முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஓவ்!


தமிழ் என்பது மொழி மட்டுமா?


நம் ஊரில் ஒரு உணவகம்.

காலை டிஃபனுக்கு கூடிய கூட்டத்தின் நடுவில் சுறுசுறுப்பாய் ஆவி பறக்கும் இட்லிகளை தட்டில் ஏந்திக்கொண்டு, பூக்களில் தேன் குடிக்க தத்தித்தாவும் சிறு குருவி போல அந்த பெண் வெகுவேகமாய் பரிமாறிக்கொண்டே வந்தார்.


என் எதிரில் உணவருந்திக்கொண்டிருந்த ஒருவர் அந்தப்பெண்ணை நோக்கி ஏதோ வேண்டுமென்று குரல் கொடுக்க, அவரைத்தாண்டி சென்றுகொண்டிருந்த பெண் நின்று திரும்பி, 'ஓவ்' என்றார்.

அந்த மனிதரும் அந்தச்சொல் மிகவும் பழக்கமான ஒன்றாக பாவித்து தான் கேட்டதை மறுமுறை கூறினார். 

தலையசைத்து நகர்ந்த பெண் சற்று நேரம் கழித்து உணவு ஒன்றை அவரிடம் தந்து சென்றார்.

அவர் என் இருக்கையை கடக்கும் முன் நட்பு புன்னகையுடன் அவரை நிறுத்தினேன். ஏனெனில் ஓவ் என்ற அந்த ஒற்றைச்சொல் அவருடன் எனக்கு நொடியில் ஒரு நட்பு உணர்வை தந்திருந்தது.

'தஞ்சாவூரா?' என்றேன்.

நூறு சூரியப்பிரகாசத்துடன், "ஆமாங்கண்ணே!" என்றார். மேலே நான் எதுவும் கேட்பதற்கு முன் அவராகவே, 'இதோ, இங்கணதான், வல்லத்தில வீடு. வல்லம் தெரியுமா? வந்திருக்கீங்களா?' என வாஞ்சையுடன் கேட்டார்.

'வந்திருக்கேன்மா' என்றேன்.

'எங்க வீடு அங்க ரோட்டு மேலதான். அரசாங்கம் கட்டிக்குடுத்துருக்கு. வாங்கண்ணே! எங்க வீட்டுக்கெல்லாம் வருவீங்களா?!' என்றார்.


என்னுள் இவை பல அதிர்வுகளை ஏற்படுத்தின...


முன் பின் தெரியாத மனிதர்களிடம் எப்படி இவ்வளவு இலகுவாய் பழகிய உணர்வோடு வாஞ்சையோடு உறவினர் போல பாவித்து வீட்டுக்கு அழைக்க முடிகிறது? அதிலும் அந்த 'எங்க வீட்டுக்கெல்லாம் வருவீங்களா...' - வலித்தது. வலிக்கிறது.


நம்மில் அநேகம் பேர் பொருளாதார வளர்ச்சியை, அது தரும் வாழ்வின் "ஆசை நிவர்த்தி" கவர்ச்சிகளை துரத்திக்கொண்டு எங்கெங்கோ அலைந்து திரிகையில் இந்தப்பெண், தன் சொந்த ஊரிலிருந்து கூப்பிடு தூரத்தில் நிறைந்த மகிழ்வோடு தான் வேலை செய்யும் உணவகத்தில் உணவருந்த வருபவர்கள் இவரோடு வணிகம் தாண்டி உரையாடினாலே மனம் மகிழ்ந்து உறவு பாராட்டி வீட்டுக்கு வாருங்கள் என உரிமை கொண்டாட முடிகிறது? அதிலும், 'எங்க வீட்டுக்கெல்லாம்...' என்ற கேள்வியில்கூட பொறாமையோ, வருத்தமோ, வேதனையோ, வலியோ கூட இல்லாது matter of fact தொனியில் கேட்க முடிகிறது?


I am not trying to romanticise her life and her life philosophy here... I don't think she would really care even if I did!


சட்டென நட்பாகி, உறவு பாராட்டி, தன் வீட்டு சுப நிகழ்வில் பந்தியில் அமர்ந்திருப்பவாரக பாவித்து அத்தனை கூட்டத்திலும் தேடித்தேடி உணவுகள் கொண்டுவந்து உபசரித்து (அண்ணே, பூரிக்கிழங்கு கொஞ்சம் இட்லிக்கு தொட்டுக்கிறீங்களா? டேஸ்ட்டா இருக்கும்! புதினா சட்னி கெட்டியா இருக்கு. வைக்கட்டுமா?) என அத்தனை பேருக்கு பறிமாறும்போதும் அவர் காட்டிய கருணை, இன்று நம் அநேகரின் இல்லங்களில் கூட இருக்காது என தோன்றியது.


இந்த உணர்வுகள் அத்தனைக்கும் காரணமான அந்த ஒற்றைச்சொல், ஓவ், என் தஞ்சை மண்ணின் சொல். இங்குள்ள மனிதர்களின் வாழ்வியலோடும் உறவுகளோடும் பிணைந்த சொல். பொதுவாக நாம் ஓருவருடன் உரையாடுகையில் நாம் சொன்னதை அவர் ஒழுங்காக கேட்க இயலாமல் அல்லது புரிந்துகொள்ள இயலாமல் இருந்தால் அவர்கள் பயன்படுத்தும் சொல் இது. 'என்ன சொன்னீங்க? திருப்பி சொல்லுங்க' போன்ற நீளமான சொற்களை தன்னுள்ளே அடக்கிய ஒற்றைச்சொல் இது. 'கூப்டீங்களா?' அல்லது 'எதுக்கு கூப்டீங்க?' என வினவும் பொருளிலும் இந்தச்சொல் பன்படுத்தப்படுகிறது. 


ஊரை விட்டு வெகுதூரம் சென்று, வாய்ப்பு கிடைக்கையில் ஊர் திரும்பி, இங்க எல்லாமே மாறிப்போச்சு என்கிற அலுப்பு தரும் உணர்வில் மிதக்கையில் இதுபோல ஒற்றைச்சொற்கள் சட்டென நம் வறண்ட வானிலையை மாற்றி நம்மை புன்னகைக்க வைத்து, மகிழ்வோடு நம் நிலத்தில் இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கும்  நம் வேர்களை நினைவுபடுத்தி நம்முள் ஏற்படுத்தும் அதிர்வுக்குளங்கள் எத்தனை எத்தனை!


நீங்கள் அடுத்த முறை தஞ்சையில் சுப்பையா டிஃபன் சென்டரில் உணவருந்திக்கொண்டிருக்கையில் ஓவ் என்கிற சொல் உங்கள் காதில் விழுந்தால் இந்தப்பதிவு அதை புரிந்து கொள்ள உங்களுக்கு உதவலாம் :-)


பேரன்புடன்,

பாபுஜி

PC: Sasikumar Ramanathan's fb page. Maybe subject to copyright.

கருத்துகள்

  1. அருமை அருமை. தமிழ் உணர்வு மட்டுமல்ல தமிழ் உணவும் சேர்த்தே நீங்கள் ஊட்டுகிறீர்கள் 😎👏🙏🏼

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...