ரயில் வெடியும் பாம்பு மாத்திரையும்!
ரயில் வெடி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தீப்பெட்டியில் வெடி மருந்து திணித்து நுனியில் திரி சொருகப்பட்டிருக்கும். திரி இல்லாத மறுபக்கத்தில் குழல் போன்றதொரு அமைப்பு இருக்கும். அந்தக்குழலில் நூல் கோர்த்து இரு முனைகளையும் எதிலாவது கம்பத்திலோ ஜன்னல் கம்பியிலோ எதிரெதிராக இழுத்துக்கட்டி திரியில் பற்றவைத்தால் மருந்து தீரும் வரை நூல் கயிற்றில் புல்லட் ஒருபுறத்திலிருந்து ரயில் போல பறந்து மறுபுறம் போய் முட்டி திரும்பி என சாகசம் காட்டும்!
அனுபவித்திருக்கிறீர்களா?!
(இந்த ரயில் வெடி இப்போது எந்த வெடிக்கடைகளிலும் விற்கப்படுவதில்லை, தனி வீடுகளிலிருந்து பல்லடுக்கு குடியிருப்புகளுக்கு புலம் பெயர்ந்த நமக்கு அந்த நூல்கயிறைக்கட்டுவதற்கு இடமின்றிப்போனதால்...)
கும்மோணத்தில் தீபாவளி வரப்போகிற பரவசத்தில் துணிக்கடையில் பெற்றோரின் விரல் பிடித்து வண்ணமும் வாசனையுமாய் விரியும் சட்டை டவுசர் துணிகளின் அழகில் சொக்கி எதையோ கை காட்ட அது வெட்டப்பட்டு வீடு வரும்.
தையல்காரர்களுக்கு மதிப்பிருந்த காலம் அது. அளவெடுக்கும்போதே புத்தாடை தரித்த கற்பனையில் ஒரு இஞ்ச் உயரம் கூடும். (ஒரே ஒரு முறை தையல்காரர் இல்லம் தீப்பிடித்து அநேகர் புத்தாடையின்றி பண்டிகை கொண்டாடினர், நானும்தான். ஆயத்த ஆடைகள் வராத காலமது. மீண்டும் துணியெடுத்து, டெய்லர் பிடித்து...தைத்து...போங்கப்பா என்று விட்டுவிட்டோம். அது பற்றி இன்னொரு எபிசோடில் எழுதுகிறேன்).
தைத்து தீபாவளிக்குள் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு இன்று டாப் ஸ்டார்ஸ் படங்களின் புக்கிங் ஓப்பனிங்குக்கு காத்திருப்பதை விட பல மடங்கு இனிமையானது (படம் தரும் ஏமாற்றம் ஆடை தராது!).
இடைப்பட்ட காலத்தில் கோலி, கிட்டி, பம்பரம் விளையாடுதல், வீட்டில் அச்சேறும் முறுக்குகளை பதம் பார்த்தல், பிடித்து வைத்த இனிப்பு உருண்டைகளை குரங்குகளிடமிருந்து காப்பாற்றுதல்! (நாங்களும் குரங்குகள்தான் அந்த வயதில்!) என்று நாட்கள் நகரும். பெரும்பான்மையாக இயற்கையோடு இணைந்த வீடுகளில் நடுவில் 'திறந்த முற்றம்' இருக்கும், மழை, வெயில், பறவைகள், தும்பிகள், குரங்குகள் என பாகுபாடின்றி அனைத்தையும் வரவேற்கும் முற்றம் வழியே இறங்கிய குரங்கொன்று என் அம்மா ஆடுகல்லில் மாவாட்டுகையில் ஒரு முறை கூட அமர்ந்து மாவு தள்ளியதெல்லாம் எங்களுக்கு பழகிய நினைவுகள் :-)
வீடுகளில் கூட்டம் அதிகமாகும், இனிப்பு கார வகைகளும்தான். ஆனால் பட்டாசுகள் இருக்காது அல்லது குறைவாகவே...
வீதிக்கு ஒன்றிரண்டு பெரிய மனிதர்கள் இருந்தார்கள். அவர்கள் வீடுகளின் முன் பாய்விரிப்பது போல 100 வாலா, மேலதிகமாய் 1000 வாலாக்கள் விரிக்கப்பட்டு, தெரு கூடி நின்று வேடிக்கை பார்க்க, நின்று வெடிக்கும் (வெடியில் மருந்து அதிகம், விலை குறைவு, இன்றுபோலில்லை!).
