முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முன்னை இட்ட தீ

அணில்குஞ்சின் வெந்து கருகும் உடல்வாசம்


உச்சிக்கொழுந்து சாம்பலாகி காற்றில் அலையும் அகார்ன் மரத்தின் எஞ்சிய கார்பன்


உலகின் மாசையெல்லாம் உறிஞ்சி உள்ளிழுத்து பச்சையாய் பசுமையாய் பூக்களாய் காய்களாய் கனிகளாய் குடில்களாய் மாற்றித்தந்த காட்டுப்பேராற்றல் வெந்து தணியவும் சிறு பொறியொன்று போதும்.


ஒரு சுள்ளி வெந்தாலும் ஓராயிரம் கோடி உயிரினங்கள் வேக்காடாகி மடிந்தாலும் பொறிக்கென்ன போச்சி?


மரங்கள் தானே உரசி தானே கொள்ளிவைத்துக்'கொல்வது' பேராற்றல் தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளவாம்.


பேராற்றல் தந்த வாலை அறுத்துக்கொண்டு தரையிறங்கிய வானரக்கூட்டமொன்று இந்த கானகங்களுள் பொறிகளை வகைதொகையில்லாமல் பதுக்கிவைப்பது எந்த வகை?


ஆலைகள் செய்யவும் பாமாயில் செய்யவும் டிம்பர் பெருக்கவும் சாலைகள் வடிக்கவும் என இவை வைக்கும் பொறிகளெல்லாம் தன் தலையில் தானே கொள்ளி வகை; வைப்பது எங்காயினும் எரியப்போவதென்னவோ நம் நுரையீரல்தான்!


ஆனால் எரியும் வழியென்னவோ எங்கோ வெகு தொலைவில்தானே என நாம் வேண்டுமானால் சொல்லி சமாளிக்கலாம். ஆசியாவில் ஒரு வண்ணத்தியின் சிறகசைப்பு சில நாட்களில் தென்னமெரிக்காவில் புயல்மழை வரவைக்குமாம். நம் மூளைத்திறனின் உன்மத்த எல்லைக்கு வெளியே நமக்கு புலப்படாது விரவியிருக்கும் இயற்கையின் தொடர்கண்ணிகள் நாளை நம் நுரையீரலுக்கு கொண்டுவந்து தரும் ஆக்சிஜனில் சென்ற வாரம் இந்தோனேசிய காடுகளில் பாமாயில் ப்ளான்டேஷனுக்காய் நம் கூட்டம் கொளுத்திய தீயில் வெந்துபோன ஒராங்குட்டானின் தீய்ந்த வாடையும் நிச்சயமாய் இருக்கும்...


ஆனால் என்ன துயரம் தெரியுமா? நம்மை சூழ்ந்திருக்கும் சமூக நாற்றங்களை தாண்டி அவை நம் நாசிகளுக்குள் நுழைந்து நுரையீரலை தின்னப்போவதை உணரும் நிலையில் நாமிருக்கிறோமா என்ன?


கொசுறு:  



இப்போது ஆப்பிரிக்க கண்டத்தில் கோலாகலமாய் கானகங்கள் எரிய, கோடைக்காலம் தொடங்கியாச்சி. வரும் மாதங்களில் இயற்கையாகவும் செயற்கையாகவும் ஈக்வடோரியல் கோடு முழுவதும் பற்றியெரியப்போகும் கானகங்களில் வாழும் உயிர்கள் எந்த கப்பல் / விமானம் / ஆட்டோமொபைல் / ஸ்பேஸ் ஷட்டில் பிடித்து தப்பிக்க இயலுமென்று நினைக்கிறீர்கள்?


வீட்டுக்கு வெளியே குப்பைகளை கொட்டி நாம் பற்றவைக்கும் ஒவ்வொரு தீக்குச்சியும் நிச்சயமாய் எங்கோ ஒரு காட்டை எரிக்கும்.



(PC: Top: TheGuatdian.com

Middle: NASA

Bottom: Deccan Herald)


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...