முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மூன்று காதல்களும் நானும்!

 


நிஜத்தின் மிக அருகில் இரண்டு  'பிரிவு'கள். நிஜமான பிரிவின் மிக அருகில், நான்!


ஒரு பதின்பருவ காதலை வாழ்வு கலைத்துப்போட, இருபதாண்டு கழித்து இருவரும் பள்ளித்தோழர்கள் ஏற்பாடு செய்திருந்த 'ஒன்றுகூடல்' நிகழ்வில் மறுபடி சந்தித்து, எவ்விதம் வாழ்வு கலைந்து போனது என்பதை பேசி உணர்த்தி, உணர்ந்து...

பிரியப்போகிறோம் என்கிற பரிதவிப்பில் கடந்த காலம் முழுவதும் தொடாமலே பிரிந்த இருவரின் கரங்களும் ஒரு கார் கியர் குமிழில் இணைகின்றன. இணைந்த கரங்கள் இணைந்தபடி கியர் மாற்றி எதிர்காலத்திற்கு காரை நகர்த்தி முன்னேறுகின்றன. இது எவ்வகையான காதல் என்கிற தர்கங்களுக்குள் அடங்காத இவர்களின் காதல் இந்த வாழ்வின் எஞ்சிய துளிகளை இணைந்தே கடப்போம் என உறுதிகொண்டு மறுபடியும் பிரிந்துபோகிறது அவரவர் வாழ்வை தொடர.


அந்த கியர் நிகழ்வு வரை அவளை கண்கொண்டு நோக்கவே தயங்குபவன், அதன் பின் அவள் பிரியப்போகிற நிமிடங்களில் வைத்த கண் இமைக்காமல் அவளையே பார்க்க, பார்வையின் வலியை தாங்க இயலாது அவனது கண்களை கரங்களால் மூடி, அவள் அழுதுகொண்டே விடைபெறுகிறாள்.


இவர்களுக்கு நாற்பதாண்டுகள் முன்பு இன்னொரு ஜோடி, இதோ இந்த நொடியில் பிரியப்போகிறார்கள்...


கலை இணைத்த இவர்களது காதல், அவளது பிரிந்துபோன கணவன் மீண்டும் வரும் புள்ளியில் கருகிப்போகிறது. தனது தந்தையின் 

வற்புறுத்தலால், தான் விரும்பாத திருமண பந்தத்தில் சில காலம் இருந்து விலகிப்போன கணவன், அவளது காதலை அறிந்து, அதை மதித்து, காதலனுடனே சேர்த்து வைக்க வருகிறான். இருவருடனும் பேசுகிறான். இவர்கள் இணையரானால் அவன் மிக மகிழ்வுடன் குற்ற உணர்வின்றி நிரந்தரமாய் வணிக நிமித்தமாக வெளிநாட்டிற்கு இடம் பெயர விரும்புவதையும் தெரிவிக்கிறான். ஆனால் கணவனது நேர்மையையும் நல்ல குணத்தையும் அறிந்து மதிக்கும் காதலன், அவளிடம் பேசி கணவனுடனே அவளை இணைத்துவைக்கிறான். 


இரயில் நிலையத்தில் அவள் தன் கணவனுடன் அவனிடமிருந்து விடைபெறுகையில் அவன், அவர்கள் நினைவாக ஒரே ஒரு புகைப்படம் (அவர்கள் இருவரையும் மட்டும்) எடுத்துக்கொள்ள அனுமதி கேட்க, புகைப்படத்திற்கு கணவனுடன் நின்று, பின் ரயிலில் ஏறிக்கொள்ள, ரயில் சத்தமெழுப்பி மெல்ல மெல்ல நகர, அடுத்த சில நொடிகளில் இவள் முதல் முதலாக அவனை விட்டு பிரியப்போவது உறுதி என்கிற உணர்வு தாக்க, இருவரும் எல்லா முடியாத உணர்வுகளை எல்லாம் ஒரு கர அசைப்பினாலும் கண்களாலும் மட்டுமே அந்த சில நொடிகளில் பரிமாறிக்கொள்ள, அந்த ரயில் மெல்ல நகர்ந்து வேகமெடுத்து மறைகிறது. 



(பின்னொரு காலத்தில் அவளது மகள் மூலம் அவர்கள் இருவரும் சந்தித்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. அவனது நடனக்கலைக்கு அவள் வாங்கிக்கொடுக்க நினைத்த அங்கீகாரத்தை தனது கற்பித்தல் வழி அவளது மகளுக்கே கிடைக்கச்செய்து, அதன் வழியே தனக்கும் அங்கீகாரம் கிடைத்த நிறைவில் அவன் மரிக்கிறான்.)


இந்த இரு காதலும், காதலர்களும் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கண்டவர் மனதில் அகலாது பதிந்திருப்பார்கள்.


இந்த திரைக்காதல்கள் போல இல்லாமல், நிஜத்தில் பிரிந்த காதல் ஒன்றின் மறு சந்திப்பையும் அருகில் இருந்து காணும் வாய்ப்பை காலம் எனக்கு தந்தது.


நேசித்த உறவுக்கார பெண்ணை அவனது அம்மா நிராகரிக்க, பிறிதொரு நாளில் சுற்றம் காட்டிய பெண்ணை மணந்து, காலங்கள் நகர, இதோ இவனது மகளின் திருமண நிகழ்வில் தான் இழந்த காதலியையும் அழைத்திருக்கிறான். அவள் திருமணமான சில வருடங்களிலேயே கணவனை இழந்தவள்...


முன் வரிசையில் அமர்ந்து நிகழ்வு முழுவதையும் கண்டு வாழ்த்திய அந்தப்பெண்ணின் முகத்தில் கனிந்த சிரிப்பு. ஆனால் கண்களில் நான் கண்ட கடலளவு சோகம், அவளது இழந்த காதலின் வலியலைகளால் ததும்பி கண்களில் மெல்லிய நீர்ப்படலம், வேறொரு கதையை சொல்லாமல் சொல்லியது.


காதலித்த அனைவருமே திருமணத்தில் இணைவதில்லை. அப்படி இணைந்தவர்கள் எல்லோருமே நிம்மதியாக வாழ்கிறார்களா என்பதும் கேள்விக்குறியே. ஆனால் இணையும் வாய்ப்பையே இழந்தவர்களுக்கு, அவர்கள் வாழ்ந்த நினைவுகள் மட்டுமே ஊன்றுகோல் போல.


பேரன்புடன்,

பாபுஜி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...