முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அன்பாலே கூடு கட்டுவோம்



பறவைகள் எதுவும் தேவைக்கதிகமான அளவில் கூடு கட்டுவதில்லை.


எத்தனை குஞ்சுகள் உருவாக்கலாம் என்கிற தெளிவான உள்ளுணர்வுடன், தன்னுழைப்பில் மட்டுமே அவை கூடுகளை உருவாக்குகின்றன. எதிர்காலத்திற்கென கூடுதல் அறைகள் அறவே கிடையாது.


அந்த கூடென்பதும் வெறும் தாவரக்கழிவுகளால் மட்டுமே...


அந்தக்கூட்டில் குஞ்சுகள் காலுதைத்து சிறகு விரித்து பறக்க வெளியேறும்வரை அவற்றை வளர்ப்பது தாய்ப்பறவையின் உடற்சூடு மட்டுமே, அது தரும் கதகதகப்பு மட்டுமே.

காற்று மழை புயல் வெயில் கடுங்குளிர் இடி மின்னல் தாண்டியும் வாழும் இக்கூடுகள், மரம் சாய்ந்தாலோ கிளை முறிந்தாலோ மட்டுமே மண்ணில் வீழும்...

சிறகு விரிந்த குழந்தைகள் எல்லாம் வாழ்வு பழக வெளியேறிய பின்பு தாய்ப்பறவையும் அதன் இணையும் அந்தக்கூடுகளில் தங்குவதும் இல்லை...

பறவையைக்கண்டோம் விமானம் படைத்தோம் என மார்தட்டும் மனிதக்கூட்டம் மட்டுமே பறவைகளிடம் இருந்து வாழ்விடம் அமைப்பதைக்கூட இன்றுவரை கற்றுக்கொள்ளவில்லை.


நினைத்த காலத்தில் நினைத்த இடத்தில் தன்னுழைப்பு மட்டுமே கொண்டு கட்டப்படும் அற்புதத்கூடுகள் எவற்றையும் மனிதர்கள் ஏனோ கொண்டாடுவதே இல்லை.

வீடென்பது உடல் இளைப்பாறும் இடம் என மட்டுமே என மனிதர்களின் புரிதல் தவறாகவே இருக்கிறது இன்றுவரை. இவர்களின் வீடுகளில் தேவைக்கதிகமான அறைகளிருந்தாலும் சிறகுகளின் கதகதப்பு மட்டும் இவர்களின் குழந்தைகளுக்கு கிட்டுவதில்லை. இந்த கதகதப்பு கிட்டாத குழந்தைகள் எவரும் முழுவதும் வளர்வதில்லை...

ஐந்து தலைமுறைகளாக சோதனைச்சாலை கூண்டில் வளர்ந்த ஒரு பறவையினத்தின் ஒரு வளர்ந்த குஞ்சை திறந்துவிட்ட சில மணி நேரங்களிலேயே அது தனக்கான கூடு ஒன்றை இயல்பாக பின்னத்தொடங்க, வியப்பில் உறைந்து நின்ற ஆய்வாளர்கள் பற்றிய பதிவுகளை ஏராளமாய் பார்த்திருப்போம். மனிதக்குழந்தைகளை இதே இடத்தில் பொருத்திப்பார்த்தால் நமது வாழ்வு முறையின் அபத்தங்கள் உணர்வோம் நாம்.

செயற்கை நுண்ணறிவுக்கு எட்டாக்கனி நம் மரபறிவு. இது ஒன்று மட்டுமே நம் உலகை மீட்கும், காக்கும்.

பேரன்புடன்,

பாபுஜி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...