முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரே குழப்பமா இருக்கு ஔவையாரே!


அறம் செய்ய விரும்பு.


திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி அருகிலிருந்தே காவிரியும் பயணிக்கிறது. 

அகண்ட காவேரியாக பல கிலோமீட்டர் தூரம் அவள் பயணம் என்றாலும் நெடுஞ்சாலை மட்டும் பல இடங்களில் வாய்க்கால் அளவு குறுகி (மறுபுறம் இரயில் வண்டி தடம் + பாசன வாய்க்கால்) திருப்பராய்த்துறை அருகில் மட்டுமே விரிந்த சாலையாக மாறும்.

சீமான் தத்தாச்சாரியார் மாம்பழக்கடை தாண்டி, முக்கொம்பு கடந்து குளித்தலை தாண்டி பேட்டைவாய்த்தலை சாலை இந்த நெடுஞ்சாலையில் சேருமிடம் ஒரு நடமாடும் சந்தை.

நெல், வாழை, பலா, மா, மல்லி, முல்லை என கலந்து கட்டி சாகுபடி செய்யும் எளிய மனிதர்கள் நடத்தும் unofficial சந்தை.

சீசனுக்கு விளைந்த பழங்களை, மலர்களை நெகிழிப்பைகளில் சிறு சிறு கூறுகளாக அடைத்து, சாலை சந்திப்பு முனையில் ஓட்டப்பந்தய வீரர்கள் போல ஆயத்தமாக நிற்பார்கள். வெயில் 100-102 என ஏறும் நண்பகல், மதியப்பொழுது என பாகுபாடு இல்லாமல் தலையில் துண்டு அல்லது முந்தானை கொண்டு மூடிக்கொண்டு, சாலை கடப்பதற்காக வேகம் குறைக்கும் வாகனங்களை நோக்கி இரு கைகளிலும் பைகளை தூக்கிக்கொண்டு ஓடி வருவார்கள்.

சில நிமிடங்களில் வணிகம் முடித்து அடுத்த வண்டிக்கு நகர்வது அவ்வளவு சிக்கனமாக இருக்கும் பார்ப்பதற்கு.

சென்ற முறை அந்த பகுதியை கடக்கையில் வண்டியை சற்று தள்ளி நிறுத்தினேன். எதிர் திசையில் என்னை கடந்து ஓடிக்கொண்டிருந்தவர்கள் கூட்டத்தில் கடைசியாக, ஓடமுடியாத வயதில் ஒரு பாட்டியம்மா. ஓட்டத்தை நிறுத்தி என்னிடம் மெல்ல நடந்து வந்து இரண்டு கைகளையும் நீட்டினார். ஒரு கையில் வாழைப்பழ பை, மறு கையில் பலாப்பழ பை. முகத்தில் மதிய வெயிலை விட பிரகாச சிரிப்பு.

'வாங்கிக்க கண்ணு. வாளப்பளம் அம்பது ரூவா, பலாச்சொள 40 ரூவா' 

ஐநூறுக்கு சில்லறை இருக்கா பாட்டி என்றேன். 

இல்லையேப்பா என்றார்.

என்னுடன் வந்தவர் கூகுள் பே பண்ணலாமா பாட்டி? என்றார்.

கூப்பேல்லாம் இல்லப்பா என்ற பாட்டி, பழங்களை எங்களல கைகளில் திணித்து விட்டு, 'இதோ, மாத்திட்டு வரேன்' என பதிலுக்கு காத்திராமல் மெல்ல நடந்து சனத்திரளில் மறைந்தார்.


ஐந்து நிமிடங்கள் காத்திருந்தோம். அதற்குள் இன்னும் சிலர் பைகளுடன். எங்களை அணுகி விற்பனை முயற்சிகளை தொடங்க, 'சில்லறை மாத்த போனவங்க வந்தாதான் உங்ககிட்ட வாங்க முடியும்' என்றேன்.

'பைய புடிங்க சார்' என கைகளில் தந்துவிட்டு அவர்களும் காத்திருந்தனர்.

