முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வெற்றி வேல் முருகனுக்கு மேட்டுக்குடி அரோகரா!

 


மேட்டுக்குடி


ஆதியில் நீரின் ஆற்றலுக்கு அஞ்சி சமதள பரப்புவாசிகள் மேலேறி மேலேறி மலையடிவாரம் அடைந்து... மலைமேலிருந்தும் விழும் நீருக்கு அஞ்சி மலையேறத்தொடங்க, மலையுச்சிதான் நீராபத்து இல்லாத பகுதி என தங்கிப்போய்விட்டார்களாம்.


அவர்களால் ஏற முடிந்த மலை உச்சிகளில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை மரம் செடி கொடி பூ காய் கனி விலங்குகள் பறவைகள் என குலுங்கியதாம்.


நல்ல இடம் இந்த இடம் என தங்கி வேட்டையாடியும் உணவு பறித்தும் உண்டு மகிழ்ந்து சந்ததி பெருக்க, ஒருநாள் உண்ணக்கிடைத்தது அனைவர்க்கும் போதவில்லையாம்.


பகிர்ந்து உண்டு, பின் நிரம்பாத வயிறோடு உறங்கச்சென்று உறக்கம் தொலைத்த இரவுகளின் தீராத சிந்தனையில் வேளாண்மை தோன்றியதாம்.


மழையை நம்பிய வேளாண்மையில் அதிக விளைச்சல் அதிக ஆற்றல் குறுகிய காலத்தில், குறைவான நீர்த்தேவையில் (பெய்த மழை சரிவில் இறங்கிப்போக, ஈரப்பதத்திலேயே வளரும்) சிறு தானியங்கள் விருப்பப்பயிராச்சாம்.


பயிர் வளர்ந்து கதிர் பிடிக்கும் காலத்தில் அதை உண்ண கூட்டம் கூட்டமாய் வந்த உயிரிகளை காணும் ஆர்வம் உந்த,  மலைக்காட்டு பறவைகள் தாழப்பறந்து புழு பூச்சியோடு அவை அமர்ந்த கதிரையும் உண்ண, கதிர்சுவை பிடித்துப்போய் கூட்டமாய் தரையிறங்கி கொத்தித்தின்ன, தானியங்கள் விதைத்துக்காத்தவர்கள் மீண்டும் பறவைகளுக்கு எஞ்சியதை பகிர்ந்து உண்டு நிரம்பாத வயிறோடு உறங்கச்சென்று உறக்கம் தொலைத்த இரவுகளின் தீராத சிந்தனையில் பரண் பாதுகாவல் தோன்றியதாம்.


நிலம்தோறும் பரண் அமைத்து காவல் காக்க, தூரப்பறவைகளை இலக்கு தவறாமல் விரைந்து தாக்கி துரத்த கவண்பொறி செய்தனராம்.


இப்படி ஒரு பரணில் திணைக்காவலுக்கு வந்த ஒரு வேடுவ கன்னியிடம் மனதைப்பறிகொடுத்த வேடன் ஒருவன் அங்கு வந்து அவளை 'கண்டு' செல்ல... "முருகா! எல்லாம் உன் செயல்" என வேடுவர் கூட்டம் அவர்களை மணம் செய்வித்து மகிழ்ந்ததாம்.


சரி, தலைப்புக்கு வருவோம்.


சந்ததி பெருகப்பெருக, மலையுச்சி தாண்டி வான் வெளியில் வாழிடம் இல்லையென வேடுவ வேளாண் குடும்பங்கள் சரிவில் இறங்கி குடும்பம் பெருக்க, குடியிருப்பு பெரிதாச்சாம், ஊரொன்று உருவாச்சாம்.


குடும்பமெண்டால் பிணக்குகள் வரும்தானே! தீராப்பிணக்கை தீர்த்துவைக்க ஊர்த்தலைமை, சிலரை இன்னும் சரிவில் இறங்கி தனித்து 'இருக்க' தீர்ப்பெழுத, தனித்துவிடப்பட்டோர் தரை நோக்கி சரிந்து சரிவெங்கும் ஊர்பெருக்க, ஒரு காலத்தில் மலையடிவாரம் வரை ஊர்கள் பெருகியதாம்.


பின்னொரு நாள் கடும் மழையில் மலையிறங்கிய நீர் தாக்க, தடுமாறிய அடிவார ஊர்கள் மேடு நோக்கி நகரத்தொடங்க, தொடங்கியதாம் எல்லைப்பிணக்கு!


மேட்டில் குடியிருந்தோர் சரிவேறிய தம் பழைய பங்காளிகளை, தாம் ஒதுக்கி வைத்தவர்கள் குடும்பங்களை மலை ஏற விடாமல் தடுக்க, அன்று தொடங்கிய "மேட்டுக்குடி" "தாழ்குடி" பிணக்கு பின்னாட்களில் பல வடிவங்களில் மாறிப்போனாலும் இன்று வரை மாறாமல் தொடர்கிறதாம்!


நம் உலகில் பாதுகாப்பின் தேவை, பசித்த வயிறின் தேவை இருக்கும்வரையில், அந்த தேவைகளை இட்டு நிரப்ப தடைகள் இருக்கும் வரையில், இந்தப்பிணக்கு தொடரத்தான் போகிறதாம்.


முருகா, இந்த பிணக்கை தீர்க்க யாராவது மேல் நிலத்திலிருந்து தாழ் நிலத்துக்கு தீர்வுக்காவடி சுமந்து வேல் யாத்திரை செய்வார்களா என எம் போன்ற பக்தர்களின் கனவிலாவது சொல்லப்பா...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்