முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ட்ராஃபிக் ஜாம்!

ட்ராஃபிக் ஜாம்.

அனுமன் வால் போல வாகனங்கள் இருபுறமும்.

மையத்தில் ஏதோவொரு 'கடக்க இயலாத' நிகழ்வினால் தேக்கம் என உணர்ந்தேன்.

ஏற்கனவே புது சாலை அமைப்பதற்காக பழையதை கொத்திப்போட்டு, பயன்படுத்தக்கூடிய அகலமும் குறைவான சாலை.


நிமிடங்கள் மெல்ல கரைய...வண்டிகள் எதுவும் நகர்வதாயில்லை.

மட்டமதியான வெயில் மூட்டிய சினத்தில் காடெரிக்கும் உத்வேகத்தோடு வாகனத்தை நிறுத்தி இறங்கினேன், மையத்தை நோக்கி நகர்ந்தேன்.


ஒரு இளம் வயது பெண். இடுப்பில் ஒரு குழந்தை. உடைகளில் ஏழ்மை. சாலையின் ஒரு பகுதியில் நடந்துகொண்டிருக்கிறாள். அவள் பின்னால் அவளது வயதை ஒத்த ஒரு ஆண், அவளை தடுத்து நிறுத்தும் முயற்சியின் தொடர் தோல்வியில் துவளாது மறுபடி மறுபடி முயல்கிறான்.

மொத்த கூட்டமும் (நம்ம ஊரில் கூட்டம் கூடுவதை கேக்கணுமா என்ன?!) உறைந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. அருகில் இருந்த வாகன ஓட்டிகள் யாரும் ஹார்ன் கூட அடிக்கவில்லை.

நான்கு சுவர்களுக்குள் நிகழ வேண்டிய ஒரு நிகழ்வு, பொது வெளியில்.

அந்நியர் நுழைய முடியாத உறவென்பதாலோ, அவர்களுக்கிடையில் நிழையக்கூடிய சமாதான உறவுகள் இல்லாததாலோ, நடுத்தெருவில் துயரம் நிகழ்ந்து கொண்டிருந்தது.

சில நிமிடங்களிலேயே நியாயத்தராசின் தட்டுகள் காண்பவர் மனங்களில் சீர்தூக்கி நின்றன.

அவன் ஏதோ பெருந்தவறு செய்திருக்கிறான். அவள் கொந்தளித்து வெளியேறி இருக்கிறாள் அந்த சாலையின் விளிம்பில் இருந்த தன் புறாக்கூடு வீட்டிலிருந்து. 

சமாதானம் பேச, அவளை தடுத்து நிறுத்த இயலாமல் அவளை பின் தொடர்ந்து கையை பிடித்து இழுத்து கூட்டுக்கு அழைத்துச்செல்ர அவன் மறுபடி முயல, கைகளை உதறி சில அடிகள் இடுப்புக்குழந்தையோடு விரைந்து முன்னேறியவள், சட்டென குனிந்து தரையிலிருந்த பெருங்கற்களில் சிறிதான ஒன்றை பொறுக்கி எடுத்து வலிவு கூட்டி எறிந்தாள் அவன் மீது. 

அதில் நிறைந்திருந்தது அவளது வாழ்நாள் வலியும் அவன் மீதான கரிசனமும்.


அடி பட்டு லேசாய் ரத்தம் சிந்தச்சிந்த அவன் உறைந்து நிற்க, சோகச்சித்திரமாய் அவள் தன் தோள் குழந்தையோடு அங்கிருந்து அழுதவண்ணம் நடந்து மறைந்தாள் மெல்ல.

அதன் பின்னான சில நொடிகள் கனத்த அமைதி. பின்னர் வாகனங்கள் ஒவ்வொன்றாய் நகரத்தொடங்கின அவளது வலியை சுமந்தபடி.

அன்றைய பொழுதில் பல இணைகள் தம் வீடுகளில் இந்த வலியைப்பற்றி நிச்சயமாய் நெகிழ்ந்து பேசியிருப்பார்கள். சிலர் தம் குணங்களில் நல் மாற்றம் செய்ய   முடிவும் செய்திருப்பார்கள்...


இன்றும் அந்த சாலையில் நான் பயணிக்கையில், சிறு கல்லொன்று காற்றில் பறக்கையில் எழும் ஒலி என் காதுகளில்...

பேரன்புடன்,

பாபுஜி 

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்