முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

துருவ யுத்தம்!

 

நான்கு தட்பவெப்ப நிலைகள் மட்டுமே கொண்ட ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் இல்லாத இன்னும் இரண்டு நிலைகள் / காலங்கள் நம்மிடையே இருந்தது. 


அந்த இரண்டும்தான் நம் வாழ்வியலை, இயங்கியலை (dynamics) அவர்களது போர்க்கறை படிந்த வணிகப்பேரரசுகளிடம் இருந்து வேற்றுமைப்படுத்தியது, மேம்படுத்தியது.


இள வேனில், முது வேனில் என வசந்த காலத்தின் இரு பிரிவுகள் (அவர்களுக்கு வசந்த காலம் என்ற ஒன்று மட்டுமே), 

முன் பனி, பின் பனி என குளிர் காலத்தின்இரு பிரிவுகள் (அவர்களுக்கு குளிர் காலம் என்ற ஒன்று மட்டுமே) 

என தலா ஒவ்வொன்று நமக்கு கூடுதலாய், அதுதான் அந்த இரண்டு வேற்றுமைக்காரணிகளா?


இல்லை!


நம்முடனிருந்த நாட்டு மாடுகளும் கூட்டுக்குடும்பமும்தான் அந்த இரண்டு காலங்கள், காலமாகிப்போன காலங்கள்.


நாட்டு மாடுகள் நம்மோடு இருந்தவரையில் தற்சார்பு இருந்தது. நெல்லுக்கும் பயிருக்கும் வழிந்தோடி உயிர் நனைத்த நீர் கசிந்தோடி விளிம்பு நிலம் நனைத்து புல் வளர்த்து புல்லை உரமாய் பாலாய் தயிராய் வெண்ணெயாய் நெய்யாய் மாற்றி... உழைப்பைத்தரும் காளைகளாகவும் மாற்றிய அந்த பேராற்றல் உயிரினங்களை பால் வணிகமும் இயந்திர வணிகமும் கெமிகல் வணிகமும் வலைகள் விரித்து சிக்கவைத்து துப்புறவாய் அப்புறப்படுத்த, சிக்கிக்கொண்டோம் நாம் எல்லோரும்.


கூட்டுக்குடும்பத்தில் இருந்தவரை யாருமே தனிமையில் வாடி முடங்காத சமூகமாக வாழ்ந்திருந்தோம். உணவு உடை உறையுள் உடல்நலம் பாதுகாப்பு மகிழ்ச்சி எல்லாம் நமக்கு நாமே என பல தலைமுறைகள் இணைந்து நெய்த ஆடையை, நம் மானம் மற்றும் வாழ்வியல் காத்த ஆடையை பொத்தலிட்டு கிழித்தெறிந்தது பேராசைப்பெருநுகர்வு உலக வணிகம். இன்னும் எஞ்சியிருக்கும் சில நூலிழைகளை கூட நீங்கள் இப்பதிவை படித்துக்கொண்டிருக்கையில் உருவிக்கொண்டிருக்கிறது உலகமயமான அவ்வணிகம்.

பூமிக்கு பாரமின்றி தலைமுறைகள் பல சேர்ந்து வாழ்ந்த ஒற்றை வீடு தகர்க்கப்பட்டு இன்று தலைக்கு ஒரு வீடு என தொடங்கிய சுற்றுச்சூழல் அழிவு, இன்று நம் ஒவ்வொருவரையும் தனி 'லாபம் வழங்கும் புள்ளி'களாக (individual points of profit generators for big business).

ஒரு தொலைக்காட்சியில் இருபது பேர் கொண்ட குடும்பம் கூடி நிகழ்வுகள் பார்த்தபோது ஒளிபரப்பில் நேர்மையிருந்தது, கண்ணியமிருந்தது, தலைமுறைகள் மீதான அக்கறை இருந்தது.

