முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இதனால் சகலமானவர்களுக்கும்...

 


முரண்கள் நிறைந்த ஒரு பெருஞ்சமூகத்தில் சீராய் இயங்கும் சில புள்ளிகளில் இவனும் ஒருவன்.

தன் பெயரை வெளியிட வேண்டாமென கேட்டுக்கொண்டதால் இவனை "இவன்" என்றே அழைக்கலாம்.

கண் முன்னே வாழ்வின் தடம் பிறழ்வதை கவனிக்கும் வயது இல்லாவிட்டாலும் தன்னைச்சுற்றி  ஏதோ தவறாகிக்கொண்டிருப்பதை இவனால் சிறு வயதிலேயே உணர முடிந்திருந்தது, ஆனால் பகிற, வினா எழுப்ப, விடை தர, உரையாட யாருமில்லை. இத்தனைக்கும் அவன் வசித்த ஊரில் அவன் வயது சிறுவர்கள் ஏராளமாய் இருந்தாலும் இவன் பேச முயன்ற முரண்கள் யாருக்கும் புரிபடவில்லை. எனவே தனிமையில் தன்னோடு தானே உரையாடத்தொடங்கினான்.

அன்று தொடங்கியது, பல ஆண்டுகள் தொடர்ந்தது. ஒவ்வொரு கனத்த சிக்கலும் சமூகத்தில் முளைத்து வளரும்போதெல்லாம் எங்காவது ஒரு தேநீர் விடுதியில் இவன் தனியே ஆழ்ந்த சிந்தனையில் மௌனமாய் உரையாடிக்கொண்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம்.அப்படி சந்தித்திருந்தாலும் மனதில் பதியாமல் நீங்கள் நகர்ந்து, கடந்து சென்றிருக்கவே வாய்ப்பு மிகுதி. 

பல காலம் விலையின்றி கிடைத்த அனைத்தும் இன்று விலை தந்தாலும் கிடைக்காதது, விலையுயர்ந்தவை என அறிமுகமானவை பல விலை மலிவாய் அனைவர்க்கும் கிடைப்பது...  தன்னைச்சுற்றியுள்ள சமூகத்தில் பெரும்பான்மையினர் எப்பொழுதும் இயல்பற்ற தவிப்போடு / கவலையோடு / வன்மத்தோடு / வருத்தத்தோடு / ஏதாவது ஒரு மயக்கத்தில்  உழல்வது என பலப்பல சிக்கல்கள். இவை அனைத்திற்கும் இவனே கண்டுபிடித்த விடைகள் மிக எளிதானவை, இவன் கடைப்பிடிப்பவையும் கூட. ஆனாலும் இவன் சொல்வது எதையும் கேட்பதற்கோ நம்புவதற்கோ யாருமில்லை, அவர்களுக்கு நேரமுமில்லை.

நல்ல நாள் கெட்ட நாள் அடைமொழிகளின்றி நகர்ந்த ஏதோ ஒரு நாளில் நல்ல நேரம் கெட்ட நேரமற்ற ஒரு பொழுதில் இவன் காணாமல் போனதைக்கூட யாரும் பெரிதாய் பொருட்படுத்தவில்லை.

பிறிதொரு நாளில் உலகின் அனைத்து வழிபாட்டிடங்களிலும் உள்ள நிர்வாகிகளின் கனவில் அவரவர் கடவுள்கள் தோன்றி வேறொரு நாளை குறிப்பிட்டு அன்று ஒவ்வொரு வழிபாட்டிடங்களிலும் கடவுள்கள் தோன்றி ஒரு அவசரமான, அவசியமான தகவலை மக்களிடம் பகிரப்போவதாக சொல்லி மறைய, உலக மக்களனைவரும் சமூக ஊடகங்களின் "கவுண்ட் டவுன்" பரபர அறிவிப்புகளால் பித்த நிலை ஏகி தம் தம் வழிபாட்டிடங்களுக்கு விரைய, "கடவுளில்லை" என்கிற நிலைப்பாட்டில் இருப்பவர்களும் ஆர்வம் உந்த மாறுவேடங்களில் அருகிலுள்ள வழிபாட்டிடங்களை நாட, குறிப்பிட்ட அந்த நாளின் அந்த நிமிடமும் வந்தது.

பெருவணிக உலகம் தன் வணிக வேலைகள் அனைத்தையும் தற்காலிகமாக நிறுத்தி 'இந்த நிகழ்வை நேரலை வணிகமாக்குவது எப்படி?' என விற்பன்னர்கள் நிரம்பிய குழுக்கள் அமைத்து அலசி ஆராய்ந்து வியூகங்கள் வகுக்க, அரசுகளும் 'தங்களது மேலாண்மைத்திறனில் மகிழ்ந்துதான் கடவுள்கள் தங்கள் நாட்டில் காட்சி தரப்போகிறார்கள், தங்கள் நாட்டில் மட்டுமே காட்சி தரப்போகிறார்கள்!' என விளம்பரங்களை பரப்புவதில் முழு வீச்சு காட்ட, நம் உலகின் எழுநூற்று சொச்ச கோடி மக்களும் உச்ச ஆர்வத்துடன் காத்திருந்த அந்த நொடியும் வந்தது.

