முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கூகிள் டேட்டா சென்டரும் அமெரிக்கரின் ஜட்டி பனியனும்

 

கூகிள் நிறுவனம் சென்ற வாரம் ஆரவாரமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது; 'இந்தியாவில் டேட்டா சென்டர் அமைக்கிறோம். அடுத்த ஐந்தாண்டுகளில் இதற்காக 15 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒதுக்கியிருக்கிறோம்'.


இந்த வாரம் ஆந்திராவின் முதல்வர், பெருமிதமாக 'பாரத் வென்றது! (அதாவது, I.N.D.I.A தோற்றதாம்! தமிழகம் இழந்த முதலீட்டை அவர்களது அரசியல் கூட்டணி சார்பைச்சாடி கேலி செய்கிறாராம்!!) என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்.


தமிழக எதிர்க்கட்சி தலைவர், 'ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனம்!' என பிரச்சாரம் செய்கிறார்.


ஆனார இந்த ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளுக்கெல்லாம் இந்த டேட்டா சென்டரின் மூலம் திரு சுந்தர் பிச்சை பட்டை நாமம் அப்பியிருக்கிறார். குறிப்பாக மக்களாகிய நமது விசாலமான நெற்றியில் ஏராளமாய் தீட்டப்பட்டிருக்கும் நாமங்களுக்கு மேலே!


கூகிளுக்கு திடீரென ஏன் இந்தியா மீது கரிசனம்?


சுந்தர் பிச்சை இந்தியர், நம் நாட்டின் முன்னேற்றத்தில் பங்கு பெற துடிப்பவர். எனவே... என்று கழுத்து நரம்பெல்லாம் புடைக்கவேண்டாம். சென்ற சில மாதங்களில் அமெரிக்காவில் நடந்த நிகழ்வு ஒன்றை விவரிக்கிறேன். பிறகு விளக்குகிறேன், கூகிள் டேட்டா சென்டருக்கும் இந்தியாவில் தயாராகும் அமெரிக்கரின் ஜட்டி பனியனுக்கும் என்ன தொடர்பு என்று!


முதலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், Make America Great Again என்றார். பின்னர் America First என்றார்.  இந்தியாவில் தொழிற்சாலைகளை தொடங்கி அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் APPLE INC. முதலான அமெரிக்காவின் உலகப்பெரு நிறுவனங்களுக்கு கூடுதல் வரி என பயமுறுத்தினார். இந்தியா, ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவது தவறு என எகிறி இந்தியா மீது கூடுதல் வரி விதித்தார்.


இத்தனை அமளிகளுக்கு நடுவில் கூகிள் நிறுவனம் தனது புதிய டேட்டா சென்டர்களை நிறுவ முதலில் அனுகியது அவர்களது சொந்த நாடான அமெரிக்காவில் உள்ள இன்டியானாபொலிஸ் எனும் மாகாணத்தில், ஃப்ராங்க்ளின் என்கிற ஊரை.


சென்டர் துவக்க அரசு அனுமதி தந்தது. அவ்வாறு தரும் முன்னரே உள்ளூர் மக்களிடம் இருந்து கடும் எதிர்ப்புக்குரல்கள் எழுந்தன. 


'டேட்டா சென்டர் இயந்திரங்களின் சூட்டை தணிக்க ஏராளமான மில்லியன் லிட்டர் தண்ணீர் தினசரி தேவைப்படுமே. எங்களது தண்ணீர் தேவையை பாதிக்காமல், தண்ணீர் பயன்பாட்டு கட்டணத்தை உயர்த்தாமல், புதிய வரிகளை எங்கள் மீது விதிக்காமல் இது எப்படி சாத்தியமாகும்?'


"சென்டரை இயக்குவதற்கு தேவைப்படும் மின்சாரம் எங்கிருந்து வரும்? நிலக்கரி சார் மின் உற்பத்தி நிறுவனங்கள்தானே இந்த கூடுதல் தேவையை உடனடியாக நிரப்ப முடியும்? ஏற்கனவே நம் ஆலைப்புகையினால் வளிமண்டலத்தில் உள்ள கரியமில வாயுவின் அளவு கடந்த நான்கே ஆண்டுகளில் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. இந்த புதிய சென்டர் இந்த வளிமண்டல மாசுபாட்டை இன்னும் துரிதப்படுத்துமே! இது நாளடைவில் எங்களது உடல் நலத்தை பாதித்து மருத்துவ செலவுகளையும், நலக்காப்பீட்டு ப்ரீமியம் தொகையையும் ஏகமாக உயர்த்திவிடுமே!"


'எனவே, எங்கள் ஊரில் நாங்கள் இந்த டேட்டா சென்டர் வருவதை அனுமதிக்கப்போவதில்லை என, அடுத்த கூட்டத்தில் தீர்மானம் இயற்றுவோம்'.


செப்டம்பர் இறுதியில் ஊர்ச்சபை கூடி இந்த தீர்மானம் இயற்றப்போவது கூகிளுக்கு முன்னரே தெரிந்தவுடன், அடுத்த ஏமாளி எங்கே என்று தேடக்கூட நேரமெடுக்காமல் நேரே இந்தியா வந்தாச்சி.