இன்று இருபது தலைகள் நாற்பது கைகள், கைக்கொரு smart watch, 4G enabled mobile phone என, அவரவர் விருப்பம் அவரவருக்கே என information overdrive இல் கண்காணிப்பு எதுவுமின்றி வாரி வழங்கிக்கொண்டிருக்கிறது. அவர்களை விடாதுகண்காணித்துக்கொண்டுமிருக்கிறது.


அன்றைய பெருவணிகத்தின் முதல் எதிரி கூட்டுக்குடும்பமென்றால் இன்றைய பெருவணிகத்தின்  முதல் எதிரி நம் குடும்பம். நம் குடும்பங்கள் எல்லாம் குடும்பமாய் இருக்கும் வரையில் அவர்களுக்கு கிடைக்கும் வருமானம் நம் குடும்பம் தனி மனிதர்களாக, தனி நுகர்வோர்களாக மாறிப்போனால் பல மடங்கு பெருகும்தானே? (From consumer families to individual consumers காப்பீடுகளும், பாதுகாப்பு செலவினங்களும், உணவு செலவினங்களும் பெருகியது கூட்டுக்குடும்பத்தை வணிகம் உடைத்ததனால்தானே) 

இப்போது இந்த சேவைகளின் நுகர்வோரை பெருக்க, லாபத்தை உயர்த்த அவ்வணிகம் செய்யவேண்டிய ஒரே செயல் நம் குடும்பங்களை உடைப்பதுதானே!

ஒரு சின்ன உதாரணம்: எனது தலைமுறை பல்பொருள் அங்காடிகளையும் உணவுக்கூடங்களையும் முதன் முதலாய் மிதித்தது எங்கள் பதின்ம வயதில் மட்டுமே. அதுவரை பெரியவர்கள் எங்களுக்காக அங்கு சென்று வாங்கி வரும் பொருட்களை மகிழ்வோடு ஏற்றுக்கொண்டோம், அவர்கள் திரும்பி வரை எங்களை பார்த்துக்கொள்ள மற்ற சொந்தங்களும் ஒரே கூரையின் கீழ் எங்களோடு இருந்தன).

இன்று நீங்கள் மேற்சொன்ன இடங்களில் சந்திக்கும் இளம் வயது பெற்றோர் தங்களது ஒற்றைக்குழந்தையை அல்லது இரண்டு குழந்தைகளை எங்கும் விட்டு வர இயலாமல் கையோடு அழைத்துக்கொண்டே சுற்றும் கட்டாயத்தில் அவர்களை நிறுத்தியது எது?

ஒரு வயது குழந்தைக்கும் Choice பழக்கப்படுவது அவ்விதமே. அந்தக்குழந்தைகள் கைகாட்டும் அனைத்தையும் வாங்கித்தரவேண்டிய நிர்பந்ததத்தில் பெற்றோர்கள்...

அங்கு தொடங்கிய "Spoiled for Choice" plus வயது வரம்பு இல்லாத information floatsome that they have been constantly exposed அவர்களை பொறுமையற்றவர்களாக, 'இல்லை' என்பதையே ஏற்றுக்கொள்ள இயலாதவர்களாக, பொறுப்பற்ற பெருநுகர்வே இயல்பான வாழ்வியலாக, சுயநலம் மிக்கவர்களாக, சர்க்கரை அழுத்த குழந்தைகளாக, இன்னும் என்னவெல்லாமோவாக நம் கண் முன்னே  வேகமாக மாற்றிக்கொண்டிருக்கிறது. நாமும் கவனிக்க நேரமின்றி ஓயாத தேடலில் மன அழுத்தத்தோடும் மலச்சிக்கலோடும் ஓடிக்கொண்டே இருக்கிறோம்.


இந்த narration இல் சமீபத்தில் சேர்ந்த புதிய கூட்டாளி, போதைப்பொருள்.