அவரவர் கடவுள்கள் தங்களுக்கென மக்கள் கட்டிவைத்திருந்த வழிபாட்டிடங்களில் ஒரே நேரத்தில் தோன்றினர்.

அவரவர் கடவுளை அவரவர் கற்பனை வடிவிலேயே நேரில் முதல் முதலாய் பார்த்த பரவசத்தில் பேச்சற்று நின்றனர் மக்கள் உலகெங்கும். 

ஒட்டு மொத்த கடவுள்களும் அன்று சொன்னது ஒற்றைச்செய்தி, உலக மக்கள் அனைவருக்கும் ஒரே செய்தி.

"இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்...

பெற்றோரின் எதிர்பார்ப்பு, ஏக்கங்கள், கவலைகள், வருத்தங்கள், பயங்களினூடாகவே உலகை அணுகும் குழந்தைகள் போல,

பெற்றோருக்கு உகந்தவை
செய்தால் மட்டுமே விரும்பப்படுவோம் என ஒவ்வொரு நொடியும் உணர்ந்து வளர்ந்த குழந்தைகள் போலவே கடவுள்கள் நாங்களும் பல ஆயிரமாண்டுகள் உங்களது உலக கோட்பாடுகள் வழி வாழ முயன்றோம்.

ஆனாலும் எங்களை "வன்மம் வளர்க்கும் கருவிகளாகவே" பயன்படுத்தி எங்கள் பெயரால் நீங்கள் உலகெங்கும் சக மனிதர்களையும் ஏனைய உயிர்களையும் வெறுப்பதையும் அழிப்பதையும் தொடர்ந்து காணப்பொறுக்காது உங்களை திருத்த நினைத்து இந்த நூற்றாண்டில் உங்கள் வடிவிலேயே பல பிறவிகள் எடுத்து உங்களிடையே பயணித்தோம்.

"இவன்" என்பவன், கடவுளின் வடிவமே.

உலகின் மூலை முடுக்குகள் எங்கும் சில நூறு பேருக்கு ஒரு "இவன்" என நாங்கள் ஊடுருவி நன்மைகள் உணர்த்த எவ்வளவு முயன்றாலும் கேட்பதற்குக்கூட நீங்கள் ஆயத்தமாக இல்லையே!

எங்கள் முயற்சி முற்றிலும் தோற்றதை காணச்சகியாது எங்கள் மானுட வடிவங்களை நாங்கள் திரும்ப அழைத்துக்கொண்டோம். நேற்றுவரை உங்களிடையே இருந்த ஒருவன் திடீரென காணாமல் போனதைக்கூட கவனிக்க இயலாத அளவு மயக்கத்திலுள்ள உங்களிடம் இறுதியாக ஒன்றை சொல்லிச்செல்லவே வந்தோம்...

கடவுள்களின் பூமியில் தங்கிச்செல்ல வந்த நீங்கள் அனைவரும் இந்த பூமியை ஒரு மிகச்சிறிய காலவெளியிலேயே கடவுள்கள் வசிக்க இயலாத பூமியாக மாற்றி விட்டீர்கள். எனவே நாங்கள் இங்கிருந்து நாங்கள் படைத்த பேரண்டத்தில் மனிதர்கள் இல்லாத வேறு வீடு போகிறோம்.

இங்கு நாங்கள் திரும்பி வரப்போவதில்லை. உங்களுக்கு இந்த பூமியை விட்டால் வேறு போக்கிடமில்லை.

போகிறோம்.

எழுநூற்று சொச்ச கோடி மக்களும் அமைதியில் உறைந்து நின்றது சில நொடிகள் மட்டுமே. அந்த அமைதியை திடீரென கூட்டத்துள் எழுந்த ஒரு குரல் உடைத்தது. "ஹேய், இவர்கள் கடவுள் மறுப்பாளர்கள்! மாறு வேடங்களில் நுழைந்திருக்கிறார்கள். நம்மிடையே பிரிவினை வளர்ப்பதற்காக!!" என ஒரு குழுவினர் இன்னொரு குழுவினரை நோக்கி கை காட்டி முழங்க, அடுத்த நொடியில் உலக மக்கள் தம் இயல்பு வன்மத்திற்கு மீள... மேலிருந்து பார்த்துக்கொண்டிருந்த பேரண்ட ஒற்றை இறையின் முகத்தில் புன்னகை ஒன்று படர்ந்து மறைந்தது.

அன்றிலிருந்து நம் பூமி, "இறை மறுப்பாளர்கள் மட்டுமே வாழும் கோளம்" என பால் வீதியில் அறியப்படலாயிற்று.


பால் வீதியில் வேற்று கிரகங்களில் வாழும் உயிரினங்களோடு தொடர்பு கொள்ள பூமியின் தலையாய அறிவியலாளர்களும் பெரு வணிகமும் பகீரத முயற்சிகள் மேற்கொண்டும் இன்று வரை அது போல எந்த உயிரினங்களும் நம் தொடர்பு வட்டத்திற்குள் வரவே இல்லை.

எப்படி வரும்?


பேரன்புடன்,
பாபுஜி

PC: NASA

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்