மூக்கு அறுபட்டபின் சீதையின் இருப்பு ராமனுக்கு தெரியாது.
சீதை தொலைந்தபின் அனுமன் வழி மீட்புப்பாலம் அமைக்கும் வரை சீதையின் கற்பு ராமனுக்கு தெரியாது.
ராவணன் அறிந்த சீதையின் கற்பு, ராம நாட்டு மக்களுக்கும் தெரியாது.
அறுபதினாயிரம் மனைவியர் கொண்ட தசரதனின் ராமன், சீதையற்று இருந்த காலத்தில் அவனது கற்பு பற்றி கேள்வி கேட்காத ராம நாட்டு மக்கள், சீதையை கண்டபின் அவளது கற்பு பற்றி கேள்வி எழுப்பியபோது "கிடக்கிறார்கள் இந்த மட மக்கள். நானிருக்கிறேன் துணையாய்!' என இறைமானுடம் ஏன் அவள் கரம் பிடித்து தீயுள் நுழையவில்லை என்பது யாருக்கும் தெரியாது.
அனைத்தும் அறிந்திருந்த தீ சீதையை திருப்பித்தந்த பின்னும் அவளது கற்பை சந்தேகித்த சில மக்களை தண்டிக்காது, சூலுற்றிருக்கும் சீதையை ராமன் வனம் போகச்சொன்னது ஏன் என்பது சீதைக்கும் தெரியாது. அவளை கானகத்தில் விட்டு திரும்பிய லக்ஷ்மணனுக்கும் தெரியாது.
குழந்தைகள் பிறந்ததோ, நிகர்-ராமர்களாக வளர்ந்ததோ, ராமனின் யாகக்குதிரையை கானகத்தில் அவர்கள் கட்டி வைத்ததோ ராமனுக்கு தெரியாது.
தன் குழந்தைகள் என தெரிந்ததும் அவர்களை உச்சி முகர்ந்து நாட்டில் அழைத்துக்கொள்ளும்போதும் குடிமக்கள் இவர்களது பிறப்பு குறித்து ஐயம் எழுப்பலாமே என ராமனுக்கு தெரியாது.
அனைத்தும் அறிந்திருந்த சீதை தன் தாய்மடியில் காணாமல் போனது ஏனென ராமனுக்கும் தெரிந்திருந்தது, லக்ஷ்மணனுக்கும் தெரிந்திருந்தது, அவர்களை மௌனமாய் விழுங்கிக்கொண்ட சரயு நதிக்கும் தெரிந்திருந்தது...
ராம நாட்டு பிரஜாபதிகள் அறிந்திராத இன்னொரு உலகில் சீதைக்காக ஒரு உபநிடதமே இயற்றப்பட்டிருக்கிறது. ( Sita Upanishad). இவ்வுலகின்அனைத்து உயிராற்றலுக்கும் உயிர் தரும் ஆற்றல் அவளே என்கிற இந்த நூல், கடைவேதம் என அழைக்கப்படும் அதர்வண வேதத்தில் ஒளிந்திருக்கிறது...
கருத்துகள்
கருத்துரையிடுக