வரும் தலைமுறைகளை நம் பல்லாயிரமாண்டு நல்வாழ்வியலின் அத்தனை பிணைப்புகளில் இருந்தும்  வெகுவேகமாக துண்டிக்க வைத்து, பிணைப்பற்று உலவும் தனிமனித வணிக லாபக்குறியீடுகளாக மாற்றப்போகின்றன இந்த போதைப்பொருள்கள். எத்தனை எத்தனை இடங்கள்? எத்தனை ஆயிரம் சரக்குகள் பிடிபடும் நிகழ்வுகள்??


எந்த மேலை நாடுகளை பார்த்து ஏங்கி நாமும் அவர்களை போல வல்லரசாக மாற தினம் தினம் தவிக்கிறோமோ அந்த நாடுகளின் இளைய தலைமுறையினரின் இன்றைய வாழ்வியல் ஏனோ நம் சிந்தைக்கு எட்டமாட்டேன் என்கிறது. 

கடந்த இருபது ஆண்டுகளில் அங்கு நிகழ்ந்தவை எல்லாம் இன்று இங்கு நிகழ்கிறது.

ஒரு சிறிய உதாரணம்ம: 2000 ஆண்டுவாக்கில் மேலை நாடுகளின் சாலைகளில் விரைந்த பல விதமான வாகனங்கள் ஒவ்வொன்றிலும் ஒற்றை மனிதர் மட்டுமே பயணம் செய்து கொண்டிருந்தார்.

இந்த நிகழ்வு நம் சாலைகளில் இன்று விரையும் பெரும்பாலான நான்கு சக்கர வாகனங்களில் அரங்கேற நமக்கு இருபதே ஆண்டுகள்தான் தேவைப்பட்டது. (வண்டிக்கு நான்கு தலைகள் என இன்றும் விரையும் இருசக்கரதாரிகளின் எண்ணிக்கை வெகுவேகமாய் குறையப்போகிறது).


அதே போல இன்று அங்கு நிகழ்பவை எல்லாம் வரும் காலங்களில் இங்கும் நிகழ்வது உறுதி. ஆனால் நாம் இருபது ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதில்லை. ஏனெனில் நம் இன்றைய தலைமுறையினர் மேலை நாட்டு இளையோர் போலவே Instant Karma தலைமுறையினர். தொழில் நுட்ப தொப்புள்கொடி வழியே instant update mode இல் இருப்பவர்கள்.

அமெரிக்காவில் mindless துப்பாக்கி கொலைகள் ஒரு கலாசாரமாகவே மாறிப்போனது (உலகையே பாதுகாக்கும் அமெரிக்க நாட்டின் பாதி மக்கள் தொகை துப்பாக்கிகள் எங்களது தனி மனித பாதுகாப்புக்கு அவசியம் என்கிறது!). கடந்த இருபது ஆண்டுகளில் பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள், கடைகள், உணவகங்கள், மருத்துவமனைகள், வழிபாட்டிடங்கள், parking lots என இடம் பொருள் ஏவல் எதுவும் இன்றி இலக்கின்றி சுடப்பட்டு இறந்தவர்கள் ஆயிரக்கணக்கில்.

நம் நாட்டில் இதுவரை ராணுவ வட்டாரங்களில் மட்டுமே அவ்வப்போது நிகழும் துப்பாக்கி சூடுகள் இப்போது நம் வீதிகளிலும் நடக்கத்தொடங்கியிருப்பதை நம்மில் எத்தனை பேர் கவனித்திருப்போம்?!

கொல்கத்தாவில் ஒரு பரபரப்பான சாலையில் சில நாட்களுக்கு முன் (10.06/2022) இருசக்கர வாகனம் ஓட்டிச்சென்ற ஒரு மன நல மருத்துவர் ஏன் குண்டுகள் துளைத்து சாகவேண்டும்? அந்த இடத்தில் அன்று இருந்தது யாராக இருந்தாலும் சாவது உறுதி என முடிவு செய்தது எது?! அவரை சுட்ட காவலர் ஏன் இலக்கின்றி சாலையில் சென்றவர் மீது குண்டு மழை பொழிந்தார்?

...

We must be very very careful about what we wish for.


பேரன்புடன்,

பாபுஜி


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்