பொதுவாக அனைவரும் மகிழ்ச்சியோடு சுற்றிக்கொண்டிருப்போம். தெருவில் எந்த நட்பு வீட்டில் நுழைந்தாலும் வயிறு கெடுக்காத பலகாரங்கள், அவர்கள் வீட்டிலேயே செய்த பலகாரங்கள், கிடைக்கும். அந்த ஒரு வாரத்தில் பெரும்பான்மையான வீடுகளில் சமையல் இருக்காது.
தீபாவளி, வெடிப்புகையின்றி, குப்பையின்றி, சத்தம் அதிகமில்லாமல்... இருந்தது. ஊரிலும் தீபாவளி ரிலீஸ் ஆரவாரங்கள் இருந்ததில்லை. மகிழ்வான சந்திப்புகளும் இனிப்புப்பறிமாற்றங்களுமே வழக்கம்.
இன்று ஏராளமாய் செலவு செய்து, வெடி வெடித்து, புத்தாடைகள்(பன்மை!) அணிந்து புதுப்படங்கள் பார்த்து கொண்டாடி விட்டு புகையினால் வலிக்கும் தொண்டைக்கு ஸ்ட்ரெப்ஸில்லும், உணவினால் வலிக்கும் வயிற்றுக்கு ஜெலுசில்லும் உட்கொண்டு. கடையில் வாங்கிய இனிப்பு, காரத்தை ஊர்பறக்கும் அவசரத்தில் நட்புகளிடம் முன்னரே தந்து, நட்புகள் குறைந்த 'சொந்த' ஊர்களில் தீபாவளிக்கு நாம்...
ரயில் வெடியை உங்கள் குழந்தைகளுக்கும் அறிமுகப்படுத்துங்களேன்!
சரி, பாம்பு மாத்திரைக்கு வருவோம்.
Paracitamal 500 mg அளவில் கருப்பாய் நான்கைந்து வில்லைகள் ஒரு காகித சுருளில் பஞ்சு சுற்றி வரும்.
ஒரு வில்லையை எடுத்து சமதளமான தரை தேடி அதில் வைத்து தீக்குச்சி கொளுத்தி அல்லது எரியும் மத்தாப்பை அதன் மீது சுடர் படும்படி பிடித்தால் ஒன்றிரண்டு நிமிடங்களில் ஏராளமான புகையோடு பாம்பு போல சுருள் சுருளாய் வந்துகொண்டேயிருக்கும் சில விநாடிகள். அந்த புகை, அந்த கருமை, அந்த நெடி... ஒரு முறை அந்த immersive experience ஐ அனுபவி்த்தவர் எவருக்கும் வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும்!
வெங்காய வெடி என ஒன்று இருந்தது. தூக்கி எறிந்தால் மோதிய வேகத்தில் வெடிக்கும். ஆனால் யாரோ சிலர் அவற்றை காவலர்கள் மீது எறிந்து டெஸ்ட்டு செய்ததாகவும் அதனால் அந்த வெடியை தடை செய்துவிட்டார்கள் எனவும் நம்பத்தகுந்த அரை டவுசர் வட்டாரங்களில் இருந்து செய்தி வந்த்ததால் நாங்கள் அது கிடைக்குமா என்று கூட மெனக்கெடவில்லை :-)
இதுபோக இருக்கவே இருக்கு எரிகல், ராக்கெட்டு, அணுகுண்டு, லக்ஷ்மி வெடி, குருவி வெடி எல்லாம். ராக்கெட்டுகளை ஏவுவோருக்கு அது எங்கு land ஆகுமென்று தெரியாது, சதாம் உசைனின் ஸ்கட் மிஸ்ஸைல் போல! அதனால் தெருவில் யாராவது ராக்கெட்டு திரி பற்றவைப்பதை பார்த்தால் உடனே வீட்டினுள் ஓடி, முற்றம் தவிர மற்ற இடங்களில் ஒளிவோம் (திறந்த முற்றம் வழியே ராக்கெட்டுகள் இறங்கியதை கண்ட அனுபவம் அப்படி!).
ஆனால் அரை டவுசர்களான எங்களுக்கெல்லாம் பாத்தியப்பட்டதென்னவோ பொட்டு கேப், Roll Cap + தகர டுப்பாக்கி மட்டுமே. அதையும் நாங்க லயன் காமிக்சு குதிரை வீரன் ரேஞ்சுக்கு இடுப்பு டவுசர்ல சொருவிகிட்டு அப்பப்ப டுமீல் டுமீல்னு ஒரு ரோல் full ஆ நம்ம தென்னகத்து கௌ பாய் ஜெய்சங்கர் ஸ்டைலில் சுட்டு, அதில் வரும் புகையை ஸ்டைலாக ஊதி பின்பு சொருகிக்கொள்வோம், படாத இடத்தில சுட்டாலும்! வயசு அப்புடி :-)
தொடரும்.

கருத்துகள்
கருத்துரையிடுக