தமிழ்நாடு விவசாய கல்லூரி வளாகத்திலிருந்து வெளியேறுகையில் காற்றில் மிதந்து காதை வருடியது இளையராஜாவின் இசையில் அற்புதமான பாடலொன்று.
ஒரு போட்டிக்கான ஒத்திகை என்பதை இசை தப்பி அதிர்ந்த கருவிகளும், முதல் ஹம்மிங்கை நிறுத்தி நிறுத்தி திரும்பப்பாடிய பாடகியின் தேன் குரலும்.
நாங்கள் செய்யப்போன திகிலான வேலையொன்று எங்களை நின்று ரசிக்க விடாமல் வெளியே தள்ளிச்சென்றது.
யாரந்த நாங்கள்?
என்னதான் அந்த திகிலான வேலை?
கோவை. 1990களில் ஒரு பழம்பெருமை வாய்ந்த பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு மாணவர்கள் நாங்கள்.
வகுப்புகள் தொடங்கிய சில நாட்களில் இருந்தே எங்கள் கல்லூரி விடுதி அறைகளில் எங்களுக்கு சொந்தமான பொருட்கள் காணாமல் போனவண்ணம் இருந்தன. எனது பாக்கெட் ரேடியோ, அறை நண்பனின் கைக்கடிகாரம், இன்னொரு அறைத்தோழனின் இஸ்திரிப்பெட்டி என வகை வகையான பொருட்கள்.
விடுதி காவலரிடமும், விடுதி கண்காணிப்பாளரிடமும் முறையிட்டும் களவு தொடர்ந்தது.
இரவின் வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு நண்பர்கள் கண் விழித்து பல நாட்கள் கண்காணித்து கண்டுபிடித்தது ஒரு திடுக்கிடும் உண்மை; விடுதி மாணவர்களில் இருவர்தான் 'நாயகர்கள்'. அவர்களுக்கு இறுதியாண்டு மாணவரொருவர்தான் 'குரு'.
கையும் களவுமாய் எங்களது சக மாணவர்களிடம் ஒரு நாள் அவர்கள் பிடிபட, சரமாரியாய் உதை விழுந்தது.
களவு செய்தவர்களை கண்டுபிடித்துவிட்ட மகிழ்வில், பொருட்களை தொலைத்த கோபத்தில் இது நிகழ, எதிர்பாராத புதிய சிக்கல் ஒன்று முளைத்தது.
'நாயகர்கள்' இருவரில் ஒருவருக்கு அடி கொஞ்சம் அதிகம். அவரது அப்பா பக்கத்து ஊர் ஒன்றில் முக்கியமான அரசியல் பிரமுகர்!
மகனை மருத்துவமனையில் சேர்த்த கையோடு நேராக எங்கள் விடுதிக்கு வந்தவர், எங்கள் விடுதியின் ஒவ்வொரு தளத்திலும் கோப நடையுடன் கண்கள் சிவக்க ஆவேசமாய் கத்திச்சென்றார்; 'அடிச்சவன் எவனாயிருந்தாலும் கேட்டுக்கோங்கடா. என் பையன் ஆசுபத்திரில கிடக்கான். நான் உங்கள சும்மா விடமாட்டேன்!'.
அன்று மாலை எங்களது நம்பத்தகுந்த வட்டத்தில் இருந்து வந்த ஒரு செய்தி எங்களை நிறைய அச்சப்படவைத்தது; 'இன்னைக்கு ராத்திரி அவனோட அப்பா நெறைய ரவுடிங்கள கூட்டிகிட்டு வர்றார், ஓவர்!'
விடுதி மாணவர்கள் அனைவரும் கூடிப்பேசி முடிவுகள் சில எடுத்தோம்:
1. இரவு யாரும் தூங்கக்கூடாது.
2. கையில் கிடைத்த ஆயுதங்களை (கிரிக்கெட் மட்டை, ஹாக்கி மட்டை, இன்ஜினீரிங் ட்ராயிங்குக்கான D Square இத்யாதி) எடுத்துக்கொண்டு, விடுதிக்கு வெளியே நடைபாதையில் + மரங்களில் படை திரளுவோம். இரண்டில் ஒன்று பார்ப்போம்!
