நூறு+ வருடங்களுக்கு முன்...
ஊட்டியில் ஒரு மழை நாளில் கிறிஸ்தவ இறை சேவையில் தம்மை அர்ப்பணித்த ஒரு பெண்கள் குழு குளிரில் நடுங்கிக்கொண்டே நடந்துகொண்டிருக்கின்றனர்.
அவர்களை மெல்ல தாண்டிய ஒரு கார், நிற்கிறது. இறங்கிய மனிதர் 'I will drop you sisters' என்று அந்த பெண்களை காரில் ஏறிக்கொள்ள வேண்டுகிறார்,
'ஏன் இப்படிப்பட்ட மழையில் நடந்து செல்கிறீர்கள்? வாகனம் இல்லையா?' என கேட்கிறார்.
'எங்கள் கன்னிமடத்தில் இல்லை' என்கிறார்கள்.
அடுத்த நாள் காலையில் புத்தம்புதிய Dodge கார் ஒன்று அவர்களது கான்வென்ட் முன் நிற்கிறது.
"ஐயோ! வேண்டாமே! ட்ரைவர் எல்லாம் கட்டுப்படியாகாது. பெட்ரோலுக்கும் செலவாகும். வேண்டாமே!" என மறுக்கிறார்கள்.
தன் சொந்த செலவில் ட்ரைவரை நியமித்து, ஊட்டியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில், 'இந்த காருக்கு ஆகும் பெட்ரோல் பில்லை எனக்கு அனுப்பி விடுங்கள்' என ஏற்பாடு செய்து கேரளா திரும்புகிறார் அந்த மனிதர்.
முன்டக்காயத்தில் அவரது எஸ்டேட். எஸ்டேட்டின் பெயர் Endayar - அதாவது, "என் தாயார்" என்கிற தமிழ் சொற்களை, மிக விரும்பி அவரது ஆங்கில மொழிபெயர்ப்பில் அவர் தன் தாயார் நினைவாக வைத்த பெயர் EnDayar.
J. J. Murphy, பிறப்பால் ஐரிஷ்காரர், வணிக குடும்பம். பெரிய குடும்பம்.
அவர் வேலை செய்த ஒரு எஸ்டேட்டின் உரிமையாளர்கள், விற்க முடிவு செய்ய, அவரே வாங்கிக்கொள்கிறார்.
ஏலக்காய் பயிர் செய்து நிறைய பொருளீட்டி, பின்னர் காபி, மிளகு என எஸ்டேட் சாகுபடியில் அவர் 30 வயதுக்குள் அனுபவசாலி விவசாயி ஆகிறார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் ரப்பர் பயன்பாடு அதிகமில்லை. நம் இந்தியாவில் Ficus Elastica என்கிற இந்திய ரப்பர் மரம் நெடுங்காலமாக பயன்பாட்டில் இருந்தது. அதுவும் வட கிழக்கு இந்தியாவில் மட்டுமே.
"ஓ! இந்தியால ரப்பருக்கு இவ்ளோ டிமாண்டா. கவலை வேண்டாம். நம்ம ராச்சியத்தில தென்னமெரிக்க ப்ரேசில் காடுகள்ல நிறைய ரப்பர் மரங்கள் இருக்கு. வெட்டி எறக்கிடுவோம்!" என பிரிட்டிஷ் கப்பல்கள் விரைந்து, ரப்பர் பாலையும் ரப்பர் கன்றுகளையும் (வெட்டி நட்டாலே முளைத்துவிடும், ஆனால் இந்திய வெரைட்டி இல்லை; Havea Brasiliensis எனப்படும் ப்ரேசில் நாட்டு ரப்பர் மரங்கள்) கொண்டுவந்து குவித்தன.
(1838 இல் சார்லஸ் குட் இயர் என்கிற அமெரிக்கர் vulcanization என்கிற, ரப்பர் பாலை எளிதாக ரப்பர் டயராக மற்றும் பல "வளைக்கக்கூடிய திடப்பொருட்களாக" மாற்றும் தொழில்நுட்பத்தை (Good Year tyres still run in our roads!) கண்டறிந்தவுடன் ரப்பரின் தேவை காடுகளைப்பிய்த்துக்கொள்ள...பிரிட்டிஷ் ரப்பர் தொழிற்சாலைகளின் தந்தை என அறியப்படும் தாமஸ் ஹான்காக், "எம்மா நாளுதான் தென்னமெரிக்காலேந்து கப்பலு வளிக்கிறது இந்தியாக்கு? ப்ரொடக்சன டீசென்ட்ரலைசு பண்ணுங்கய்யா!" என உத்தரவிட, ரப்பர் நாற்றுக்கள் கிழக்கு அரைக்கோள நாடுகளின் காடுகளில் குடியமர்த்தப் படுவதற்காக ப்ரேசிலில் கப்பலேறின. காடுகளை வெட்டி வீழ்த்தி தோட்டங்களாக்கவும் ரப்பர் வளர்க்கவும் ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து அடிமைகள் கிழக்கு அரைக்கோளத்திற்கு கப்பல்களில் அழைத்துவரப்பட்டனர்; பிரிட்டிஷ் ராச்சியத்துக்கு கை நீளம் அதிகமல்லோ!)
ப்ரேசிலின் மர கட்டிங்குகள் முதலில் பிரிட்டனின் "கீவ் ராயல் பொட்டானிகல் கார்ட'னில் ஆய்வு செய்யப்பட்டு, வளர்க்கப்பட்டு, அங்கிருந்து இந்தியா மற்றும் இலங்கை சென்றன.
