரியாமலா இருந்திருக்கும்?

சோறு இரண்டு: 

ராஜஸ்தான், மத்திய பிரதேசம் முதல் சட்டீஷ்கர் மாநிலங்கள் வரை பரவியிருக்கும் பழங்குடியினரின் வழிபாட்டு தலங்களின் அருகில் திடீரென ஒரு அனுமன் கோவில் முளைக்கும். சில காலம் கழிந்து பழங்குடியினரிடம் நம் மக்கள் சிலர் 'உங்கள் வழிபாட்டு முறையும் எங்கள் முறையும் ஒன்றுதான். எனவே நீங்களும் இந்துக்கள்தான்' என உரையாடி அவர்களை 'இன்று முதல் நீங்கள் இந்துக்கள்' என அறிவிப்பார்கள். 2024 ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் ஒரு ஆங்கில நாளிதழில் நம் பழங்குடியினர் இன்று எதிர்கொள்ளும் 'அடையாள இழப்பு தாக்குதல்கள்' பற்றிய ஒரு முழு பக்க செய்தியின் ஒரு பகுதியாக இந்த மத மாற்றம் செய்யும் செய்தி வெளியாகி இருந்தது. 

இந்த தொல்குடியினர் இந்து மதத்தை தழுவினால் அவர்களுக்கு 'தாழ்த்தப்பட்ட மக்கள் பட்டியலில் இடம் தொடரும், அரசின் சலுகைகள் கிடைக்கும், வர்ணாசிரம அடுக்குகளின் அழுத்தமும் இவர்கள் மீது தொடர்ந்து படியும். ஆனால் அவர்களது பூர்வீக பண்பாட்டை மெல்ல இழந்து விடவேண்டியிருக்கும்.

ஆனால், 'வேறு மதங்களுக்கு மாறினால் அவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து நீக்கவேண்டும். ஏனெனில் அவர்கள் தங்களது பண்பாட்டை இழக்கிறார்கள்!' என பல இந்து மத குழுக்கள் சட்ட போராட்டங்களை துவங்கி நடத்திக்கொண்டிருக்கிறார்கள். "வீடு திரும்புவோம்" என மத மறுமாற்றமும் செய்கிறார்கள். 

ஆனால் இவை எதுவும் நம் தொல்குடிகளின் நிஜமான பண்பாட்டை அவர்களுக்கு திரும்ப வழங்கப்போவதில்லை. எனவேதான் அவர்களும், இது எல்லாமே தவறு என தம் அடிப்படை  உரிமைகளை காத்துக்கொள்ள குழுக்கள் அமைத்து சட்டப்போராட்டங்களை நடத்திவருகின்றனர். 


'நாங்கள்லாம் அப்டி இல்ல, இது free Country. எந்த விதத்திலும் யாரையும் எக்ஸ்ப்ளாய்ட்டேஷன்லாம் பண்றதில்ல' என்று உணவகத்தில் / காஃபி பாரில் அமர்ந்து கோபமாய் தலையாட்டி மறுக்கிறீர்களா? சற்று தலை நிமிர்ந்து காப்பி கோப்பைகளை எடுப்பவரை, டேபிள் துடைப்பவரை பாருங்கள், அவர் ஒரிசா/பிகார்/அசாமில் இருந்து பஞ்சம் பிழைக்க வந்து நம்மிடம் மாட்டிக்கொண்ட அடிமை என்று உணர்ந்தால் மௌனமாவீர்கள். மதத்தின் பெயரால் யார் யாரோ செய்வது தவறு என்று நரம்பு புடைக்க கூவி, பணத்தின் பெயரால் நாம் செய்வதும் தவறுதானே!

இப்படி சிக்கல்கள் வளர்ந்து வளர்ந்து இன்று மயானத்திற்கு பொதுப்பாதை கிடையாது, குடியிருப்புக்கு தனி 'சுவர்' எல்லை என அடிமைத்தனத்தின் எச்சங்களாய் எங்கெங்கும் சிதறி நாற்றமடித்துக்கொண்டிருக்கிறது. இதை தடுக்கக்கூடிய இடத்தில் இருக்கும் அனைத்து அரசுகளும் கட்சிகளும் 'வெளி மாநில மக்களை தமிழ்நாட்டில அடிக்கிறாங்க, கர்நாடகால அடிக்கிறாங்க,  மகாராஷ்ட்ரால அடிக்கிறாங்க', "தெக்கேந்து போனா வடக்கே பெரிய பதவி, பொறுப்பு எதுவும் கெடைக்காது", 'எல்லா முக்கிய பொறுப்பும் "அந்த" சாதி/மத ஆளுங்களுக்குதான் என தேர்தல் சூட்டை பெரிதாக்க கோஷங்கள் எழுப்புவதோடு நிறுத்திக்கொள்கிறார்கள்.

