முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ராம்கி - இறுதி பகுதி: புத்தி கொள்முதல்!


தேவைகளே கண்டுபிடிப்புகளின் அடிப்படை என்பதற்கேற்ப நாங்கள் ஆடுகளையும் நாய்களையும் காப்பாற்ற தோட்டத்திற்கு அருகிலுள்ள வீட்டு மனிதர்களை 'கண்டுபிடித்து (மரங்கள் சூழ்ந்த தோட்டங்களுக்குள் மறைந்திருக்கும் கேரள கிராம வீடுகள்!) உதவி கேட்டோம்.


ஒரு சேச்சி நாய்களுக்கு உணவு தர சம்மதித்தார்.


ஒரு சேட்டன் ஆடுகளுக்கு இலை தழை ஒடித்து உணவாய் தர சம்மதித்தார்.


இன்னொரு சேட்டன் சில நாட்களில் நாய்களை தாமே வளர்க்க முன்வந்து அழைத்துச்சென்றார்.


இன்னொரு சேட்டன் ஆடுகள் அனைத்தையும் விலை கொடுத்து வாங்கிக்கொள்ள முன்வந்தார்.


இப்படி அடுத்த சில வாரங்களில் ஒவ்வொரு சிக்கலாக தீர்வு கண்டபோதும், தோட்டத்தை பார்த்துக்கொள்ள மனிதர்கள் கிடைக்கவில்லை. ராம்கியும் அவனது அம்மாவும் எங்களது தொடர்பு எல்லைக்கு வெளியே வெகு வெளியே சுற்றிக்கொண்டிருந்தார்கள்.


பல நாட்கள் தேடலின் பின்பு ஒரு நல்ல குடும்பம் தோட்டப்பணிக்கு வர, நாங்கள் நிம்மதி பெருமூச்சுடன் வீடை சுத்தம் செய்து கொடுத்தோம்:


ராம்கி வாங்கிய புதிய டி.வி யை பாதி விலைக்கு விற்று கடையின் தவணையை முடித்தோம்.


அவன் தவணை முறையில் வாங்கின மரக்கட்டிலுக்கு மீதமிருந்த தொகையை கடையில் செலுத்தி அந்த கணக்கையும் முடித்தோம். பின்னர் காய்கறி கடை, மளிகை கடை, தேநீர் கடை என வரிசையாக அவனது மாதக்கணக்குகளை தீர்த்தோம்.


பின்னர் அவனது உடைமைகளை முட்டைகளாய் கட்டி (உடைகள், அடுக்களை பாத்திரங்கள், இத்யாதி) அவனது உறவினரிடம் ஒப்படைத்தோம் அதை பெற்றுக்கொள்ள ராம்கி வந்திருந்தான்!


புதிய ஆடைகள், காலில் புதிய ஷூ, கண்களில் நிலையற்ற அலையும் பார்வை என ஆளே மாறிப்போயிருந்தான். ஒரு துளி குற்றவுணர்வு கூட அவனிடம் இல்லை. 


அதன் பிறகு அவனை நாங்கள் சந்திக்கவில்லை.


கதை முடிந்தது.


பின் குறிப்பு:


'அவன் பொட்டலம் போடறான் சார்! அதனால இனிமே இந்த பக்கமே தலை வைச்சு படுக்கக்கூடாதுன்னு சொல்லிட்டோம்' என்று சன்னமான குரலில் வருந்தினார் அவனது உறவினர். (பொட்டலம் போடுதல் = கஞ்சா அடித்தல்).


செலவுக்கணக்கை 'புத்தி கொள்முதல் கணக்கு' என வகைப்படுத்திவிட்டு (learning expenses) நாங்களும் அடுத்த வேலைகளுக்கு நகர்ந்தோம். ஆனாலும் தகப்பனின் கவனம் இல்லாது, தகப்பனின் துணை இல்லாது வளர்ந்த ராம்கியின் வாழ்வு, கல்வி பற்றிய புரிதல் இல்லாது போனது, அவனது பதின் பருவ மனச்சிக்கல்கள், அவனுக்கு சமுதாயமும் ஊடகங்களும் கற்பித்திருக்கிற தவறான பிம்பங்கள் (காதல், மது, போதை etc...), அதை தயக்கங்கள் இன்றி பகிர்ந்து அறிவுரை பெரும் அளவுக்கு சுற்றங்கள் இல்லாதது, கூடா நட்பு, அவனது எதிர்காலம் என பல வருத்தங்கள் மட்டும் எங்களுள் அனுபவப்பாடங்களாக தங்கிப்போயின.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...