முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சொல்!

 


சொல்லின் மூலம் எது?


உணர்வு. 


உணர்வின் வெளிப்பாடாகவே சொற்கள் சிதறிக்கிடக்கின்றன நம்மைச்சுற்றி.


உணர்வில் தோய்ந்த சொற்கள் மனிதர்களை சேர்க்கும், உடைக்கும், இணைக்கும், பிரிக்கும், இன்னும் என்னவெல்லாமோ செய்யும். அதன் ஆற்றல் அது ஊறிய உணர்வில் இருந்து கிடைப்பது.


சேர்த்து, உடைத்து, இணைத்து, பிரித்து என செயல் எதுவென்றாலும் அத்தனைக்கும் வலு சேர்க்கும் உணர்வுகளின் உறைவிடம் என்னவோ சொற்களற்ற அடர்மௌனம்தான்.


அமாவாசை நிலவு தந்த இருள் கப்பி போல, உணர்விலிருந்து வெளிப்படப்போகும் சொற்கள் அனைத்தையும் கவ்வியிருக்குது அடர்மௌனம், சுண்டப்பட்ட துப்பாக்கியின் குண்டுகள் புறப்படும் முன்னான மௌனம் குண்டுகளை கவ்விக்கொண்டிருப்பது போல.


ஒரு விதத்தில் சொற்களும் கருந்துளைகள் போன்றவையே (Black Holes).


அடர்மௌனத்திலிருந்து வெடித்து வெளிப்பட்டு குண்டு போல சொல்லொன்று உள் நுழைந்து தசையறுத்து உள்வெடித்து வலி தந்து உள்ளனைத்தையும் தகர்த்து தன்னுள்ளே இழுத்துக்கொள்ளும்.


இது ஒருபுறம் என்றால், மௌனம் அணிந்த பார்வையொன்றே ஓராயிரம் சொற்கள் போல வாழ்வின் நம்பிக்கையை நீட்டிக்கும் இன்னொருபுறம் மௌனமாய்.


சொற்களற்ற, ஏன், மொழிகளே அற்ற உலகில் வன்முறைகள் குறைவாகவே இருந்திருக்கக்கூடும். அவை அனைத்தும்கூட உணவு சார்ந்ததாகவே இருந்திருக்கக்கூடும்.


மொழி வளர்ச்சியோடு உலகம் வளர்ந்திருந்தால் வன்முறைகள் இன்னும் குறைந்து, இல்லாமலே கூட போயிருக்கலாம். ஆனால் இன்னும் நிகழவில்லை.


நிகழும் என உறுதிகூறவும் யாருமில்லை.


உணர்வுகளை கடத்த மொழிகள் ஒருபோதும் உதவாது. அவை எப்போதுமே ஓட்டைப்பாத்திரங்கள்தான் - சிந்தியது தளும்பி வழிந்த்து போக சேர்ந்தது குறைவாக / மாறிப்போன வேறொன்றாக கூட இருக்கும்.


சொற்கள் தொடங்கி வைத்த பெரும்பாலான யுத்தங்கள் மௌனத்தில் மட்டுமே தொடர்கின்றன, மௌனத்தில் மட்டுமே, புறக்கணிப்பில் மட்டுமே முடிகின்றன.


மௌனத்தை விட சிறந்த மாற்று நம் உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.


அரிதினும் அரிதாக சிலருக்கு மகிழ்வான முடிவும் கிடைத்துக்கொண்டுதான் இருக்கிறது.


கலைஞர் கருணாநிதிக்கு ஒரு பதின்வயது காதல் இருந்தது. 


நிறைவேறாக்காதல் இது.


மூன்று மணம் முடித்து பெருவாழ்வு வாழ்ந்தபோதும் நிறைவேறாதிருந்த காதலின் வெற்றிடம், அவரது முன்-முதிர்வு வயதில்தான் நிரம்பியதாம் (அதாவது, 60-75. நமக்கெல்லாம் பால்யம் 0-12, பதின்மம் 13-19, இளையம் 20-40, நடுவம் 40-60, முதிர்வு 60+ என்றால் அவர்போன்ற சிலர் மட்டும் முதிர்விலும் முன் முதிர்வு, நடுவம், அந்திமம் என முதிர்விலும் மூன்று காலங்கள் கண்டவர்கள்).


அறுபது வயது தாண்டிய பின்னான ஏதோ ஒரு காலவெளியில் அவரது பதின்ம வயது காதலியை அவர்போலவே வயதான தோற்றத்தில் ஒரு திட்டமிடாத நொடியில் மீண்டும் எங்கோ சந்தி்த்து கடந்த அந்த நொடியில், முத்தமிழ் காவலர் வித்தகர் அவரின் நாவில் சொற்கள் மரித்துப்போய் பார்வைகள் மட்டுமே மௌனமாய் பேசிய காவிய நொடியில், நிரம்பியதாம் அவரது பதின்பருவ மனதின் வெற்றிடம். காதல் படிக்கட்டுகள் என்கிற நூலில் அவர் பகிர்ந்திருந்ததாய் நினைவு.


சொற்களற்ற பயணத்தை தேடி அலைகிறது பெரு வாழ்வு. அதிலொரு வழிப்போக்கன் நான். என் பயணத்தில் உங்களை எங்காவது எதிர்கண்டால் மௌனமாய் கடப்பேன் என்றே தோன்றுகிறது :-) 


பேரன்புடன்,

பாபுஜி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்