இரவு மெஸ்ஸில் எல்லோரும் ஒரு பிடி கூடுதலாக உண்டு (அடிக்க / அடி வாங்க தெம்பு தரும்!!) தயாரானோம்.
முன்னிரவு கரைந்து பின்னிரவு தொடங்கும் வேளை...
தூக்கம் தொங்கிய கண்களை போராடி திறந்து வைத்திருந்த நாங்கள், கல்லூரி நுழைவாயிலில் (விடுதிக்கும் அதுவே!) திடீரென எழுந்த வாகன ஓசை சலசலப்பால் பரபரப்பாய் கலவரமாய் இன்னும் பலதாய் ஆக, ஆசுபத்திரி மாணவனின் அப்பா உறுமிக்கொண்டே உள்ளே வந்து கொண்டிருந்தார். அவர பின்னே சொற்பமாய் சில நிழல்கள்.
விடுதி மாணவர் படையில் எல்லோரும் புதிதாய் 'தலைவரை' தேட, அப்போது நாங்கள் யாரும் எதிர்பார்க்காத ஒன்று நிகழ்ந்தது.
எங்கள் விடுதிகளின் தலைமைப்பொறுப்பில் இருக்கும் ஆசிரியர் ஒருவர், சலசலப்பு ஓசைகளை கேட்டு உறக்கத்திலிருந்து எழுந்து, விடுதி காவலருடன் எங்கிருந்தோ வந்து, ஆவேச அப்பாவை எதிர்கொண்டு நிறுத்தினார்.
மரங்களில் தொங்கிக்கொண்டிருந்த எங்களுக்கு அவர்களது உரையாடலின் தொடக்கம் பிடிபடவில்லை. உரையாடல் சில நிமிடங்கள் நீள, சஸ்பென்ஸ் எகிரத்தொடங்கியது.
அப்போதுதான் இரவின் அமைதியையும் எங்கள் பயங்களையும் கிழித்துக்கொண்டு ஒரு குரல் கிளம்பியது.
"நீ ரௌடின்னா? நானும் பெரிய ரௌடிதான், காலேஜ்ல படிக்கையில்! என்ன பண்ணிடுவ பாத்திடலாம்! வா!!"
அது அந்த ஆசிரியரின் குரல். அந்த இரவில் அதில் ஒலித்த துணிவும் உண்மையும் எங்களை ஏதோ செய்தது.
குரல் கொடுத்தவர் எந்த 'நடவடிக்கைக்கும்' தயாரான உடல் மொழியில் நிற்க,
கலாட்டா செய்ய ஆட்களை கூட்டி வந்தவரையும் அது கலவரப்படுத்தியது.
சில நிமிடங்கள் நம்பமுடியாமல் முறைத்துப்பார்த்துவிட்டு, 'என் மகனுக்கு ஏதாவது ஒண்ணு ஆச்சின்னா கண்டிப்பா வருவேன், நீ தடுத்தாலும்!' என தணிந்த குரலில் சீறிவிட்டு மெள்ள திரும்பி நடந்தார்.
எங்களுக்கெல்லாம் மகா ஆச்சரியம். நிஜ வாழ்வில் ஒரு "ஹீரோவை" கண்ட புல்லரிப்பில் இறங்கி ஓடினோம்.
ஹீரோ எங்களை எல்லாம் அமைதியாக பார்த்து, 'போய் தூங்குங்கப்பா' என்று மட்டும் சொல்லிவிட்டு... போய்விட்டார்.
நல்ல உறக்கம் அன்றிரவு.
இரு தினங்களில் அடிபட்ட மாணவன் நலமாய் மருத்துவமனையில் இருந்து திரும்பியதும், 'அபாயம் நீங்கியது' என நிம்மதிப்பெருமூச்சோடு நாங்கள் துப்பறிந்து கண்டுபிடித்த நிசங்கள் எங்களை மலைக்கவைத்தது:
நாயகர்கள் இருவரும் களவாடிய பொருட்களால் கணிசமாய் பணம் சேர்த்து, விவசாய கல்லூரி காவல்காரர் ஒருவரை நட்பாக்கிக்கொண்டு அங்கிருந்த விருந்தினர் அறையொன்றில் நாளொரு 'மேனியும்' பொழுதொரு குப்பியுமாக "இனிமை நிறைந்த உலகமிருக்கு, இதிலே நமக்கு கவலை எதுக்கு லவ்லி பேர்ட்ஸ், புது இளமை இருக்கு வயதும் இருக்கு காலம் இருக்கு கண்ணீர் எதற்கு ஜாலி பேர்ட்ஸ்' என கொண்டாடி மகிழ்ந்தது தெரியவந்தது. அவர்களது குருவோ பலப்பல பள்ளி மாணவிகளின் கனவு நாயகனாய் இருந்ததும் அவர்கள் எழுதின நூற்றுக்கணக்காண காதல் கடிதங்களும் எங்களது விசாரணைக்குழுவின் கைகளில் சிக்கின. ஆதலால் வடிவேலு சொல்லி பாப்புலராக்குவதற்கு முன்னரே 'நாங்கள்லாம் அப்படியே ஷாக்காயிட்டோம்!'
