முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சகியே!


 கனவுகளுக்கும் கற்பனைகளுக்கும் இடையில் விழித்திருக்கும் நொடியிலெல்லாம் துரத்துது என்னை, என் பதின்பருவ கனவு ஒன்று.

பாலகுமாரன் போதித்த காதல் வேதங்களும் தி.ஜா காண்பித்த உன்னத பெண்களும் என் மனதில் கட்டியெழுப்பிய என் தேவதைப்பெண்ணுக்கு மணியம் செல்வனின் ஓவியங்கள் உயிரூட்ட, தேடல் தேடல் சதா தேடல்... 

கண்ணில் காண்கின்ற பெண்களெல்லாம் எங்கோ பொருந்தி எதிலோ பொருந்தாமல் போக, இளமையென்னும் இழையொன்றில் நான் விரைந்து இங்குமங்கும் அலைய, காலமென்னும் மாய மை மெல்ல மெல்ல ஓவியத்தின் கோடுகளை அழிக்க, இன்று கூட என்னை கடந்து போன பெண்ணின் நெற்றி மட்டும் அதே ஓவிய நெற்றி. இன்னொரு நாளில் என்னிடம் பேசிச்சென்ற இன்னொரு பெண்ணில் அந்த கண்கள் மட்டும்...

அழிந்து போன கோடுகள் விட்டுச்சென்ற உணர்வுகள் மட்டும் மனதில் அலையெழுப்பி தளும்ப தளும்ப, கோடுகள் அழிந்த அந்த இடைவெளி அனைத்தையும் இட்டு நிரப்பும் பேராசையில் சில முகங்களை ஏனோ திரும்ப திரும்ப பார்க்கத்தோன்றும்.

எத்தனை முகங்கள் கண்டாலும் அந்த முகம் ஆகாது எந்த முகமும்...


காதலுக்கு முகமெதற்கு? என்ற புரிதல் வருவதற்கே தேவைப்பட்டது ஆண்டு அரை நூறு.


நினைவில் எங்கோ காற்றில் நெற்றியில் புரளும் முடிக்கற்றையில், அமைதியாய் நேசத்தோடு சம்மதம் தேடும் கரு விழிகளில், அதிகாலையில் கலைந்த இருளில் புதிது போல தோன்றும் கை ரேகையொன்றில், ஆட்களற்ற சாலையொன்றில் இன்றும் உதிர்ந்து கிடக்கும் நம் உரையாடலின் சிறு விள்ளலில், இன்று பூத்த மலர் போல சிரித்தபடி என்னை கடந்து போகும் அந்த சிறுமியின் சிரிப்பில் என இன்றும் நினைவூட்டி... என்றோ ஒரு நாளில் ஒரு நொடிப்பொழுதில் இந்தக்கனவு வாழ்விலிருந்து விழித்தெழுந்து நான் காணப்போகும் என் கனவு முகம் உனதாகவும் இருக்கலாம் சகி்...



ஆழிசூழ் உலகில் என் படகின் பாய்மரம், என் திசைகாட்டி, என் நங்கூரம் நீ என ஏதேதோ கற்பனைகள் தாலாட்ட, உன் நினைவுகளின் வெம்மையில், உறைகுளிரில், மழைச்சாறலில் உறங்கப்போகும் முன், நாளைய என் தினத்தின் திசையறிய எனக்கு நானே எழுதி வைக்கும் நாட்குறிப்பு இது.

என் தேடல் தொடரும், நாளையும் அதன் பின்னான மற்றைய தினங்களிலும்.

- சகா.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...