முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குளிர் இரவின் வெம்மை...




நினைவுக்குமிழ்கள்... நிஜ நீர்க்குமிழ்கள் போலவே...


அடிமட்டத்திலிருந்து எப்போதாவது குபுக்கென மேலெழுந்து எங்காவது வெளிப்படும். அதுவாய் மெல்லக்கரைந்து உடையும், இன்னொன்று முளைக்கும்...


இந்த இரவில் சற்று நேரம் முன் பாலு ஒரு இசை மேடையில் ஓ ப்ரியா ப்ரியா மீ ப்ரியா ப்ரியா  என தெலுங்கில் உருக, பாடகி ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா எனத்தொடர, இருமொழிப்பாடல்...


இசையின் மென்சிறகுகளை இறுகப்பற்றி, பாடல் முடிந்தபின்னும் இறங்க மனமின்றி மனம் தளும்ப, அந்த தளும்பளில் இருந்து உருளத்தொடங்கின என் குமிழ்கள் ஒவ்வொன்றாய்...


குன்னூரில் நாயகனின் குளிர் வீட்டுக்கதவு திறக்கையில் கீழ் இடைவெளியில் கசிந்து உள் பரவும் பனி...


ஓ பாப்பா லாலி என காதலியை தொடையில் தாங்கி தாலாட்டுப்பாடும் மனோ...


மலை மார்க்கெட்டில் கையில் கேரட் கொத்தோடு பாட்டியின் பார்வையிலிருந்து நழுவியோடும் நாயகி...


இறுதியாண்டு மருத்துவ மாணவியின் முகத்தில் பொட்டு வைத்த வட்ட நிலவாய் அரையிருளில் ஓடும் காதல் கலந்த ரசனை...


நரைமுடியில் கோர்த்த மணிகளை பெருங்காதலோடு தடவும் வாத்துக்காரியின் விரல்கள்...


நிலவொளியில் கடற்கரையில் கிளிஞ்சல்களில் உலையரிசி...


வயல்வெளியில் பல கனவை விதைக்கிறதே சிறுபறவை...


சமுதாயக்கேள்விகள் கெடுபிடிகள் பொறுக்காமல் தப்பியோடும் இளஞ்சோடி அமர்ந்திருந்த ரயில் இருக்கையின் எதிர் இருக்கையில் எதிர்பாராத நல்லாசிரியரின் கவலைப்பார்வை...


ரசித்தேன் அழகை ரசிக்கும் மனதை...


நன்றியுணர்வின் உச்சத்தில் சட்டென கரம் பற்றி நடனக்கலைஞன் பதிக்கும் ஒற்றை முத்தம்...


இது மௌனமான நேரம் என பாடல் அல்லாத, பாடலுக்கு முன் நாயகியின் குரல் வாசிப்பின் வழி நம்முள் இறங்கும் அந்த அடர்ந்த காதல் இரவின் குளிர் வெம்மை...


பித்தனான சித்தன் வாங்கித்தந்த சேலையை கண்டு நெகிழும் கஞ்சாக்காரியின் கலங்கிய விழிகள்...


பெருமரத்தின் வேரணைப்பில் பூமியின் குழந்தையாய் கருவறை உரக்கம் கொள்ளும் ஒற்றைக்காதலனின் ஒளிப்படம்...


இருக்கையில் இருக்கும் மனைவியின் தரைப்பாதங்களை தன்னுணர்வின்றியே பஞ்சு போல் கரங்களுக்குள் காதல் தகப்பன் தரையமர்ந்து பொத்திவைக்கும் நொடியை கண்டு பரவசமுறும் மகனின் கண்கள்...


பார்த்த விழி பார்த்தபடி கைகளில் கிடைத்த ஸ்தனங்களோடு நின்ற நிலையிலேயே நிலை மறந்து பரவசமாய் குதிக்கும் அபிராமி பக்தன்...


கண்மணீ அன்போடு துயில்கொள்ள, சேர்ந்து பாடியவனும் துயில் கொள்ள, பின்னிரவின் குகையிருள் மெழுகொளியில் ரீங்காரமிட்டு இசையோடு மறையும் தேன் பூச்சி...


நினைவுக்குமிழ்களில் மிதந்தபடி உறங்கச்செல்லும் நான்...


இதைப்படித்தபின் உங்களுக்கான குமிழ்களில் பயணம் தொடங்கும் நீங்கள்...


இனிது இனிது வாழ்தல் இனிது.


அதனினும் இனிது நேசம் பகிர்தல்.


என்ன தவம் செய்தோமோ?!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்