முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஏழரை ஸ்டாப்பு: கும்மோணம் டு ராம்நாட் ரைட் ரைட்



பென்சிலா ஜெயிலா?!


எனக்கு பென்சில்கள் மிக விருப்பம். நீண்ட உருளை வடிவில், முப்பட்டை வடிவில், அறுகோண வடிவில், அழி ரப்பர் தலையோடு, தலையில்லாமல் என வித விதமான பென்சில்களும. அவற்றை sharpner இல் வைத்து சுழற்றி சுருள் சுருளாய் பட்டை உரித்து மெல்ல மரச்சுருளின் உள்ளிருந்து கூர்'மை' எட்டிப்பார்க்க, அதை Sharpner இன் இன்னொரு துறையில் சுழற்றி குத்தீட்டி முனை பதத்துக்கு தயார் செய்து மகிழ்வாய் தாளில் எழுதத்துவங்க, "மளுக்" கென முனை முறியும் பென்சில்களை மட்டும் பிடிப்பதில்லை.


அப்பா அலுவலக வேளையாய் வெளியூர்கள் சென்று வந்தால் கண்டிப்பாய் ஒன்றிரண்டு பெட்டிகளில் அடுக்கிய பென்சில்களும் (ஒரு பெட்டிக்கு 10 பென்சில் என நினைவு), செவ்வக வில்லை பால் வெண்மை அழி ரப்பர்களும் எங்களுக்காக வாங்கி வருவார். ரப்பரின் வாசனை தனி சுகம்!


இரண்டாம் வகுப்பில் படிக்கும் எனக்கு பென்சில், ரப்பர் போன்ற உன்னத சொத்துக்கள் வேறு எவையும் ஆகா!.


எங்கள் வகுப்பில் என்னைப்போலவே ஒருவனுக்கு பென்சில்கள்+ரப்பர்கள் மீது கொள்ளை பிரியம், அடுத்தவர்களின் பென்சில்கள் மேல் மட்டும்!


அந்தப்பொறுக்கி வீரமணியிடம் (பல பத்தாண்டுகள் கழித்தும் சிறு வயது கோபம் எங்கோ...hey not exactly, எழுதும்போது மானே தேனே எழுதுவது போல வந்திடுச்சி :-) மாட்டிக்கொண்டேன்.


"டேய், உன் பாக்ஸ்ல இருக்கிற எல்லா பென்சிலயும் அந்த ரெண்டு வாசனை ரப்பரையும் தந்திட்டு போ!"

 (பாவிப்பய எத்தனை ரப்பர் இருக்குன்னு கூட நோட் பண்ணி வச்சிருக்கானே!) 


கண்களை உருட்டி மினி நம்பியார் போல பேசுவான், பேசினான், மிரட்டினான்.


என்னிடம் இருந்த மொத்த தைரியத்தையும் திரட்டி, நான் பார்த்த மனோகரா சிவாஜியை channelise செய்து defiant pose இல் 'முடியாதுடா!' என்றேன்.


அணுகுண்டு ஒன்றை என் மீது வீசினான் அந்தப்பாவி; 'தர்லன்னா எங்கப்பாட்ட சொல்லி ஒங்க அப்பாவ ஜெயில்ல போட்டுடுவேன்! எங்கப்பா எவ்ளோ பெரிய ஆளுன்னு நீ பாத்திருக்கிறதானே! அவரு நா என்ன சொன்னாலும் செய்வாரு!!' - அவனுள்ளிருந்த நம்பியார் சிவந்த கண்களை இடுக்கி என்னை மிரட்டினார்.



எங்கப்பா ஆறடி, அவங்கப்பா ஆறரை அடியாச்சே! யையோ, நான் என் செய்வேன்?!


பயத்தில் நா வறள, கண்கள் துவள, கால்கள் நடுங்க, ஒன்றுக்கு இரண்டுக்கை எல்லாம் தாண்டிய பீதி!


"அப்பாவ ஜெயில்ல போட்டாங்கன்னா நம்ம எல்லாம் யாரு காப்பாத்துவா?!"


நான் அந்த வயதில் பார்த்திருந்த சோக சினிமாக்கள் எல்லாம் கண் முன்பு வந்து போக, மௌனமாய் அவன் கேட்ட எல்லாவற்றையும் தந்துவிட்டு அவமானத்தை மனதில் சுமந்து வீடு சென்றேன்.


அடுத்த நாள் வீட்டில் அண்ணா அக்காவிடம். ஓசியில் வாங்கிய் பென்சில்+ரப்பருடன் பள்ளிக்கு சென்றால்...

சண்டாளன்! பள்ளி வாசலிலேயே காத்திருந்து, என்னை கேட்காமலே சுவாதீனமாய் என் பையை பிடுங்கி திறந்து நோட்டம் விட்டான்.


 "ஆஹா! இந்த பென்சிலும் அழகா இருக்கே! நீ மட்டும் இத எனக்கு தரலேன்னா, பீட்டர், மொட்டை. இவங்க இப்பாவ தூக்கிட்டு வாங்கடா'...என மீண்டும் நம்பியாரானான்.


