வெயில் அறுப்பான்.
தொன்றுதொட்டு உழன்று உணவு உற்பத்தி செய்யும் நம் திருநாட்டில்
திணை விதைத்தவன் திணையறுக்கையில்
வினை விதைத்தவன் வினையறுக்கையில்
வெயில் விதைத்தவன் வெயில் அறுத்துதானே ஆகவேண்டும்?!
மரங்களாலும் செடிகொடிகளாலும் இயற்கை நெய்த கானகங்கள் படர்ந்த மலைச்சரிவுகளை மானபங்கங்கப்படுத்தி தேயிலை, காபி, சில்வர் ஓக் என வகுந்து வகுந்து வகுத்து, இடையிடையே முழுதாய் மழித்து எஸ்டேட் பங்களாக்களும் ஆலைகளும் குடியிருப்புகளும் கட்டி... விதைத்ததெல்லாம் வெயில், வெயில் தவிர வேறில்லை...
கோவை மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு மலை ரயிலில் பயணித்தபோது, குன்னூருக்கு சற்றுமுன் வரை என்னைப்போர்த்தியிருந்த கானகத்தை காலம் சட்டென உருவிப்போட, தேயிலைப்பாலையின் நிர்வாண தரிசனம்...
அங்கு சில்வர் ஓக் மரங்கள் மட்டுமே நிற்கின்றன. அவைகூட தேயிலைக்கு பயன் தரும் வகையில் நிழல் தருவதால் மட்டுமே நிற்கின்றன.
இந்த மலைகளில் பெருகியிருந்த இருவாச்சி பறவைகள் (Indian Hornbills) இப்போது தாம் வாழ பெருமரங்கள் தேடி தவிப்புடன் அந்த மலைகளில் அலைந்துகொண்டிருக்கின்றன.
இது நீலகிரி மலைத்தொடரில் மட்டுமே நிகழும் சிக்கல் இல்ல, அதற்கு வடக்கே, கிழக்கே வணிகப்பயிர்கள் மட்டுமே வளரும் நம் மலைகள் அனைத்திற்கும்தான்.
நெசவுக்கு பெயர் பெற்ற நிலப்பரப்பில் ஆங்கிலேயரின் மாளிகைகளுக்காகவும் தேநீர் கோப்பைகளுக்காகவும் உருவப்பட்ட நம் மலையரசியின் கானக ஆடையை மறுபடி நெய்து போர்த்த சுதந்திர இந்தியாவில் தறிகளே இல்லையாம்!
உலக மற்றும் உள்ளூர் பெருவணிக சந்தைகள் தரும் ஊக்கத்தில், நாமும் நம் அரசி எவ்வளவு அற்புதமான பச்சையாடை உடுத்தியிருக்கிறாள் என சிலாகித்து தேநீர் அருந்தி செல்ஃபி மட்டுமே எடுத்துக்கொண்டிருக்கும்வரை இங்கு அவளது ஆடைக்கான ஒரு நூல் கூட ஆயத்தமாகாது!
தொலைத்த கானகங்களை தொலைத்த இடத்திலேயே மீளுருவாக்கும் எளிதான செயலை புறம் தள்ளி, வேறு எங்கெங்கோ காடுகளை நாம் வளர்த்தால் அவளது நிர்வாணத்தை மறைத்துவிடலாமாம் கார்பன் கிரடிட்டுகளால்! இதை நிர்வாகிக்க நிபுணர்கள் அடங்கிய குழுக்களோ ஏராளம், தாராளம்!
நம் மலைகள் நிர்வாணமாய் இருக்கும் வரையில், மலையிறங்கிய சமவெளிகளிலும் பள்ளத்தாக்குகளிலும் நாம் வெயிலை மட்டுமே அறுவடை செய்துகொண்டிருப்போம்.
ஏற்கனவே நம் மலைக்காடுகள் தந்துகொண்டிருந்த நீர் அறுவடை காணாமல் போனதையும், பருவ மழைக்காலங்கள் சிதைந்துபோனதையும் மறந்துவிடவேண்டியதுதான். மறதிதான் நம் தேசிய நோயாயிற்றே.
மாத்தி யோசிப்பதில் வல்லவர்களான நாம் என்ன செய்யலாம் இதை மாற்ற?
வடதுருவ கண்டங்களில் குளில்காலத்தில் நடுங்கிக்கொண்டிருக்கும் மக்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து வெயில் விநியோகம் செய்யலாம்! கொழுத்த லாபம் கிடைக்கும்.
கார்பன் கிரடிட் சந்தை சாத்தியமானதுபோல இதுவும் விரைவில் சாத்தியமாகும்!
வெயிலை ஏற்றுமதி செய்து கிடைக்கும் நிதியை கொண்டு நமக்கு வேண்டிய நீரைக்கூட இறக்குமதி செய்திடலாம்.
ஆனால் நிழலை??
பேரன்புடன்,
பாபுஜி
கருத்துகள்
கருத்துரையிடுக