லாக்கு விளையாட்டும் ராம்குமாரின் ரெண்டு ரூபாயும்.
வசதியான வீட்டின் பையன் ராம்குமார், லாக்கு விளையாட்டில் என் தோழன். வண்ண வண்ணமான சிகரெட்டு அட்டைகளை சேகரிப்பதில் exchange செய்வதில் என் அரைடவுசர் பார்ட்னர்.
அவன் கையில் திடீரென்று ரெண்டு ரூபாய் நோட்டு. இன்றைய மதிப்பில் சில நூறு.
'அப்பா தந்தாங்கடா!' என்று வெள்ளந்தியாய் என்னிடம் காட்டியபோது எனக்குள் பனாமா அட்டைகளும் வில்ஸ் அட்டைகளும் ஜொலிக்கத்தொடங்கின.
'நேர அடுத்த தெரு முக்கில இருக்கிற பொட்டிக்கடைக்கு போறம், ரெண்டு ரூபாய்க்கு எவ்வ்வ்ளோ high exchange value அட்டைகள் கெடச்சாலும் வாங்குறோம், நம்ம ஏரியாவயே கலக்குறோம்!' என வீறு கொண்டு நடந்தோம் இருவரும்.
'சிகரெட்டு...' என தொடங்கி கையில் பணத்தோடு எதிரில் நிற்கும் ராம்குமாரின் தலை மட்டுமே பொட்டிக்கடை மேசைக்கு மேலே தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்.
"மொளச்சு ஒரு எல கூட வுடல, அதுக்குள்ள சிகரெட்டா!" என கடைக்குள்ளிருந்து எகிறி வெளியே வந்தவருக்கு எங்களோட டீலிங் ரொம்ப பிடிச்சிப்போச்சி :-)
'அட்டை மட்டும் தாங்க மாமா, உள்ள இருக்குற பொருளெல்லாம் வேணாம்!' என நாங்கள் கோரசாக சொல்ல, மகிழ்வாய் அவசர அவசரமாய் பத்து பன்னிரண்டு பெட்டிகளை அடுக்கிலிருந்து உருவி, உள்ளிருந்த சிகரெட்டுகளை செய்தித்தாள் ஒன்றின் மேல் தனித்தனியாய் கொட்டிக்குவித்து... எங்கள் டவுசர் பைகளில் பச்சை மஞ்சள் சிவப்பு ஊதா வண்ண அட்டைகள் பிதுங்கி வழிய, உலகை வென்ற மகிழ்வோடு எங்கள் ஏரியா திரும்பினோம்.
என்னா வரவேற்பு. என்னா வரவேற்பு என சக டவுசர்களின் வரவேற்பில் கெத்து இன்னும் ஏறிப்போய் மிதந்தோம்.
அன்று மாலை மங்கி இருள் கவியும் நேரம் வரை பளிங்குகள் குலுங்க, விளையாடிக்கொண்டே இருந்தோம்.
அடுத்த நாள் காலையில் கோழி கூவி சூரியனை எழுப்பிவிட்டு அதனால் பாதிக்கப்பட்டு நாங்கள் முற்றத்தில் பல் தேய்த்துக்கொண்டிருக்கையிலே வாசலில் நிழலாட, பார்த்தால் ராம்குமார், கை விரல் அச்சு பதிந்த, சற்றே சிவந்த கன்னங்களோடு!
நான் அட்டைகளை சொருகி வைக்க உதவிய ஓட்டுக்கூரை வசதி அவனுக்கில்லை; அவனது டார்சு வீடு (RCC போட்டு கட்டிய மாடி வீடு மக்களே). எனவே டவுசர் பாக்கெட்டிலேயே வைத்து காலையில் கழட்டிப்போட, டவுசரை துவைக்க எடுத்த அவனது அம்மாவின் கையில் அது சிக்க, அவனை துவைத்துவிட்டார்!
'நேத்து வாங்கின அட்டையெல்லாம் எடுத்துட்டு ஒடனே எங்கூட வா!' என அழுகுரலில் ஆணையிட, அடித்துப்பிடித்து வாய் கொப்பளித்து டவுசர் பைகளை நிரப்பிக்கொண்டு ஓடினேன், ஓடினோம். கூடவே அவனது அப்பாவும் வந்தார்.
கடைக்காரர் நமட்டு சிரிப்புடன் அட்டைகளை வாங்கிக்கொண்டு இரண்டு ரூபாய் தந்தார்.
அதன் பின் ராம்குமார் எங்களோடு லாக்கு விளையாட வருவதே இல்லை...
கிட்டிப்புல், பம்பரம், புளியாங்கொட்டை தெத்துக்கல்லு, ஐஸ் பாய் என ஏனைய விளையாட்டுகளில் கலந்துகொள்வான்தான். ஆனாலும் எங்களிடம் இருந்து விலகியே இருப்பான். எந்த அளவுக்கு என்றால் ஓரு நாள் பம்பர விளையாட்டில் எங்கள் எதிரிகள் கேங்குடன் சேரும் அளவுக்கு!
பயணம் தொடரும்.

கருத்துகள்
கருத்துரையிடுக