முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாரதியோடு போனது நமது ஜெகம் அழிக்கும் கோபம்



நண்பகல் கோடை வெயிலில் சாலையை கடக்கும்போது அவர்களை பார்த்தேன்.


ஒரு டாடா ஏஸ் வண்டி முழுக்க குப்பைகள். கணவன், மனைவி + ஒரு சின்னஞ்சிறுமி. சாலையோர மர நிழலில் வண்டியை நிறுத்திவிட்டு தரையில் அமர்ந்து அவர் எதையோ உடைத்து சேகரிக்க, அந்த சிறுமியும் குப்பைகளை கிளறிக்கொண்டிருந்தாள்; மூன்று வயது கூட ஆகியிருக்காது... அவளது அம்மா சாலையோரம் இருந்த குப்பையை கிளறிக்கொண்டிருந்தார்.


யு டர்ன் செய்து திரும்ப வந்து அவர்கள் அருகில் நிறுத்தி உரையாடினேன்...


'ஏங்க இப்படி சின்ன குழந்தையும் குப்பையில...பள்ளிக்கூடம் போகலையா?' என்றேன்.


திருப்பூரில் இருந்து தினமும் கோவைக்கு வந்து குப்பைகள் பொறுக்கி அவற்றில் விலை பெறக்கூடிய பொருட்களை பிரித்தெடுத்து விற்று பிழைப்பு நடத்துகிறார்கள். தமிழ் முகங்களாக தோன்றவில்லை ஆனாலும் தமிழ் தடங்கலின்றி பேசுகிறார்கள்.


வீட்டில் அவரது அம்மா அப்பா இருந்தாலும் அவர்களும் தினக்கூலிகளாக வெளியே செல்வதால் குழந்தையை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள யாருமின்றி அவர்களுடனே அழைத்துச்செல்வார்களாம். பள்ளி செல்லும் வயது வந்தவுடன் பள்ளிக்கு அனுப்ப திட்டமிட்டிருக்கிறார்களாம். கண்ணியமான குரலில் பேசியவரை பார்த்து உதவி ஏதாவது வேண்டுமா என்றேன். 'இல்ல சார்' என்றார். 'டீக்கு காசு இருந்தா குடுங்க சார் போதும்' என்றார் அவரது மனைவி. நம் உலகில் பெண்கள்தானே வயிறு நிரப்புகிறார்கள், இருந்தாலும் இல்லாவிட்டாலும்... என்கிற நினைப்புடன், 'நானே வாங்கி வருகிறேன்' எனச்சொல்லி அருகில் இருந்த உணவகத்தில் இருந்து உணவுப்பொட்டலங்கள் வாங்கித்தந்தேன். நன்றியுடன் பெற்றுக்கொண்டார்கள்.


விடைபெற்று நகர்ந்தபோது மனம் பாரமாகியிருந்தது. தலைமுறை தலைமுறையாக இவர்கள் தினக்கூலிகளாக... குழந்தையை பாதுகாப்பாக விட்டுச்செல்லக்கூட இடமும் உறவுகளும் இன்றி, ஆபத்தான கிருமிகள் உலவும் குப்பைகளை குழந்தைகளுடனே கிளறிக்கொண்டு... 


நம் அரசுகள் இலவசங்களை வழங்குவதில் ஒரு பகுதியை மடைமாற்றி இப்படி தினக்கூலிகளாய் செல்வோரின் குழந்தைகளையும் முதியவர்களையும் நாள்பொழுது முழுவதும் பத்திரமாய் பார்த்துக்கொண்டு உணவளிக்கும் திட்டம் ஒன்றை ஊர்தோறும் உருவாக்கலாமே. அந்த திட்டம் ஏராளமான பேருக்கு வேலைவாய்ப்பு தருவதோடு மட்டுமல்லாது இவர்கள் போன்ற vulnerable மக்களின் வாழ்வாதரமும் மேம்படுமே என்றெல்லாம் எண்ணங்கள் மனதில் அதிர்வுகளை ஏற்படுத்த, எங்கிருந்தோ ஒரு பாடலை நினைவு இழுத்துவந்து மேலும் சோகம் சேர்த்தது...

'அந்தரத்தில் தொங்குதம்மாஆஆஆ சொந்தமேதுமில்லாத ஏழ வாழ்க்க


முந்தியிங்கு வந்ததம்மா, வந்ததிங்கு என்னதென யார கேக்க

...

எம் மண்ணு எனைப்பாக்க நாந்திரும்பி அதப்பாக்க ஏழேழு தலமுறயும் இதுபோல போனதம்மா...' எனப்போகும் மேற்குத்தொடர்ச்சிமலை படப்பாடல்.


விஸ்வகர்மா திட்டம் பார் என மத்திய அரசு முழங்க, கலைஞர் கைவினை திட்டம்தான் நல்லது என மாநில அரசு முறுக்க, இடையில் நைந்துகிடக்கிறது இவர்கள் போன்ற பலப்பல மக்களின் வாழ்க்கை.


அம்மையார், மாமா, அம்மா, அப்பா, ஐயா, விஸ்வகுரு என பலர் வந்துபோனாலும் நம் நாட்டில் நலிந்தோரின் வாழ்வு சிறக்க கடந்த முப்பது ஆண்டுகளில் பலன் தரக்கூடிய நிலையான திட்டங்கள் எவையும் செயல்பாட்டில் இருப்பதாக தெரியவில்லை. இவர்கள் போன்ற நலிந்த மனிதர்களிடம்கூட கேட்டு வாங்கிக்கொள்ள நம் எதிர்கால அரசியல் தலைவர்களுக்கு இருப்பது இவர்களது ஓட்டு மட்டுமே. We have miles to go before they (poverty stricken people I mean; not the politicians!) sleep comfortably.


பேரன்புடன்,

பாபுஜி

கருத்துகள்

  1. பெயரில்லா2 மே, 2025 அன்று 11:13 AM

    நிதர்சனம். இந்த குரல்/ இதனைப் போன்ற பதிவுகள் ஒருநாள் மக்களவையில் ஒலிக்க பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...