முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தொலைந்த நாய்க்குட்டி

 


புயலுக்கு முன்னான பேரமைதி.


சட்டென இருண்ட மதிய வானம்.


இலையைக்கூட அசைக்காது உறைந்து நின்ற காற்று.


நடமாட்டமே இல்லாது நின்ற சாலை.


இவையனைத்தையும் கலைத்துப்போடும் விதமாய் எழுந்தது ஒரு நலிந்த குரல்; மெலிதான அழுகை, ஈனக்கூப்பாடு, பிரிவின் தவிப்பு, என்ன நிகழ்கிறது என புரியாத பேரச்சம்... இவை அனைத்தின் கலவையாய்.


பிறந்து சில வாரங்களே ஆன நாய்க்குட்டி ஒன்று, காணாமல் போன தாயைத்தேடி நிலைகொள்ளாது அங்குமிங்கும் கால்களும் கண்களும் அலைய, சாலையின் எல்லைகள் பிரிவுகள் பிரிவுகளின் எல்லைகள் என ஓடித்திரும்பி மீண்டும் ஓடி... இத்தனையும் நிகழ்ந்தது என் கண் முன்னே சில நொடிகளில்.


'என்ன கொடுமை இது? தாயைத்தொலைத்த குழந்தை இப்படி தவிக்கிறதே! எங்கிருந்தாவது அவள் ஓடி வந்து குட்டியின் கண் எல்லைக்குள் நிழலாடமாட்டாளா?' என கலவையான நினைவுகளோடு, கவலையோடு சில நொடிகள் நின்று பார்த்தேன்.


'அழைக்கலாம்... உணவு / தண்ணீர் தரலாம். தந்தால் வேறெங்கும் செல்லாது இங்கேயே தங்கிவிடும். ஆணா பெண்ணா தெரியவில்லை. வீட்டில் ஒரு ஆண்குட்டி, பெண் குட்டி தேடத்தொடங்கும் வயதில். வாயிற்கதவு தாண்டி இதை உள்ளே அழைத்து இது பெண்குட்டியென்றால் சிக்கல்; சாலையில் தூக்கி "தெரிந்து கொள்ளலாம்" என்றால் தூக்கும் நொடியில் தாய் அங்கு வந்தால்? குழந்தைக்கு ஆபத்து என்று நம்மை தாக்கினால்? அப்படி எதுவும் நிகழாவிட்டாலும், "குழந்தைகளை வளர்ப்பதே பெரும்பாடு" என அவ்வப்போது சலிக்கும் மனைவி, நம் இருவரையும் வெளியே துரத்திவிட்டால்????' என அப்பப்பா, எத்தனை எத்தனை கேள்விகள் என் ஒற்றை மனதில்!


கண்ணிமைக்கும் நொடியில் இவை எதையும் சிந்திக்காத இளைஞனொருவன் தான் ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தை, சாலையில் நாய்க்குட்டி கண்டு வேகம் குறைத்து நிறுத்தி, சற்றும் யோசிக்காமல் பூப்பந்து போல நேசத்துடன் அள்ளிச்சென்ற அழகுக்காட்சி, 'சே! வாழ்வில் அறிவு அனுபவம் சேர்க்காமல், கேள்விகளையும் கவலைகளையும் சுமக்காமல் அந்த இளைஞன் போல அன்பின் வழி மட்டுமே வாழ்ந்து பார்த்திருக்கலாமோ?!' என ஏங்க வைத்தது.


அந்த நாய்க்குட்டிக்குழந்தை தன் குவிந்த வாயை வான் நோக்கி உயர்த்தி அழுதது போல ஒரு கேவல் என்னுள் எழ, அனுபவ அறிவு அதை அடக்கி, நின்ற இடத்திலிருந்த வாழ்வை நீட்டக்க என்னை உந்தித்தள்ள, அந்த நாய்க்குட்டி மட்டும் தங்கிப்போச்சு மனதில்.



இறை தேடும் மனம் ஒவ்வொன்றுமே அந்த நாய்க்குட்டிதானே!


(Images used here for illustration only. Copyright may lie with respective owners)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்