இதோ, ஆந்திராவில் கூகிளின் A.I. Globl Hub வரப்போகிறது. இந்த புதிய டேட்டா சென்டர்தான் இதற்கு பிள்ளையார் சுழி!


சற்று சிந்திப்போம்.


இன்று உலக கலகங்கள் அனைத்திலும் தானே அரசமரம் + சொம்பு சகிதம் ஆஜராகி ஆயுதங்கள் விற்று பின்னர் அமைதி ஒப்பந்தங்களை வாரத்திற்கு ஒன்று என அறிவித்துக்கொண்டிருக்கும் அமெரிக்க பேரரசால் தரமுடியாத தண்ணீர் + மின்சாரத்தை, நம்ம நாடு தரமுடியுமா????


முடியும் என 1990 களில் அமெரிக்கர்களுக்கு ஜட்டி, பனியன் உற்பத்தி செய்து தர நாம் ஒப்புக்கொண்டு அதற்காக அடுத்த முப்பதே ஆண்டுகளில் எனது பெருநகரில் வளமாய் ஓடிக்கொண்டிருந்த நொய்யல் நதியை ஆலைக்கழிவு சுமக்கும் சாக்கடையாக மாற்றினோம்.   திருப்பூரின் நிலத்தடி நீரை சுத்தமாக உறிஞ்சித்துப்பினோம்...


ஏராளமான ஏழை இந்தியர்களது உழைப்பில் நம் நாட்டில் உருவாகி அமெரிக்காவுக்கு செல்லும் ஜட்டி பனியனுக்கும் இன்று இதே அமெரிக்க அரசு கூடுதல் வரி விதித்துள்ளது. ஆனால் நாம் அன்றும், இன்றும், என்றும் சிந்திக்கக்கூட மாட்டோம், 'அதி நவீன தொழில்நுட்பங்களை தினமும் உலகுக்கு அறிமுகப்படுத்தும் அமெரிக்கா, அத்தனை தொழில்நுட்பங்களையும் ட்ரில்ரியன் டாலர் வணிக நிறுவனங்களாக மாற்றி உலக வணிகத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அமெரிக்கா, எதனால் தம் மக்களுக்கான ஜட்டி பனியனை கூட தானே தயாரிக்க முன்வரவில்லை?'


அதற்கு என்ன விடையோ அதே விடைதான் இன்று கூகிள் நிறுவனம் இந்தியாவை மையப்படுத்தி வணிக சாம்ராஜ்யத்தை விரிவாக்குவதும்; 


'எங்களது இயற்கை வளங்கள் எங்களுக்கு தேவை. உங்களது இயற்கை வளங்களும் எங்களுக்கே தேவை! எனவே, ஏமாளிகளே, மறுபடியும் ஏமாற ஆயத்தமாகுங்கள்!' என்பதே அந்த விடை.


ஆந்திராவில் இந்த டேட்டா சென்டரை குளிர்விக்க, நீர் வசதி உள்ளதா? டேட்டா சென்டரை இயக்க தேவையான மின்சாரத்தை அவர்கள் உற்பத்தி செய்கிறார்களா?


இல்லையென்றால் இவற்றை உற்பத்தி செய்ய ஆகும் நிதிச்சுமையை யார் சுமக்கப்போகிறோம்? இதனால் மேலும் மாசு கூடப்போகும் நம் ஆகாயமும் சுவாசக்காற்றும் நமக்கு ஏற்படுத்தப்போகும் நலச்சீர்கேடே நம்மால் சமாளிக்க முடியுமா?


இதனால் காணாமல் போகப்போகும் இயற்கை வளங்களை யார் நமக்கு திருப்பி தருவார்கள்?

நமது குழந்தைகளின் எதிர்கால வசிப்பிடத்தை சில பில்லியன் அமெரிக்க டாலருக்கு தாரை வார்க்க நாம் எப்படி இவ்வளவு எளிதாக சம்மதித்துக்கொண்டே இருக்கிறோம்?


சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சகம் எப்படி இந்த மாதிரி துவக்கங்களுக்கு அனுமதி வழங்குகிறது? அனுமதி வழங்கியதா? அவர்களது அனுமதி தேவையில்லை என்றால் ஏன்???


அமெரிக்க மக்களுக்கு உள்ள தெளிவு நமக்கு ஏன் இல்லை???


பேரன்புடன்,

பாபுஜி


பின் குறிப்பு:

ஆந்திர - தமிழக முதல்வர்களின் டேட்டா சென்டர் தகராறுக்கும் இந்த பதிவில் நான் இணைத்திருக்கும் சாமி பட கோயில் யானைக்கு பட்டை  vs நாமம் தகராறுக்கு விவேக் தீர்வு தரும்  படத்துக்கும் தொடர்பு ஏதாவது இருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. 

நாம் அனைவருமே பொறுப்பு :-(


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...