முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வெயில் விதைத்தவன்...

வெயில் அறுப்பான்.


தொன்றுதொட்டு உழன்று உணவு உற்பத்தி செய்யும் நம் திருநாட்டில்

திணை விதைத்தவன் திணையறுக்கையில்

வினை விதைத்தவன் வினையறுக்கையில்

வெயில் விதைத்தவன் வெயில் அறுத்துதானே ஆகவேண்டும்?!


மரங்களாலும் செடிகொடிகளாலும் இயற்கை நெய்த கானகங்கள் படர்ந்த மலைச்சரிவுகளை மானபங்கங்கப்படுத்தி தேயிலை, காபி, சில்வர் ஓக் என வகுந்து வகுந்து வகுத்து, இடையிடையே முழுதாய் மழித்து எஸ்டேட் பங்களாக்களும் ஆலைகளும் குடியிருப்புகளும் கட்டி... விதைத்ததெல்லாம் வெயில், வெயில் தவிர வேறில்லை...


கோவை மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு மலை ரயிலில் பயணித்தபோது, குன்னூருக்கு சற்றுமுன் வரை என்னைப்போர்த்தியிருந்த கானகத்தை காலம் சட்டென உருவிப்போட,  தேயிலைப்பாலையின் நிர்வாண தரிசனம்...


அங்கு சில்வர் ஓக் மரங்கள் மட்டுமே நிற்கின்றன. அவைகூட தேயிலைக்கு பயன் தரும் வகையில் நிழல் தருவதால் மட்டுமே நிற்கின்றன.

இந்த மலைகளில் பெருகியிருந்த இருவாச்சி பறவைகள் (Indian Hornbills) இப்போது தாம் வாழ பெருமரங்கள் தேடி தவிப்புடன் அந்த மலைகளில் அலைந்துகொண்டிருக்கின்றன.

இது நீலகிரி மலைத்தொடரில் மட்டுமே நிகழும் சிக்கல் இல்ல, அதற்கு வடக்கே, கிழக்கே வணிகப்பயிர்கள் மட்டுமே வளரும் நம் மலைகள் அனைத்திற்கும்தான்.


நெசவுக்கு பெயர் பெற்ற நிலப்பரப்பில் ஆங்கிலேயரின் மாளிகைகளுக்காகவும் தேநீர் கோப்பைகளுக்காகவும் உருவப்பட்ட நம் மலையரசியின் கானக ஆடையை மறுபடி நெய்து போர்த்த சுதந்திர இந்தியாவில் தறிகளே இல்லையாம்!


உலக மற்றும் உள்ளூர் பெருவணிக சந்தைகள் தரும் ஊக்கத்தில், நாமும் நம் அரசி எவ்வளவு அற்புதமான பச்சையாடை உடுத்தியிருக்கிறாள் என சிலாகித்து தேநீர் அருந்தி செல்ஃபி மட்டுமே எடுத்துக்கொண்டிருக்கும்வரை இங்கு அவளது ஆடைக்கான ஒரு நூல் கூட ஆயத்தமாகாது!


தொலைத்த கானகங்களை தொலைத்த இடத்திலேயே மீளுருவாக்கும் எளிதான செயலை புறம் தள்ளி, வேறு எங்கெங்கோ காடுகளை நாம் வளர்த்தால் அவளது நிர்வாணத்தை மறைத்துவிடலாமாம் கார்பன் கிரடிட்டுகளால்! இதை நிர்வாகிக்க நிபுணர்கள் அடங்கிய குழுக்களோ ஏராளம், தாராளம்!


நம் மலைகள் நிர்வாணமாய் இருக்கும் வரையில், மலையிறங்கிய சமவெளிகளிலும் பள்ளத்தாக்குகளிலும் நாம் வெயிலை மட்டுமே அறுவடை செய்துகொண்டிருப்போம்.


ஏற்கனவே நம் மலைக்காடுகள் தந்துகொண்டிருந்த நீர் அறுவடை காணாமல் போனதையும், பருவ மழைக்காலங்கள் சிதைந்துபோனதையும்  மறந்துவிடவேண்டியதுதான். மறதிதான் நம் தேசிய நோயாயிற்றே.


மாத்தி யோசிப்பதில் வல்லவர்களான நாம் என்ன செய்யலாம் இதை மாற்ற?


வடதுருவ கண்டங்களில் குளில்காலத்தில் நடுங்கிக்கொண்டிருக்கும் மக்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து வெயில் விநியோகம் செய்யலாம்! கொழுத்த லாபம் கிடைக்கும்.

கார்பன் கிரடிட் சந்தை சாத்தியமானதுபோல இதுவும் விரைவில் சாத்தியமாகும்!

வெயிலை ஏற்றுமதி செய்து கிடைக்கும் நிதியை கொண்டு நமக்கு வேண்டிய நீரைக்கூட இறக்குமதி செய்திடலாம். 

ஆனால் நிழலை??


பேரன்புடன்,

பாபுஜி



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...