முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இதுதான்டா வாழ்க்கை!

 


இதுவல்லவா வாழ்வு!


கண்களை மூடி கற்பனை செய்து பாருங்கள்; மெல்ல தாலாட்டும் நதியில் சில படகு வீடுகள், பத்து இருபது மனிதர்கள், நினைத்தபோது நதியில் பயணித்து இரவில் / பகலில் மீன் பிடித்து என வாழ்வு. நதிக்கரையில் இந்த மனிதர்களை தேடி வந்து மீன் வாங்கும் மக்கள் கூட்டம், படகு வீடுகளின் குழந்தைகள் படிக்க அருகில் சிற்றூரில் பள்ளிக்கூடம்... 


நதிப்படகே வாழ்விடம்!


இருபது வருடங்களாக இப்படி ஒரு மேலான வாழ்வை நம் நாட்டில் சிலர் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்!


சமீபத்தில் அரசு இவர்களுக்கு ரேஷன் அட்டைகளும் தந்து கௌரவப்படுத்தியுள்ளது!!


ஆந்திரா, ஒரிசா, சட்டீஷ்கர் மாநிலங்களின் எல்லைகள் சந்திக்கும் நிலப்பரப்பில் மூன்று மாநிலங்களையும் நனைத்துச்செல்லும் சபரி நதியில் இவர்கள் வாழ்கின்றார்கள். 


(சபரி, கோதாவரியின் கிளை நதி)



உழைப்பால் இவர்கள் மீனவர்கள். 


'நமக்கெதற்கு நிலத்தில் வீடு?' என இவர்களில் மூத்தவர், குடம் வெங்கடேஸ்வர்லு, ஒரு நாள் சிந்தித்ததன் விளைவு இது.


ஆண்களும் பெண்களும் தேவைக்கு மீன் பிடித்து விற்று, இவர்களது குழந்தைகள் வளர்ந்து பள்ளிக்கல்வி கற்று... இப்போது அடுத்த தலைமுறையில் ஒரு திருமணமும் நிகழ்ந்திருக்கிறது!


'இங்கு எங்களுக்குத்தேவையான எல்லாமும் கிடைக்கிறது; நீர், மீன்கள், குடும்பம், மற்றும் எங்களது மீன்களுக்கான சந்தை. கல்விக்கூடமும் அருகில், வாழ்க்கைச்செலவோ மிகக்குறைவு'


என்ன ஒரு ஆழ்ந்த, தெளிவான, எளிதான, மேன்மையான சிந்தனை!


இதை தாண்டி வேறென்ன வேண்டும் இயற்கையோடு ஒன்றி நலமாய் மகிழ்வாய் வாழ?!

இவற்றை தாண்டியும் நாமெல்லாம் வாயில் நுரைதள்ள "வாழ்நாள் ஓட்ட"மாக ஓடிக்கொண்டிருப்பது எவற்றை நோக்கி?!

இப்படி இவர்களுக்கு அறிமுகம் இல்லாத இடத்தில் குடிஅமர்ந்த இவர்களுக்கு பாதுகாப்பு பற்றிய அச்சமே இல்லையா என்று கேட்டபோது, 'அரசு எங்களுக்கு பாதுகாப்பான வாழ்வுச்சூழலை வழங்குகிறது' என்று சொல்வார் என்றுதான் நினைத்தேன். ஆனால் வெங்கடேஸ்வர்லு சொன்னது என் மனக்குளத்தில் ஏதோ ஒரு பெருங்கல்லை எறிந்தது (கல் வட்டங்கள் இன்றும் நின்றபாடில்லை!).


"எங்களுக்கு இங்கு எந்த இன்னல்களும் வந்ததில்லை. ஏனெனில் எங்களுக்கு உதவ இங்குள்ள "கோயா"க்கள் (பூர்வகுடியினர்) எப்போதும் தயாராக இருக்கிறார்களே!'


கோயாக்கள் - ஆதியில் இம்மூன்று மாநில கானகங்களின் காவலர்கள், பின்னாளில் மேட்டுக்குடிகளின் படைகளில்  ஆயுதமேந்திய சேவகர்கள், இன்னாளில் மழைப்பயிர்களான சிறு தானியங்களையும் கிழங்கு வகைகளையும் தேவைக்கு உற்பத்தி செய்து தமக்கான தனி மொழி, தனி வாழ்வியலோடு இன்றும் இந்த மூன்று மாநில கானகங்களில் வாழ்பவர்கள். பூமியின் ஆதிகுடிகளாக கருதப்படும் கோண்டு இனத்தின் உறவு வழி வந்தவர்கள்...'!



இவர்களைப்பற்றி ஒரு விரிவான தனிப்பதிவு, விரைவில் :-)

நம் வாழ்வு என்னவோ சக மனிதர்களை சார்ந்தே நீள்கிறது அன்றும், இன்றும், என்றும்; எங்கோ இருக்கும் அரசை விட கூப்பிடு தொலைவில் இருக்கும் மனிதர்கள்தானே இதை சாத்தியமாக்குகிறார்கள்!

(Top image: Courtesy thehindu.com)


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்