அதன் பின் ஒரு நல்ல நாளில் விவசாய கல்லூரி வளாகத்தில் 'அந்த' அறை எங்கே என பார்த்துவரும் ஆவலில் நாங்கள் கும்பலாய் கிளம்பி, ஒரு முன்னிரவு வேளையில் அனுமதி பெறாமலே வளாகத்தினுள் நுழைந்து, அறை கண்ட திருப்தியில் சடுதியில் விலகி வெளியேறும்போதுதான் மனதை மயக்கும் ராஜாவின் இசையில் எங்கள் ஆன்மாவை ஊடுருவிய பெண் குரல் ஹம்மிங் மேஜிக் நிகழ்ந்தது.
'டேய், என்ன பாட்டுடா அது?'
" அந்த பாட்டா?"
'இல்லடா, இது வேற'
...
"ஹேய்! இந்த பாட்டா?"
'இல்லப்பா, அது வேற' என குழம்பி திரும்பினோம்.
சில பத்தாண்டுகள் கழிந்தும் அந்த குழப்பம் இன்னும் தீரவில்லை. இடையில் வெறித்தனமாய் ஆயாரமாயிரம் ராஜாவின் பாடல்கள் கேட்டும் அந்தப்பாடல் ஏனோ இன்னும் சிக்கவில்லை.
இனி கேட்க ராஜாவின் பழைய பாடல்கள் எதுவுமே இல்லை என நினைத்தபோதுதான் Youtube இன்னும் அவரது பல பாடல்களை அவ்வப்போது அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கிறது. அப்படி இன்று முதல் முறையாய் கேட்ட 'ஈர விழிக்காவியங்கள்' படத்திலும் அந்தப்பாடல் இல்லை... ஆனாலும் இந்தப்படத்தில் ராஜா பாடிய பாடல், இன்றுதான் பிறந்தது போல புத்தம்புது இசையுடன் ஜிவ்வென தூக்கிச்சென்ற உயரம், மிக உயரம்: 'என் கானம் இன்று அரங்கேறும், என் பாடல் வானம் வரை போகும்'' என்கிற அந்தபாடலை நீயும் கேள் நட்பே. உன்னையும் அது உயரமான உயரம் தூக்கிச்செல்லும்! (ராஜாவுடன் பாடியிருப்பவர் ஜென்சி!!). பாடலின் தொடக்க இருபது விநாடிகள், that Guitar piece, Out Of The World! Followed by Raja in his huskiest voice...
மனம் என்னவோ நிறைந்திருந்தாலும், இப்போதுதான் புதிதாய் கற்கத்தொடங்கிய குழந்தைகளுக்கு ஒரு புதிய பறவையின் பெயர் தெரியாவிட்டாலும் 'இது காக்கா இல்ல!' என தனக்கு தெரிந்த பறவையின் பெயராலே நிராகரிப்பது போல, 'அது அல்ல இது' என என் தேடல் தொடர்கிறது.
இப்போது ஒரே ஒரு சிறு கவலை எனக்கு: என்றோ அரங்கேறிய அந்த ட்யூன் இந்த சில பத்தாண்டுகளில் மெல்ல மெல்ல நினைவடுக்குகளில் இருந்து கரைந்துவருகிறது. முற்றிலும் கரைவதற்குள் கேட்கவேண்டுமே என்பதுதான் அது.
கேட்பேன் நிச்சயமாய். நம்பிக்கைதானே வாழ்க்கை!
பேரன்புடன்,
பாபுஜி

கருத்துகள்
கருத்துரையிடுக