கல்கத்தாவில் தரையிறங்கிய முதல் பேட்ச் ரப்பர் கன்றுகள், அங்கு வேரூன்ற முடியாமல் இறந்துபோக, இலங்கையில் கரையிறங்கியவை பிழைத்துக்கொள்ள, சில வருடங்கள் கழித்து இலங்கையிலிருந்து ப்ரேசில்-ரப்பர்-மர கட்டிங்குகள் கப்பலேறி நம் கேரள மலபார் பகுதியில் நிலம்பூர் பள்ளத்தாக்கின் முன்டேரியில் குடியேறின, வேர் இறக்கின, வளர முயன்று...தோற்று...இறந்து போயின.
அரசாங்கத்தோடு தனியார் தோட்டங்களும் களத்தில் இறங்கி, சில பல முயற்சிகளுக்கு பின்னர் மர்பியும் அவரது நண்பர்கள் சிலரும் வெற்றி பெறுகிறார்கள்.
'இந்த நூற்றாண்டின் பணப்பயிர் இதுதான்' என்கிற conviction உடன் பெரியார் நதிக்கரையில் முண்டக்காயம் என்னும் ஊரில் Commercial Scale Rubber Plantation தொடங்குகிறார் மர்பி.
இரண்டாம் உலக யுத்தம் தொடங்கவும் ரப்பரின் தேவை வானில் ஏற, மர்பி மகிழ்வாய் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் ஏராளமான எஸ்டேட்டுகளை நிறுவுகிறார். 1000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், உலக சந்தை...
இந்த மர்பி, ஒரு டிபிகல் கலோனியல் லேன்ட்லார்ட் கிடையாது.
டிபிகல் என்றால் - இயக்குனர் பாலாவின் பரதேசி படம் பாருங்கள். அல்லது அதற்கு மூலமான Red Tea நாவலை வாசித்துப்பாருங்கள்.
மர்பியின் தோட்டங்களில் வேலை செய்பவர்களுக்கு, piped water உடன் கூடிய குடியிருப்பு வசதி (row houses), டாய்லட், மதிய உணவுடன் பள்ளிகள், மகப்பேறு மருத்துவமனை, தொழிலாளர்களின் குழந்தைகளை வேலை நேரத்தில் பார்த்துக்கொள்ள தனி கட்டமைப்புகள், நன்கு படிக்கும் மாணவர்களுக்கு மர்பியின் சொந்த செலவில் மதராஸ் மாகாணத்தில் மேற்படிப்பு...
இரண்டாம் உலக யுத்தம் உக்கிரமான ஒரு காலகட்டத்தில் நம் மக்களுக்கு கடுமையான உணவுப்பஞ்சம். மர்பி தன் சொந்த செலவில் பெரும் முயற்சி செய்து தரமான உணவுப்பொருட்கள் தட்டுப்பாடில்லாமல் கிடைக்க ஏற்பாடு செய்தாராம்!
கோடி கோடியாய் ஈட்டிய பொருளை கல்விக்காவகும், மருத்துவத்துக்காகவும் இறைபணிக்காகவும் கேரளா முழுவதும் பகிர்ந்து வழங்கியவர் தன் இறுதி நாட்களை பிறந்த நாட்டில் கழிக்க மறுத்து, சுதந்திர இந்தியாவிலும் பெரிதும் நேசிக்கப்பட்டு, இறந்தபின் அவரது "என் தாயார்" எஸ்டேட்டிலேயே சக தொழிலாளர்களின் கல்லறைகளுக்கு நடுவே விருப்பத்தின் பேரில் புதைக்கப்பட்டார்.
ஆட்கள் பற்றாக்குறை, விலையின்மை போன்ற typical issues that plague any monocrop befell rubber too.
கடந்த இருபது ஆண்டுகளில் தென்கிழக்காசிய நாடுகள் நிறைய ரப்பர் மரங்களை நட்டு நமக்கு போட்டியாக, "அப்பாடா, இப்பயாவது இந்த monocrop சுழல்லேந்து வெளியில் வந்திடலாம்...' என தப்பித்தவறி கூட யாரும் நினைத்திடக்கூடாதென்று அரசுகள் முடிவு செய்து, இப்போதெல்லாம் லாரி லாரியாக கேரளாவிலிருந்து வட கிழக்கு இந்தியா முழுவதும் ரப்பர் நாற்றுக்கள் பயணம் செய்யத்தொடங்கியாச்சி; வடகிழக்கிந்தியாவின் வளமான நிலங்களில் பாமாயில் மரங்களும் (எண்ணெய்ப்பனை) ரப்பர் மரங்களும் வளர்ப்போம், தன்னிறைவடைவோம் என அரசுகள் மானியங்களை வாரி வழங்கத்தொடங்கியாச்சே!
சரி, ப்ரேசில்காரி வந்தோன்ன நம்ம உள்ளூர்க்காரிய ஒதுக்கினமே அவ என்ன ஆனாள்?!
முப்பொழுதும் சோகமாய் இருக்கும் இந்த மரங்கள் எப்போதாவது ஒரு முறை, 'விடுகதையா இந்த வாழ்க்கை!' என்கிற பாடலை கேட்டால் மட்டும் இலைவழி சில சொட்டு ரப்பர் பால்-கண்ணீர் விடுமாம்!
(PC: Mostly from wikimedia and rest from internet. May be subject to copyright. His story originally appeared in a website called livinghistory).
கருத்துகள்
கருத்துரையிடுக