முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மயிலாண்!

 

எங்கள் வீட்டின் கொல்லைப்புற மதில் சுவர் எங்களுடையது இல்லை.

இப்படித்தான் அதில் தினமும் வந்து தங்கும் மயிலாண் (ஆண் மயில்) சொல்லித்திரிகிறான், சில வருடங்களாய்.

வெகு சிநேகமாய் எங்களை அவன் உலகோடு பிணைத்துக்கொண்டவன். புதிதாய் யாராவது வந்தால் மட்டுமே தாவிப்பறந்து மறைவான். மற்றபடி அவன் நிம்மதியாக இளைப்பாறும் இடம் அது.

லியோவுக்கும் போக்கோவுக்கும் (நான்கு கால் குழந்தைகள்) மதில் சுவர் மேல் அமர்ந்திருக்கும் மயிலாணோடு விளையாடுவது மிகப்பிடித்த பொழுதுபோக்கு. எங்களுக்கும்தான்.


லியோ இங்கு வரும் முன்னே அந்த மதில் மயிலாணோடது ஆகிவிட்டது.

ஒரே ஒரு முறை லியோ மயிலாணின் இறகு பிடிக்க முயல, மயிலாண் லியோவின் முன் நெற்றியில் மெலிதாய் தன் மூக்கினால் கொத்தி.. அந்த இடம் சொட்டையாகி லியோ சொட்டையுடனே சில வாரங்கள் ஓடிக்கொண்டிருந்தது இன்னும் பசுமையாய் நினைவில்.


சில தினங்கள் முன்பு வீட்டருகில் எங்கெங்கோ மயில்களின் அகவல்கள் கேட்டுக்கொண்டே இருந்தது.

லியோவும் போக்கோவும்கூட இயல்புநிலையிலிருந்து விலகி அங்குமிங்கும் அலைவதை கண்டோம். ஆனால் வேலைகள் நிறைந்த நாளென்பதால் மறந்துபோனோம்.

மாலையில் எங்கள் நகரின் தகவல் பகிரும் குழுவில் (Whatsapp group) சில குறுஞ்செய்திகள் வந்தது;

"

செய்தி 1:

இன்று காலை சுமார் 7.30 மணிக்கு ______________தெருவில் உள்ள டிரான்ஸ்பார்மரில் ஒரு பெண் மயில் அமர்ந்ததால் ஷாக் அடித்து இறந்து விட்டது. அதைத்தொடர்ந்து ஒரு ஆண் மயில் பெண் மயிலை விடுவிக்க போராடி அதுவும் ஷாக் அடித்து கீழே விழுந்து இறந்து விட்டது. உடனே நாம் மாநகராட்சி சூப்பர்வைசர் க்கு தகவல் கொடுத்தோம் அவர் தனது மேலதிகாரியின் நம்பரை கொடுத்து பேச சொன்னார்.அந்த மேலதிகாரி ஒரு நம்பரை கொடுத்து கம்ப்ளைன்ட் செய்யுமாறு கூறினார் அந்த நம்பருக்கு கூப்பிட்டால் உங்கள் பகுதி எங்கள் சர்க்கிளில் வராது என்று கூறிவிட்டார். பின்பு ஒரு அதிகாரி Zoo director இடம் பேசுமாறு நம்பர் கொடுத்தார். அவருக்கு அழைத்தால் அவரும் பேசவில்லை.  இப்படியே மதியம் வரை நீடித்தது பின்பு நண்பர் __________  அவர்கள் வனத்துறையின் Toll free நம்பருக்கு அழைத்துப்  பார்த்தார். அவர்களும் எடுக்கவில்லை பின்பு அவர் ஒரு பழைய துணியை எடுத்து வந்து இரண்டு மயில்களையும் சேர்த்து போர்த்தி வைத்தார்...😔




2: மீண்டும் மாலை சுமார் 3.30 மணி அளவில் வனத்துறையின் நம்பருக்கு கூப்பிட்டோம். அப்போதுதான் அவர்கள் விலாசம் மற்றும் போன் நம்பர் அனைத்தையும் கேட்டுக் கொண்டார். பின்பு உடனே வேறு ஒருவர் கூப்பிட்டு Current location  share செய்யுமாறு கூறினார். பின்பு அரை மணி நேரம் கழித்து இருவர் வந்து அந்த மயில்களை எடுத்துச் சென்றனர்.




3: காலை 7.30 ஆரம்பித்த போராட்டம் மாலை 4.30  மணிக்கு முடிவடைந்தது.

