முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நகரம்

அதிகாலை குளிர் காற்றில் விரையும் லாரி.


லாரியின் திறந்த முதுகில் நின்றவண்ணம் பயணிக்கும் மூவர்; தொழிலாளர்கள்.


குலுங்கி நகரும் அந்த லாரியில் மூவரில் ஒருவன் தன்னைச்சுற்றி இரைச்சலோடு விரையும் வாகன புகை, ஓசையின் ஊடாக கைபேசியினை தன் முகத்திற்கு முன்னே உயர்த்தி தன்னைத்தானே படம் எடுக்கிறான் உலகை வென்ற புன்னகையணிந்து. சிவப்பு பச்சையாகி லாரி வேகமெடுப்பது கூட அவனது தவத்தை கலைக்கவில்லை.


பெரு நகர சாலையோரம் சுகாதார பணியாளர் ஒருவர் கையில் தரை பெருக்கும் நீள்குச்சி துடைப்பத்தை தரை தட்ட இழுத்துக்கொண்டே மெல்ல நடக்கிறார் சன நெரிசலில். குப்பைகள் எதையும் நகர்த்தாமலே தரைமீது தவழ்ந்து செல்கிறது துடைப்பம்.


'நகரு நகரு' என குரல் கொடுத்துக்கொண்டே சுமக்க முடியாத காய்கறி கூடையை சுமந்து சந்தையின் சேற்றுப்பாதையில் வெளியேறுகிறான் ஒரு திடகாத்திர இளைஞன். 'எதை நகரச்சொல்கிறாய்? இந்த உடலையா அல்லது ஆன்மாவையா?' என யாரும் கேட்கவில்லை.


அவன் சுமையை வாங்கிக்கொள்ள வெளியில் காத்திருக்குது பல கூடைகள் சுமந்த வாகனம் ஒன்று.


காலை அலுவலகம் செல்லும் வழியில் சந்தையில் நுழைந்து, இரவு உணவுக்கென கரிசனமாய் காய்கறிகள் வாங்கி அலுவலகத்திற்கு சுமந்து செல்லும் சில இளம் மனைவிகள். அவர்களை மட்டுமே அலுவலகத்திலும் தொடரும் அடுக்களை கவலைகள்.


சந்தையின் கடுங்கூட்டத்தில் சொற்கள் நுழைய மட்டுமே இடமிருக்கும் இடைவெளியில் தேநீர்க்குடுவை சுமந்து வாடிக்கையாளர்களை நோக்கி சலனமற்ற முகம் தாங்கி விரையும் மெல்லிய உடலமைப்பு மனிதர் ஒருவர்.


பல நிலங்களிலிருந்து அதிகாலையில் சந்தைக்கு வந்து இறங்கிய புத்தம்புதிய காய் கனிகளுக்கு இடம் தந்து அழுக்கு கோணிகளில் ஓரமாய் ஒதுங்குது நேற்றைய 'புதிது'.


எல்லாமே பசுமையாய் சொலிக்கும் சந்தையில் கசங்கலாய் கந்தலாய் சுற்றுது 

ரூபாய் நோட்டுகள் மட்டும்.


புத்தம்புதிய காய்கனிகளை பழைய நோட்டுகளுக்கு பண்டமாற்று செய்யுது புதிய உலகின் வணிகம்.


வணிகச்சுழலில் சேர்த்துவிடும் அவசரத்தில் மூன்று குழந்தைகளை வாகனத்தில் இடுக்கிக்கொண்டு பள்ளிக்கு விரையும் கேசம் கலைந்த தகப்பன்.


நித்தம் நித்தம் நம் உலகு வரையும் இந்தக்கோலம் அலுப்பதில்லை யாருக்கும்.


ஒற்றை உலகில் பலப்பல உலகம் பலப்பல கோலம். உற்று நோக்கவும் எட்டிப்போகவும் எப்போதும் போல மனிதர்கள்...


பேரன்புடன்,

பாபுஜி


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்