முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இறை தரிசனம்

எண்ணெய் தேய்த்து படிய வாரிய தலை. தலையில் க்ளிப்பின் பிடிப்பில் ஒரு துண்டு மல்லிகைச்சரம்.

மிக மிக நேர்த்தியாக தொடுக்கப்பட்ட சரம். அணிபவரை மனதில் நிறைத்து தொடுப்பவர் தொடுத்த சரம். அதில் பொங்கி வழியுது தாயன்பு.


ஆகாய நீல மேல்சட்டையெங்கும் கரு நீல சதுரங்கள். கரு நீலத்தில் நனைத்த கீழாடை.

சைக்கிளின் முன்னிருக்கையில் அச்சிறுமி. பின் இருக்கையில் நேர்த்தியாக வெட்டப்பட்ட, படிய வாரப்பட்ட தலைமுடி கொண்ட அவளது அண்ணன், சிறுவன்,  அவளது சீருடை வண்ணத்திலேயே அவனதும்.


இருவரையும் சுமந்த சைக்கிளை கவனமாக மிதித்து முன்செலுத்தும் தகப்பன், ஏழ்மை அப்பிய முகம், வறிய உடை, கிள்ளியெடுக்க சதையில்லை. 


அந்த காலை வெயிலில் ஒரு தேசிய நெடுஞ்சாலையின் நாற்கர சந்திப்பில், அவசர கதியில் விரையும் எண்ணற்ற வாகன மனிதர்களின் இடையில் ஒளிரும் அவனது கண்கள், அதில் தெரிந்த எச்சரிக்கை உணர்வு...


இயந்திர ஆற்றலின் துணை கொண்டு விரைந்துகொண்டிருந்த சனத்திரளில் தன் சொந்த ஆற்றலில், தன் எதிர்காலத்தை தன் சைக்கிளில் முன்னும் பின்னுமாய் அமர்த்தி நிகழ்கால நொடியில் மட்டுமே கவனத்துடன் மிதித்துச்சென்ற அவனது முகம் போன்ற அமைதியான, நம்பிக்கை தரும், மகிழ்வு தரும் மனித முகமொன்றை நான் நெடுங்காலமாக பார்த்ததில்லை.


ஒரு சாலை சிக்னலில் சில நிமிட வாகன நிறுத்தலில் அவனது சைக்கிள் மெல்ல என்னைத்தாண்டிச்சென்ற அந்த சில நொடிகள், நம் ஆன்மீகம் கால காலமாய் நம்மை உணர வைக்க முயலும் 'இறை தரிசன' நொடிகள்.


வாழ்வு எளிது. வாழ்தல் இனிது. அதனினும் இனிது 'நிகழ்நொடியில்' வாழ்தல்.

நம் அனைவருக்கும் இந்த வரம் தொடர்ந்து கிட்ட அந்த ட்ராஃபிக் சிக்னலிடம் ப்ரார்த்திக்கிறேன்!

பேரன்புடன்,

பாபுஜி


பின் குறிப்பு 1: சிறு வயதில் ஓவியம் கற்காமல் போனதை எண்ணி வருந்தவைக்குது இதுபோன்ற தருணங்கள். வரையத்தெரிந்திருந்தால் மனதில் பதிந்த காட்சியை வரைந்து இணைத்திருப்பேன்.

மொபைல் கேமராவில் புகைப்படம் எடுக்கக்கூட தோன்றாமல் மனது அந்தக்காட்சியில் ஒன்றிப்போயிருந்தது.

என்னதான் புகைப்படக்கலையை ஓவியன் போல பயன்படுத்த நான் முயன்றாலும் புகைப்படங்கள் அனைத்தும் ஓவியங்களாகாதே!


பின் குறிப்பு 2: முன்னொரு நாளில் புழுதி படிந்த சிறுநகரமொன்றில் என் தகப்பன் தன் சைக்கிளில் என்னை பின்னிருக்கையில் அமர்த்தி  எதிர்காலத்திற்கு மிதித்துச்சென்றதும் நினைவில் வந்தது. அன்றும்கூட அந்தச்சாலையில் பயணித்த யோரோ சிலருக்கு இறை தரிசனம் உணர்த்திய நொடியாக அதுவும் இருந்திருக்கலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்