இருபத்தாறு வயது இந்திய இளைஞன்.
அமெரிக்காவில் பொறியியல் மேல்படிப்பு. படித்த துறையில் வேலை கிடைக்காமல் கிடைத்த வேலைகளை செய்து வருடங்களை நகர்த்திக்கொண்டிருக்கிறான்.
தாயகம் திரும்ப பெருவிருப்பம். ஆனால் பெற்றோர் 'வரவே வராதே' என்கிறார்கள். 'என் பையன் அமெரிக்கால இருக்கான்னு மத்தவங்ககிட்டே சொல்றப்போல்லாம் நெஞ்சில அவ்ளோ பெருமிதம்! வராதே, என் கௌரவத்தை குறைக்காதே!', 'அமெரிக்கா சென்றால் அவனவன் பணத்த பாத்தவொண்ணே மாறிடுறான். அங்கேயே செட்டில் ஆய்டறான். நீ மட்டும் ஏன் மாறமாட்டேங்கிற?!' என்பதாக அவர்களது பார்வை.
அங்கு சிறு சிறு வேலையில் இருந்தபடியே இந்தியாவில் ஒரு சிறு தொழில் நடத்துகிறான். சில பணியாளர்கள் உண்டு.
அறிமுகமான நாட்களிலேயே மனம் திறந்து பேசத்தொடங்கினான். 'நேரம் சரியாயில்லை என சில வருடம் இங்கேயே இருக்கச்சொல்லியிருங்காங்க' என்றான். நேரம் சரியானபிறகும் வராதே என்கிறார்கள் என வருந்துகிறான்.
இறை நம்பிக்கை, மூன்று வேளை வழிபாடு, தன் ஊதியத்தில் ஒரு பகுதியை நற்காரியங்களுக்காக என கருணை மிகுந்தவன்.
ஒரு கடின சாலை விபத்தில் சிறு காயமும் இன்றி தப்பி பிழைத்தது எப்படி என அவனுக்கே தெரியாது. ஆனால் அந்த செய்தியும் அவனது தந்தை மனதில் கருணை எதையும் சுரக்கவைக்கவில்லையாம்.
வசதியான குடும்பம். அதனால் கௌரவம் மட்டுமே பெரிதென தந்தை.
அமெரிக்காவில் ஒரு நல்ல பெண் தனது வாழ்வில் வந்தால் வாழ்வு துலங்கும் என உறுதியுடன் நம்பினான். பழகிய பெண்கள் எல்லோரும் நட்பு எல்லையிலேயே நின்றுவிட்டனராம்.
'இந்த வருடம் உறுதியாய் இந்தியா வரப்போகிறேன். பெற்றோர் என்னை ஒதுக்கினால் பிழைக்க ஊர்களா இல்லை?!.... அப்படி வேறு ஊரில் பிழைப்பதற்கு பதிலாக அமெரிக்காவிலேயெ இருக்கலாமே' என்கிற சிந்தனைகளில் குழம்பி, இப்போது தெளிவாகி பயணச்சீட்டு வாங்கிவிட்டதை மகிழ்வுடன் பகிர்ந்தான்.
இந்தியா வந்ததும் எங்கு என்ன செய்யலாம் என என் கருத்துகளை பகிர்ந்தேன்.
'இவ்ளோ சொல்றீங்க. கண்டிப்பா செய்வேன்' என இன்று தெளிவாய் உரையாடினான்.
செய்வான் என நம்புகிறேன்.
கொசுறு செய்தி:
பரம்ஜீத் என்கிற இந்தியர், அமெரிக்காவில் நி்ந்தர குடியுரிமை (Green Card) பெற்று முப்பது வருடங்களாக வணிகம் செய்து வருபவர், அடிக்கடி இந்தியா வந்து திரும்புபவர், இந்த முறை வந்து திரும்பியபோது அமெரிக்க விமான நிலையத்தில் அமெரிக்க அரசின் ICE அதிகாரிகளால் (Immigration and Customs Enforcement) கைது செய்யப்பட்டு ஒரு மாதமாக சிறைவாசம். விரைவில் நாடு கடத்தப்படும் சாத்தியங்கள் இருக்கிறது என நொந்துபோயிருக்கிறார். 'ஏன் என்னை கைது செய்தீர்கள்?' என கேட்டபோது ICE அலுவலகம் சொன்ன பதில், 'முப்பது வருடங்கள் முன்பு ஒரு 'நாணயம் போட்டு பேசும் தொலைபேசி'யில் நாணயம் போடாமலே ஏமாற்றி பேசியிருக்கிறாய். அதனால்தான்'.
இந்த குற்றத்திற்கு அவர் ஏற்கனவே தண்டனை பெற்றிருக்கிறார். எனவே இவரை கைது செய்தது சட்டத்திற்கு புறம்பானது! என இவரது வக்கீல் பேட்டிகள் தந்துகொண்டிருக்கிறார்..
(Times of India செய்தி - 17.09.2025. PC: TOI internet edition).
சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா? என்கிற ராஜ பாடல் ஏனோ என் சிந்தனையில் ஓடிக்கொண்டே இருக்கிறது...
சொந்த மண்ணில்கூட தன் வேர்களோடு பிணைப்புடன் இருப்பவர்களுக்கு மட்டும்தான் இக்கட்டான நேரங்களில் குரல் கொடுக்க நாலு பேராவது இருப்பார்கள். ஆனால், அமெரிக்காவில் பரம்ஜீத் போன்றவர்களுக்கு அது சாத்தியமில்லை.
அமெரிக்க தொல்குடி செவ்விந்தியர்களிடமிருந்து பல நூறு ஆண்டுகள் முன்பு நிலத்தைப்பிடுங்கிக்கொண்ட பல வந்தேறிகளின் சந்ததியினர் இன்று, 'எங்கள் நிலம் எங்களுக்கே' என முழங்கி தங்களுக்கு பின் அங்கு வந்தேறியவர்கள் அனைவரையும் இப்போது கை, கால்களி்ல் சங்கிலியால் பிணைத்து திருப்பி அனுப்புவதில் முனைப்பாக இருக்கிறார்கள். அந்த மண்ணின் செவ்விந்திய தொல்குடிகளால் இவற்றை வருத்தத்துடன் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிகிறது. ஏனெனில் அங்கு அவர்களது இனமே சிறுபான்மை இனமாக திட்டமிட்டு மாற்றப்பட்டுவிட்டது.
பேரன்புடன்,
பாபுஜி

கருத்துகள்
கருத்துரையிடுக