முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பரமன் கழுத்து பாம்பும் மொனார்ச் வண்ணத்தியும்!

 


பரமனின் சிரிப்பு மாறவில்லை துளியும்!


பரமன் கழுத்துப்பாம்பும் அது சீண்டிய கருடனும் அருகருகே கிடந்தன.


கருடன் அலகினால் கீறிய பாம்பும், பாம்பு தீண்டிய கருடனும் குற்றுயிரும் குலையுயிருமாய் அருகருகே கிடக்கையில் நிகழ்கிறது இந்த உரையாடல்:


'சௌக்கியமானுதான கேட்டேன்?!'


"பரமன் கழுத்து தந்த பாதுகாப்புல கிண்டலால்ல கேட்ட!"


'பேச்சு பேச்சா இருக்கையில ஏன் பாய்ஞ்ச?'


"அவருக்கும் நியாயம் தெரியும்னு நம்பினேன். அதான் பாய்ஞ்சேன்..."


'என்ன ஆச்சு பாத்தியா...?'


"என்ன ஆவப்போவுது? பரமன சேரப்போறோம்..."


'சரிதான்'.


இரண்டும் இறந்து போயின.


சீண்டுதலும் சீறுதலும் - இதில் பரமனின் பொறுப்பு என்ன?!


பாம்பின் வேலையை அது பார்க்க, கருடனின் வேலையை அது பார்க்க, அதனதன் வாழ்க்கை அதனதின் பாட்டில் போய்க்கொண்டிருந்திருக்கும் அல்லவா?


பாம்பை தின்பதற்காகவே கருடன் என்று பரமனும் விதித்ததில்லை.


இரையொன்று கண்டால் இறங்கித்தாக்கும் கருடனுக்கு பாம்பென்ன பழுதென்ன? உணவொன்றுதானே அதன் குறி?


தர்க்க நியாயங்கள் வாழ்க்கைக்குதவாது என்பதாகவே 'யாரும் இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்யமே!' என்றாகி இருந்தது.


பாம்புக்கென்ன வேலை பரமனின் கழுத்தில்?


உவமான உவமேயங்கள் பின் நாம் உணவு மறந்து ஓடிக்கொண்டிருப்பதை சற்றே நிறுத்தி, இதை சிந்திப்போமே...


உயிரனைத்தையும் நேசிக்கச்சொன்ன வாழ்வியல், கடவுள் வழி இதை போதிக்க வாகனமாகவும் அணிகலனாகவும் அஸ்திரமாகவும் நிழற்குடையாகவும் கொடியாகவும் அவற்றை உள்ளிழுத்து, இருக்குமிடத்தில் அவையெல்லாம் இருக்கும்வரை சௌக்கியமாய் இருப்பதுபோலே நாமும் இருக்குமிடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌக்யமே என்பதை 'இருந்துகாட்டிய'  இறைகளிங்கு ஏராளம்.


பஞ்சபூதங்களே கடவுள்கள் என்று தொடங்கி,  காற்றின் கடவுள், நீரின் கடவுள், நிலத்தின் கடவுள், நெருப்பின் கடவுள், ஆகாயத்தின் கடவுள் என மருவி, பின் 'என் கடவுள் வேறு உன் கடவுள் வேறு!' எனப்பிரிந்து, பிரித்து... இருந்த இடம் விட்டு வெகு தொலைவு வலசை தேடி நகர்ந்து, வந்து சேர்ந்த இடம் எந்த இடம் என்று தெரியாமல் திருவிழாவில் தொலைந்த குழந்தைகளாய் மனித இனம் மட்டும் இன்று வாழ்வை தொலைத்து உக்கிரமாய் நிற்கையில்... ஏனைய உயிர் எதுவும் இடம் விட்டு, இனம் விட்டு தொலைதூரம் போய் தடம் மறந்து தொலைந்துபோனதாய் வரலாறில்லை.


மொனார்ச் என்கிற வண்ணத்தி இனம், முதல் தலைமுறை வலசை செல்ல கிளம்பி, சேர்வதென்னவோ நான்காம் தலைமுறை மட்டுமே (மூன்று தலைமுறைகள் பயண காலத்திலேயே மரித்துப்போகும். நான்காம் தலைமுறைதான் சேருமிடம் சேரும்).


இவற்றை தடம் மாறாது வழி நடத்தும் இறை நம்மை மட்டும் கைவிட்டுவிடுமோ என்ற அச்சம் ஏன்? 'தலையிலிருந்து நான், மார்பிலிருந்து நீ...' என கால்வரை விகிதாசாரம் ஏன்? 


இத்தனை இடைவெளியில் இறையை தொலைத்த நாம் ஏன் தொலைந்துபோனோம் இன்று?


இன்னும் புரியாதது போலவே மேலும் மேலும் தொலைந்துகொண்டிருக்கிறோம்.


பரமனின் சிரிப்பு மாறவில்லை துளியும்!




வலசை: 'மேலான' இடம் தேடி இடம் பெயர்தல் :-)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்