4: *இறந்த* மயில்களை அப்புறப்படுத்த வனத்துறையினருக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாகவும் அவர்கள் சொன்னார்கள்.

அதையும் மீறி பொதுமக்களோ, மாநகராட்சி ஊழியர்களோ  அப்புறப்படுத்தினால் அவர்களை கைது செய்து ஜாமினில் வெளியே வர முடியாத அளவிற்கு சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது...😔

"

இந்த செய்திகளையும் படங்களையும் பார்த்தபின்பு திடீரென என் மனம் எனக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியது; 'மயிலாண பாத்தியா இன்னைக்கு?'


காலையில் மனதை நெருடிய சில நிகழ்வுகள் மறுபடி நினைவில் வந்து போயின.

"அப்டீல்லாம் இருக்காது!" என ஆசுவாசப்படுத்திக்கொண்டு அன்றிரவு உறங்கிப்போனேன்.

அதன் பின் வந்த சில நாட்களுக்கு மயிலாண் தட்டுப்படவில்லை...


"கண்டா வரச்சொல்லுங்க, அவன கையோட கூட்டியாருங்க" என என் கண்ணில் கண்ட உயிர்களிடமெல்லாம் (மனிதர் தவிர) மானசீகமாய் குறுஞ்செய்தி அனுப்பத்தொடங்கினேன்.

நான்கு நாட்களாகியும் காணவில்லை. மென்சோகம் மனதில் படரத்தொடங்கி, 'ஒரு வேளை அந்த ஆண் மயில் அவனாக இருக்குமோ?!' என்ற கவலையும் சேர்ந்துகொள்ள, நினைவுகளின் கனம் கூடிக்கொண்டே போனது.

இன்று காலை லியோவும் போக்கோவும் வெயிலில் உரப்பம் போட்டு உறங்கிக்கொண்டிருந்த வேளையில் நான் கையில் காபி கோப்பையோடு வழக்கமாய் மயிலாண் அமர்ந்திருக்கும் இடம் நோக்கி தன்னிச்சையாக நகர, அங்கே அவன் மீண்டும் அமர்ந்திருந்தான்!

"வந்துட்டேன்னு சொல்லு!" என மனம் ஆர்ப்பரிக்க... மெல்ல அணுகி, 'பயந்தே போய்ட்டேன்டா!' என்றேன்.

என் குரல் கேட்டு என்னுடன் குதித்தோடி விளையாட வந்த லியோவும் போக்கோவும், மயிலாணைக்கண்டு என்னை மறந்து உற்சாகத்துள்ளல் போட்டு மதில் சுவர் மேல் தாவ, மயிலாண் வழக்கம் போலவே நகராமல் சிநேகத்தோடு கழுத்து வளைத்து அவர்களை பார்க்கத்தொடங்கினான்.


"இனிது இனிது வாழ்வு இனிது" என மெல்ல நான் வீட்டுக்குள் நுழையும்போது மனது அவசரமாக இன்னொரு குறுஞ்செய்தி அனுப்பியது; "அவன் கண்ணுல ஒரு சோகம் இருக்கு கவனிச்சியா?!'

மனிதர்கள் மட்டுமே dramatic ஆனவர்கள் என்று நினைத்துக்கொண்டு புன்னகையோடு நகர்ந்தேன்.

(நரிகள் இருந்தவரை மயில்கள் பெருக்கம் கட்டுக்குள்தான் இருந்தது. நரிகள், மயில்களின் முட்டைகளை கவர்ந்து உண்டு 'குடும்பக்கட்டுப்பாடு செய்யும்' உயிர்க்கண்ணிகள். நரிகளை நாம் வேட்டையாடி அழித்தபின்பு இன்று மயில்கள் ஏராளமாய் பெருகி, விளை நிலங்களில் உணவு பொறுக்கி சேதம் செய்து, பாதிக்கப்பட்ட சில ஈரோட்டு விவசாயிகள் அவற்றை விஷம் வைத்து கொன்று, கைதாகி சிறை சென்று...என சிக்கலின் நுனியை " கண்டுகொள்ளாமல்" விட்டு (நரிகளை பெருக்குதலே எளிதான தீர்வு) சிக்கலை இன்னும் இன்னும் நாமே பெரிதாக்கிக்கொண்டிருப்பது மயிலாணுக்கு தெரியாது!)



கருத்துகள்

  1. சூப்பர்...
    லியோவும் போக்கோ என்றால் என்ன என்று எங்களுக்கு விளங்கவில்லை.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்