இன்னொரு ஐந்து நிமிடங்களில், மாற்றிய சில்லறை நோட்டுகளை கையில் இறுகப்பிடித்தவண்ணம் பாட்டியம்மா வந்தார்.

மற்றவர்களிடம் அவர்களுக்கான பணத்தை தந்துவிட்டு நன்றி சொல்லி நகர்ந்தோம்.


எளிய மனிதர்கள் ஏமாற்றுவதில்லை கவனித்திருக்கிறீர்களா?

பாட்டி கூட்டத்தில் காணாமல் போயிருந்தால் எங்களால் எவ்வளவு நேரம் அறியாத ஊரில் தேடியிருக்கமுடியும்?

அந்த மனிதர்கள் எவ்வளவு ஒழுங்காக, நிதானமாக வணிகம் செய்கிறார்கள்? இத்தனைக்கும் high margin வணிகமும் அல்ல...

ஒரு நாளில் பல மணிநேரம் வெயிலில் ஓடி ஓடி ஐம்பது பைகளாவது விற்றால்தான் அவர்கள் வீட்டில் அடுப்பு எரியும். 

விற்பனை ஆகாவிட்டாலும் உண்ண பழங்கள் இருக்கிறது.

அவர்களது வாழ்வு நம்பிக்கைகளால் நிறைந்திருக்கிறது.


ஒரு பெரு நகரில் வாகன சாரதி ஒருவரை (அதாங்க, ட்ரைவர்) சந்தித்தேன்.

பகலில் கால் டாக்சி ஓட்டுகிறார். இரவில் பெருநகர சுகாதார துறையில் ஒப்பந்த பணி (கான்ட்ராக்ட் லேபர்). 

ஒரு இரவுக்கு ஒன்றரை மணி நேரம் மட்டுமே வேலை. பெருநகரின் ஒரு பகுதியில் இருக்கும் சிறு சிறு குப்பை பெட்டிகளை வாகனத்தின் இயந்திர கரங்களால் நகர்ந்தி தூக்கி வாகனத்திற்குள் இருக்குமர பெரிய குப்பை பெட்டியில் சேர்த்து, இந்த சிறு சிறு குப்பை பெட்டிகளை மறுபடி அதனதன் இடத்தில் இறக்கி வைக்கும் வேலை.

வாகனத்தை விட்டு இறங்கவேண்டியது இல்லை. இயந்திர கரங்களை வாகனத்திலிருந்தே இயக்கலாம்.

ஒரு மாதத்திற்கு இருபத்து மூன்றாயிரம் சம்பளம்.

கூடுதலாக, அந்த வாகனத்தின் எரிபொருள் கலனில் இருந்து (டீசல் டேங்க்) டீசல் திருடி விற்ற வகையில் ஒரு நாளைக்கு...சற்று மனதை திடப்படுத்திக்கொண்டு வாசிக்கவும்: மூன்றாயிரம் ரூபாய்!

இந்த மூன்றாயிரம் தனியே கணக்கு வைக்கப்பட்டு அன்றாடம் குறிப்பிட்ட பலருடன் பகிர்ந்துகொள்ளப்படுகிறது என்றார்.

'என்னங்க இது? அறமா??' என்றேன்.

'வேற வழி இல்ல சார். இந்த தொழில் இப்படித்தான். சம்பந்தப்பட்ட எல்லாருக்கும் தெரிஞ்சிதான் நடக்குது' என்றார்.


பேட்டவாய்த்தலை பாட்டிக்கு தெரிந்த அறம்  வேறு, இவர் போன்றவர்கள் பழகும் அறம் வேறு.

'அறம் செய்ய விரும்பு' என நம் பள்ளிகள் அனைத்திலும் குழந்தைகளுக்கு கற்பிக்கிறோம். எது அறம்? அதை எப்படி காப்பது என்று கற்பிக்கிறோமா?

எந்த அறத்தை காப்பது சர்வேசா?!


பேரன்புடன்,

பாபுஜி


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...