முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

1.5°


தாகங்கொண்ட மேகமொன்று

நீரருந்த இடம் தேடி காற்றில் விரைய,

படபடப்பாய் கீழாடுது ஆயிரம் உயிர்.


'மேகத்துக்கே தாகமென்றால்

நம் வேரெல்லாம் நனைவதெப்போ?'

என தகிப்பாய் மரங்களின் சூடு மூச்சு. பல்லாயிரம் இலையற்ற கிளை வழியே ஆயிரம் மூச்சு.


உயிர்த்தவிப்பு தணிக்கும் பேராவலில் மூச்சுக்காற்றின் உந்துதலில் விரைந்த மேகத்தை சோகமாய் தடுத்து நிறுத்தியது நெடிய மலை ஒன்று.


மலையெங்கும் மனிதர்கள் கட்டிடங்கள் வாகனங்கள் கரும்புகை இரைச்சல்... இடையிடையே தப்பி நிற்கும் பெருமரங்களும் வெயிலில் நோக,


'எமைக்காக்க விரைந்து நீரோடு வா 

பெரும் படையாக வா' என மலை இறைஞ்ச,

மரமனைத்தும் கடல் திசையில் தலையாட்டி மேகத்துக்கு வழிகாட்ட, மனச்சுமைகூடி தள்ளாடி மேகமழுதது வான்மழையாய், வான்சூட்டில் தரைதொடுமுன் ஆவியாகிப்போன மழையாய்... 


மேகத்தின் கண்ணீரை கண்டவருண்டோ!


சேயழுகை கேட்ட தாய்போல கடல்மடி கலங்கி அலையெழும்பி அலை வீழ்ந்து அலை பரவி... தெறித்த நீர்த்திவலையெல்லாம் அலைதந்த காற்றிலேறி கரை நோக்கி விரைய, அள்ளி வந்த நீரெல்லாம் வானிலேயே ஆவியாவதற்குள் மலைக்கு அப்பாலும் தவிக்கும் மரங்களின் ஆவி ஆகிவிடும் பேரன்பில் விரையுது கடலிலெழுந்த நீர்மேகம்.


முடிவற்ற தொடர் ஓட்டமாய் சிறு குழந்தைகள் ஓட்டை குடுவையில் நீர் அள்ளி திரும்புவதுபோல கடல் மேகங்கள் நிலம் நோக்கி ரயில் தொடராய் விரைய...'எங்காவது ஒரு நிலப்பரப்பில் என்றாவது ஒரு நாள் மரமொன்றின் உயிர்நனைக்க மட்டுமே வீழ்வேன் நான்' என வீறுகொண்டெழுந்த மேகங்கள் சிலமட்டும் இடரனைத்தும் கடந்து குனிந்து பார்த்தால் வெந்து தணிந்திருந்த நிலப்பரப்பில் சிறு கங்குகள் மட்டுமே மரங்களின் எச்சமாய் இங்கொன்றும் அங்கொன்றுமாய்.  


கங்குகளெல்லாம் நீரருந்தி விடைபெற காத்திருக்க, பெய்யென்று சொல்ல மரங்களற்ற நிலப்பரப்பில் பெய்தது பெருமழை மேகத்தின் கதறலாய்.


பற்றியெரிந்த கானகத்தின் மேல், அதன் மீது கொட்டுகின்ற மழைமீதுகூட பற்றின்றி பதறி விலகிய கூட்டம் எல்லாம் தொலைதூர குளிர் அறைகளிலே கவலையாய் தீட்டுது திட்டம் பல திட்டம், "முப்பதே ஆண்டுகளில் காடு பெருக்கி புவிச்சூடு குறைப்பது எப்படி?"


இது எதுவும் அறியாது தீவெந்த மண்ணடியில் மண்மடியில் கதகதப்பாய் உறங்குதொரு விதைப்பெருங்கூட்டம், பின்னொரு நாளில் கண்விழிக்கப்போகும் பழங்கூட்டம்.


நெருப்பென்னவோ மனித 'கவனிப்பால்'தான் என்றாலும் கானகங்கள் இயற்கையின் கவனிப்பால் அல்லவா? 


உதிர்ந்த மயிரைக்கூட மறுபடி வளர்க்க இயலா மனிதக்கூட்டமா காடு வளர்க்கப்போகிறது? புவிச்சூடு குறைக்கப்போகிறது?! இயற்கை நகைக்கிறது கடல் சீற்றமாய், எரிமலையாய், பேரிடராய். கேட்பதற்கு ஒருநாள் மனிதக்காதுகளே இல்லாது போகும். அந்த நாளில் மேகங்களின் தாகமும் தீர்ந்துபோகும். 


பேரன்புடன்,

பாபுஜி


கருத்துகள்

  1. சுவாமிநாதன்28 மே, 2022 அன்று 10:56 AM

    சிறந்த சொல்லாடல்.‌ கனல் போன்ற கருத்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. வித்ய பிரகாஷ்28 மே, 2022 அன்று 11:58 AM

    அண்ணா,
    மனக்கண்ணில் திரை கட்டி ஒரு படத்தை பார்த்த உணர்வு. இதை படிக்கும் யாவருக்கும் இயற்கையை நிச்சயமாக பாதுகாக்க உந்துதல் கொடுக்கும்.

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா28 மே, 2022 அன்று 6:14 PM

    கருத்துகள் மிக அருமை நண்பரே! நாமும் வாய்ப்பேச்சோடு நின்று விடாமல் நம் அங்கலாய்ப்பனைத்தையும் ஒன்று கூட்டி பேரியக்கமொன்றை உருவாக்கல் வேண்டும். கடும் முனைப்புடன் காடு வளர்த்தால்தான் நாம் நம் சந்ததி காக்க முடியும். இங்கு காடென்று நான் பகர்ந்தது வீடு தோறும், தெருக்கள் தோறும் மற்றும் காணும் இடங்கள் தோறும் ஒரு மரமேனும் நட வேண்டும். பின்னொரு நாளில் எங்கு நோக்கினும் அடர் வனமாய்க் காட்சி தரும் ! நம் சந்ததி நமக்கு நன்றி கூறும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயரில்லா29 மே, 2022 அன்று 12:02 PM

      நன்றி! பேரியக்கங்கள் எல்லாமே ஒற்றை மனிதரிடமிருந்தே தொடங்குபவை. விதையாக நாமிருப்போம். செயல் பரப்புவோம். உங்கள் அனைவரையும் வரவேற்க பெரியதோட்டம் காத்திருக்குது :-)

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்