இவை எல்லாவற்றையும் மாற்ற நமக்கு தேவை: 

சக மனிதரை மத / வர்ணாசிரம கண்ணாடிகள் வழியே நோக்காமல் சக மனிதராய் மட்டுமே அணுகும் பக்குவம்,

யாருடைய ஏழ்மையையும் நம் வருவாயாக கருதாத உயர் எண்ணம், 

ஏழ்மையை களைய வாய்ப்புகளையும், வசதிகளையும் உருவாக்கித்தருதல்


ஆகியவையே.


எது நம்மை தடுக்கிறது??


இன்றையவரையில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் தவிர ஏனையோர் ஒருவராவது துப்புரவுத்தொழிலில் இருக்கிறார்களா என தெரியவில்லை; அவ்வாறு இருப்பதற்கு சாத்தியக்கூறுகள் மிகக்குறைவே. நமது முக்கால் நூற்றாண்டு அரசியல் அமைப்புகளும் அவை சார்ந்த அரசுகளும் மலக்குழி மரணங்களை தவிர்க்க இன்றுவரை மனித ஆற்றல் இல்லாமல் செயல்படும் தொழில்நுட்பத்தீர்வு எதையும் ஏன் செயல்படுத்தவில்லை?

நம் கழிவை நாம் வயிற்றில் சுமந்தாலும்  தீண்டில்லை ஆனால் நாம் இறக்கி சேர்த்துவைத்த கழிவை அகற்றுபவர் மட்டும் எப்படி தீண்டத்தாகாதவர் ஆகிறார்?

நாம் பேரன்பு செலுத்தும் மனிதர்களோ விலங்குகளோ ஏனைய உயிர்களோ மரித்தால் உயிரற்ற உடலை "இவர்கள் மட்டுமே" கையாளலாம் என இன்றுவரை வகுந்திருப்பதின் நியாயமென்ன? அவர்களை கட்டாயப்படுத்தி அந்த பணிகளை செய்யவைத்து,  அதே பணியை காரணம் காட்டி அவர்கள் மட்டும் நமக்கு சமமாக வாழக்கூடாது  என தடுப்பதின் நியாயமென்ன? 

எதனால் அவர்களது வம்சாவளியினர் அனைவருமே அந்த தொழிலை மட்டுமே செய்யவேண்டும் என வரையறுக்கிறோம்? 

நம் வீட்டில் ஒரு கொசு / வண்டு / எலி / கரப்பானை நாம் கொன்று நாமே அகற்றினாலும் அல்லது நாம் அன்பாய் வளர்த்த நாய்க்குட்டி இறந்தால் நாமே புதைத்தாலும் அல்லது தீ மூட்டினாலும் நமக்கு மட்டும் எப்படி பாவ விலக்கு + வழிபாட்டிடங்களுக்கு செல்ல அனுமதி?

மதங்கள் பழகாத பண்டைய உலகில் மனிதர்கள் செய்யும் பணியை காரணமாக காட்டி யாரும் யாரையும் வேற்றுமைப்படுத்தியதில்லை. நாகரிகம் வளர்க்கும் நாம் மட்டும் எப்படி தடம் மாறிப்போனோம்?

"குற்றம் செய்தவனின் வழித்தோன்றல்கள் அனைவருமே பிறவிக்குற்றவாளிகள்" என அறிவித்து குற்றப்பரம்பரை சட்டத்தை ஆங்கிலேயர்கள் நம் மீது திணித்தபோது ஆன்ம பலத்துடன் போராடி அதை உடைக்க முடிந்த நம்மால் எப்படி ஒரு சாதியில் / மதத்தில் பிறந்த ஒருவனும் அவனது வழித்தோன்றல்களும் அந்த சாதிக்கென / மதத்திற்கென அவன் வாழும் சமுதாயம் தரும் வரையறைக்குள் மட்டுமே முடங்கியிருக்கவேண்டுமென ஏன் கட்டாயப்படுத்தப்படு்த்த முடிகிறது? குற்றப்பரம்பரை சட்டம் எப்படி நீதியற்றதோ அது போலத்தானே இதுவும்? நமது சட்டங்களில் வரையறுக்கப்படாத இந்த கட்டுப்பாடுகளை அந்த சட்டங்கள் காக்கும் சமுதாயங்களால் மட்டும் எப்படி தொடர்ந்து செயல்படுத்த முடிகிறது?


மனுநீதிச்சோழன் ஆண்ட நாட்டில் எந்தப்பசு வந்து தீர்ப்பு மணி அடித்தால் இந்தக்குறைகள் தீரும்?

அந்த தீர்ப்பு மணியையே (நமது வாக்குரிமை) யாராவது திருடிவிட்டால் நாம் எப்படி முறையிடுவது? யாரிடம்???

பேரன்புடன்,

பாபுஜி   


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...