முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என்ன செய்யப்போகிறோம்?

 


'நீங்க என்ன சாதி?'


"சாதி இரண்டொழிய வேறில்லை பாப்பான்னு பாரதி சொல்லியிருக்காருங்க..."


'அந்தாளுக்கு என்ன தெரியும் நம்மளோட பரம்பர பெரும?... சொல்லுங்க, நீங்க எந்த சாதி?'


இந்த வினா, நான் என்ன சாதி என்கிற வினா, ஒரு மருத்துவமனை சிகிச்சைக்கான ஒரு படிவத்தில் இருந்ததையும், அதை நிரப்பவேண்டுமென்று மருத்துவமனை ஊழியர் வற்புறுத்தியதையும் வேதனையோடு பகிர்ந்தார் நண்பர் ஒருவர்.


நான் என் இளமையை நிறைத்த காலங்கள் எல்லாம் நம் தமிழ்நாட்டின் சிற்றூர்களிலும் கிராமங்களிலும் மட்டுமே. அங்கு எல்லாம் சாதி முஷ்டி முறுக்கல்கள் நான் பார்த்ததில்லை, ஒரு முறை கூட. 


எப்போதாவது செய்தித்தாள்களில் பதியப்பட்ட 'முதுகுளத்தூர் துப்பாக்கி சூடு' போன்ற சம்பவங்கள் இன்றுவரை நினைவில் இருப்பது இதனால்தான் (i.e. exception events)


கல்லூரி கல்விக்காக பெருநகருக்கு வந்து அதன் பின் இன்னும் பெரிய நகரில் வேலைக்கு வந்து... வணிக ஓட்டம் பிடரியை உந்தித்தள்ள, ஓடத்தொடங்கும்போதும்கூட சாதி பற்றிய உரையாடல்கள் மேம்போக்காகத்தான் இருந்தன. 


ஒரு சராசரி மனிதனாக என் வாழ்வில் முதன்முதலாக பார்ப்பனீயம் is Bad என mainstream பேசுபொருள் கேட்டது 1990களி்ல்தான். பார்ப்பனீயம் Bad என்று சொன்னவர்களே, 'சக்கிலியனெல்லாம் இன்னைக்கு ஆட்டம் போடுறான்' என்று அங்கலாய்த்ததும் இதன் பிற்பாடுதான்.


அந்த காலகட்டம்வரை, 'பல நூறு ஆண்டுகளாய் இழைக்கப்பட்ட சமூக அநீதிகளுக்கு இப்போது நாம் கொடுக்கும் விலை' என்பதாகவே நலிவடைந்த சமூகத்தினரின் சலுகைகள் அணுகப்பட்டன.  மறுபுறம்,  பார்ப்பண துவேஷ அரசியலை திராவிடம் வளர்த்தபோதும் பார்ப்பனர்களுக்கு மதிப்பும் மரியாதையும் இருந்தது சமூகத்தில்.


Economic liberalization of 90s changed everything. 


பெருவணிகம் என்ற புதிய மதம் உள்ளே வந்து கடை விரிக்க, அதுவரை சமூக அடுக்குகளில் பல தட்டுக்களுக்குள் சிந்திக்காமலே முடங்கியிருந்த 'அனைவருமே' இந்த மதத்தில் முண்டியடித்து சேர வரிசைகட்டி நிற்கையில் முன்னால் நிற்பவரின், பின்னால் நெருக்குபவரின், பழைய 'தட்டு' உரசலாச்சி. அரசியலும் அதை ஊதி ஊதி பெரிதாக்க, இன்று இந்த நிலைமை.


இந்த சமூக வசதி சார்ந்த தட்டுகளெல்லாம் நம் சமூகத்தினால் வார்க்கப்படும் முன்னரும், நாமெல்லாம் அவற்றுக்கு வாழ்க்கைப்படும் முன்னரும் இங்கு வாழ்வு இருந்தது. அது உழவின் பின் கைகூப்பி சென்றது; சாதி உட்பிரிவுகள் பேதமின்றி.


உழுபவனுக்கு செருப்பு தைக்க, தளவாடம் செய்ய, ஆடைநெய்ய,  நல்ல நாள் கெட்ட நாள் பார்த்து சொல்ல, அணிகலன் செய்ய, துணி வெளுக்க, முடி மழிக்க, மருந்து தர, வாகனம் செய்ய, ஈமக்கிரியை செய்ய என ஏனைய தட்டுகள் எல்லாம் தத்தம் வேலையை செவ்வனே செய்ய, உழவின் விளைச்சல் இந்த தட்டுகளை நிறைவாக நிரப்பியது. உழவனின் இல்ல நிகழ்வுகள் எதுவும் இந்த தட்டுகளின் பங்களிப்பின்றி நிகழ்ந்ததில்லை. அந்த காலகட்டத்தில் இன்றைய வன்முறை பேதம் இல்லவே இல்லை!


அந்த உழவர்கள் இன்று மற்ற அனைவரையுமே சாபமிட்டு இறைஞ்சினாலும், போராட்டங்கள் பல நடத்தினாலும் 'வணிக' மதத்திற்கு மாறிய நம் காதுகளில் விழுவதே இல்லை...