அழுகையாய் வந்தது. என்ன ஆனாலும் தரக கூடாது என்கிற நினைப்பும் கூடவே. உறுதியாய் 'முடியாது' என்றேன்.


இரண்டு நாட்கள் சமாளித்துப்பார்த்தேன், இரண்டு இரவுகளும் தூக்கத்தில் கனவில் அப்பா சிறை செல்வது போலவும், 'எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி, அங்கே எனக்கோர் இடம் வேண்டும்' என்கிற சிவாஜி பாடலும் ரிபீட் மோடில் ஓடி கதி கலக்கின.


இப்படியாக வளர்ந்த பயம் மூன்றாவது நாளில் என்னை முழுதாய் ஆட்கொள்ள, சிங்கத்தின் குகையில் வெள்ளாடு feelஓடு  பென்சில்+ரப்பர் தாரை வார்த்து தந்தேன்.


வாலு போயி கத்தி வந்தது கதையாய் புதிய சிக்கல்; என் பென்சில் காணாமல் போய்க்கொண்டிருப்பதை அப்பா கண்டுபுடிச்சிட்டாரே!


அவரது குறுக்கு விசாரணை அலாதியாக இருக்கும்; மூன்றாவது கேள்வியை அவர் முடிக்கும் முன்பே உண்மைகளை கொட்டிவிடுவோம்!


கொட்டிவிட்டு ஓவென அழத்தொடங்கினேன் (முன்ன ஒரு காலத்தில முருங்க மர காட்டுக்குள்ள பாடலில் வரும் 'ஓலமிட்டு அழுதன' மாதிரி!).


அடி பட்டைய கிளப்பப்போகிறார் என பயந்து கண்ணீர் பற்றாக்குறைக்கு எச்சில் எல்லாம் தொட்டு வைத்து... ஆனால் ஒரு அற்புதம் நிகழ்ந்தது. அப்பா அதிர்வாய் சிரிக்கத்தொடங்கினார்!


'நான் ஒரு தம்மாத்தூண்டு பொடியன் குலை நடுங்கி தினம் தினம் உம்மை சிறைவாசத்திலிருந்து காப்பாற்ற போராடிக்கொண்டிருக்கையில் இப்படி சிரிக்கிறீரே நியாயமா?!' என என்னுள் எழுந்த திருவிளையாடல் நக்கீரனை அடக்க நான் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கையில் அவர் மென்மையாய் அதே நேரத்தில் உறுதியாய் சொன்னது இதுதான், "போ, போய் உன் நண்பனிடம் சொல். என் அப்பாவும் மிகப்பெரியவர்தான். இனியொரு முறை என்னை நீ மிரட்டினாலும் அவர் உடனே உன் அப்பாவை அதே ஜெயிலில் அடச்சிடுவார்னு சொல்!'

- என கண்களை நோக்கி, இறுதியாக அதே நேரத்தில் இயல்பான குரலோடு சொன்னது பசுமரத்தாணி ரகம், இன்னும் பதிந்திருக்கிறது மனதில்.


அப்படி ஒரு குதூகலம் + relief அதற்கு முன் என் சிறிய வாழ்வில் அனுபவித்ததில்லை! 


யானை பலம் பெற்ற குஷியில் இரவு உறக்கமே இல்லாமல் (excitement!) காலையில் முதல் மாணவனாய் ஓட்டமாய் நுழைந்தேன் வகுப்புக்குள், " வாடா மவனே வா!"


வீரமணியின் தலை, தூரத்தில் தெரிந்தது. 


தலைதெறிக்க ஓடி அவனை வழி மறித்தேன். "இனிமே உனக்கு நான் பென்சில் ரப்பர் எல்லாம் குடுக்கமுடியாதுடா! எங்கப்பாவும் ரொம்ப பெரியவர். அவரே சொன்னாரு, 'இனி ஒரு முறை அந்தப்பையன் பென்சில் கேட்டாலும் அவங்க அப்பாக்கு ஜெயில் நிச்சயம்!'னு!


இப்போதுதான் நிகழ்ந்தது போல 4K clarity இல் இந்த image இன்னும் என்னுள் பதிந்திருக்கிறது! "காற்றுப்போன பலூன் போல வாடிய முகத்துடன், தோற்றுப்போனவனின் தோள்பட்டை போல drooping shoulders உடன் வீரமணி அதிர்ச்சி சுமந்து மெல்ல என்னை தாண்டிச்சென்று அவனது பெஞ்ச்சில் அமர்ந்தது!


Oh boy! Did I enjoy that!!. 


குழந்தைகளின் உலகம், அவர்களது நம்பிக்கை, அந்த நம்பிக்கையை விதைக்கும் மனிதர்கள், அவை தரும் வாழ்வுப்பாதைகள், choice to respond with confidence, face adversaries calmly.... அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு இவற்றை கடத்தும் புள்ளியில் காலம் நம் அனைவரையும் பலமுறை நிறுத்தி வேடிக்கை பார்க்கும்.


நல்ல வழிகாட்டிகள் நல்மேய்ப்பர்களை விட மேலானவர்கள்!


பயணம் தொடரும்.


பேரன்புடன்,

பாபுஜி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...