மனுநீதி தந்த வர்ண தட்டுகளுக்கு முன்பே இங்கு இருந்த வாழ்வியலில் உழவன் உச்சாணித்தட்டாக இருந்தான்.


ஆங்கிலேய வணிகம் இங்கு கப்பல் வழி தரையிறங்கும் வரை இந்த தட்டு மட்டுமே இங்கு வாழ்வு வளர்த்தது.


அவர்களின் அடக்கி ஆளும், உறிஞ்சித்தின்னும் பேராசைக்கு துணைபோகும் விதமாக மக்கள்தொகை கணக்குப்பதிவு (18ஆம் நூற்றாண்டு) நடக்கையில், அவர்களுக்கு மனுநீதி வழி உதவிய நம் மேல் வர்க்க மக்களின் வழிகாட்டுதல்படி, மனு தந்த இந்த நான்கு வர்ண தட்டுகள் அனைத்தும் ஒற்றை மதத்திற்குள் அடைக்கப்பட்டு, வர்ணம் சார்ந்த உயர்வு தாழ்வு வரையறைகள், மேல் வர்க்க உதவியாளர்களால் இன்னும் கடுமையாக்கப்பட்டு... திசைமாறிப்போனது நம் வாழ்வு.


"உயர்சாதி ஆணவம்", 

"தாழ்த்தப்பட்டோர் போர்வையில் சலுகை உறிஞ்சிகள்", 

ஆணவத்திருமணங்கள் / ஆணவக்கொலைகள்

என சாதிக்கொடுமை பற்றியும், சாதீய அடக்குமுறை பற்றியும் நெற்றி சுருக்கி கழுத்து நரம்புபுடைக்க ஆவேசப்படும் நாம் நம் உழவர்களை என்ன செய்துகொண்டிருக்கிறோம்?


தெரியாமல்தான் கேட்கிறேன்? வணிகத்துக்கு ஒரு தட்டு ஒதுக்கிய மனு நீதி உழவனுக்கு என்ன செய்திருக்கிறது?


நான்கு வர்ண தட்டுகளுக்கும் முதன்மையான, மேலான தட்டாக இருந்த உழவன், நான்கு தட்டுகளுக்கும் கீழான தட்டாக தாழ்ந்துபோனது வளமான வாழ்வினால் அவன் எடை கூடிப்போனதனாலா அல்லது அவன் சுமக்கும் கடன் சுமையினாலா?


உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என போற்றிய சமூகத்தில் இன்று சாதிக்கொரு கட்சி, வீதிக்கொரு சாமி, ஆனால் என் சாமி உன் சாமி அல்ல என்பதாய் இந்த நான்கு தட்டுகளின் கூக்குரலில் காது செவிடாகி, மோதல்களில் நெளிந்து நசுங்கி... இன்று பசி மயக்கத்தில் தள்ளாடும் நம் உழவர்களை எங்காவது 'கண்டா வரச்சொல்லுங்க', கையோட கூட்டியாங்க, அவர்களிடம் உரக்க சொல்லுங்க, 'நாங்கள்லாம் மேல்சாதி, நீ மட்டும்தான் கீழ்சாதி'.


சாதி இரண்டொழிய என்று சொன்னவனின் வழி வந்தவர்கள் இன்றும் இரண்டு சாதிகளாக மட்டுமே பிரிந்து நிற்கிறோம் உலகளவில்; இருப்பவர் சாதி, இல்லாதவர் சாதி.


இங்கு சாதித்தாவல்கள் 'பணம்' என்கிற கருவியின் தயவால் மட்டுமே நிகழும்.


மகாமாரி (கொரோனா) காலம் நம்மை சற்றே புரட்டிப்போட்டு, வேளாண்மை பற்றிய அறச்சிந்தனைகளை எழுப்பினாலும், நாம் அனைவரும் கொரோனோ + விவசாய சிந்தனை தடுப்பூசிகளை குத்திக்கொண்டு மீண்டும் பழைய ஓட்டப்பந்தயத்தில் ஓடிக்கொண்டிருக்கிறோம்...


இப்போதைய நம் கவலை எல்லாம் உயர்ந்துகொண்டே போகும் விலைவாசியை பற்றியும், உணவுத்தட்டுப்பாடு பற்றியும்தான். 


The spotlight, is on us, now. என்ன செய்யப்போகிறோம்?


காலகாலமாய் கடன்பட்டேனும் உணவு பெருக்கித்தந்துகொண்டிருக்கும் நம் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட எதுவும் செய்யாமலேயே, 'இன்னும் துரிதமாய், இன்னும் மிகுதியாய்' என அவர்களை விரட்டி வேலை வாங்கப்போகிறோமா?


அல்லது


நாங்களே ஆலைகளில் உணவு 'தயாரிப்போம்', நீங்கள் அனைவரும் இங்குள்ள எந்திரங்களை இயக்கவும், ஆலைகளையும் எங்கள் தனி மனித வளங்களையும் காவல் காக்கவும் மட்டுமே வாருங்கள் என அவர்களை கூலிப்பணியில் அமர்த்தப்போகிறோமா?


அல்லது ...


பேரன்புடன்,

பாபுஜி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...